வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோருக்கு வல்வெட்டித்துறையில் சிலை அமைப்பதற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.
குட்டிமணி, தங்கத்துரை ஆகியோருக்கு சிலை அமைப்பதற்கு எதிராக வல்வெட்டித்துறை காவல்துறையினரால் அதன் ஏற்பாட்டாளரும், வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உப தவிசாளருமான கந்தசாமி சதீஷ் என்பவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
குறித்த வழக்கில் சிலை அமைப்பதற்கான தற்காலிக தடை உத்தரவு இன்று (05) வரை அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது அது நீக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 22ஆம் திகதி அன்று வல்வெட்டித்துறை காவல்துறையினரால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்கானது நேற்று (04) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வழக்கின் மேலும் ஆதாரங்களை சமர்ப்பிக்க 14 நாட்கள் காலம் கோரப்பட்டது.
எனினும் 106 சட்ட பிரிவின்கீழ் 14 நாட்களுக்கு மேல் தடை உத்தரவு வழங்க முடியாது என்ற அடிப்படையில் இன்றைய தினம் (05) வரை காவல்துறையினருக்கு உரிய எதிராளிக்கு எதிரான உரிய ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் எந்தவித போதுமான ஆதாரங்களோ ஆவணங்களோ சமர்ப்பிக்கப்படாத நிலையில் இன்றைய தினம் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்த தற்காலிக தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



