தடைப் பட்டியலில் உள்ளவர்களுடன் தொடர்புகளைப் பேணுவோர் சிறையில் அடைக்கப்படுவர் – சரத் வீரசேகர எச்சரிக்கை

அரசு வெளியிட்ட தடைப் பட்டியலில் உள்ளவர்களுடன் தொடர்புகளைப் பேணுவோர் சிறையில் அடைக்கப்படுவார்கள்” என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையிலுள்ள பலரது பெயர்களும் கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள். அத்துடன் அவர்களுடன் தொடர்புகளைப் பேணுபவர்களும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசு அண்மையில் தடை செய்யப்பட்ட தனிநபர்கள் மற்றும் அமைப்புக்களின் பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் தடை செய்யப்பட்ட நபர்களாக அறிவிக்கப்பட்ட சிலர் இலங்கையில் வசித்து வருவதாக கூறப்படுகின்றது.

இவ்வாறானதொரு நிலையில் அவர்களை இலங்கை அரசு நாடு கடத்துமா என்று அமைச்சர் சரத் வீரசேகரவிடம் ஊடகங்கள் கேட்டபோது,

“அரசு வெளியிட்ட தடைப் பட்டியலில் உள்ளவர்கள் இலங்கையில் இருந்தால் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். அவர்களுடன் தொடர்புகளைப் பேணுவோரும் சிறையில் அடைக்கப்படுவார்கள்” என்று பதிலளித்துள்ளார்.