தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் ஆதரவு

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மூலம் திறமையான மற்றும் பயனுள்ள திட்ட அமலாக்கத்திற்கான தரவு சேகரிப்பு ஆய்வறிக்கையை அதன் தலைவர் சனத் நிசாந்த, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதி டெட்சுயா யமடாவிடம் அண்மையில் கையளித்தார்.

நாட்டில் 3.5 மில்லியன் (இலங்கை சனத்தொகையில் 15%) மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதுடன் துப்பரவேற்பாட்டு செயற்பாடுகளுக்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் கடந்த 30 வருடங்களில் 1.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கி பங்களிப்புச் செய்துள்ளது.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் திட்ட அமுலாக்கத்தில், வளமான அனுபவங்களை பயன்படுத்தி, செயலாக்கத்திறனை மேலும் மேம்படுத்தும் நோக்கில் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் கூட்டிணைந்த கணக்கெடுப்பொன்றை நடாத்தியிருந்தது.

இலங்கையில் நீர் வழங்கல் மற்றும் துப்பரவேற்பாட்டு துறைகளின் அபிவிருத்திக்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் மற்றும் ஜப்பான் அரசாங்கம் வழங்கிய உதவிகளை சபையின் தலைவர் சனத் நிசாந்த பாராட்டினார்.

இலத்திரனியல் ஆவண முகாமைத்துவ அமைப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பல்வேறு செயற்பாடுகளின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் ஆதரவளிக்குமென நம்புவதாக சபையின் பொது முகாமையாளர் கலாநிதி வசந்தா இலங்கசிங்க தெரிவித்தார்.

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் அறிவு மற்றும் நிபுணத்துவத்தின் அடிப்படையில் பரிந்துரைகளை செயற்படுத்துவது திட்ட முகாமைத்துவ திறனை மேலும் மேம்படுத்தும். தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையை திறமையான பயன்பாட்டு நிறுவனமாக மாற்றுவதற்கு ஆதரவளிப்பதில் தாங்கள் மகிழ்ச்சியடைவதாக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதி டெட்சுயா யமடா தெரிவித்தார்.