சீன சார்பு அடையாளம் இலங்கைக்குத் தேவையில்லை – எச்சரிக்கின்றார் ரணில்

“ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலங்களில் அனைத்து நாடுகளையும் முறையாக அணுகினோம். எந்தவொரு நாடும் இலங்கை தொடர்பில் சந்தேகக் கண்ணுடன் நோக்கும் நிலையை உருவாக்கவில்லை” என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் முக்கியமாகத் தெரிவித்ததாவது;

ஜப்பான் மற்றும் இந்தியா இலங்கையில் முன்னெடுத்த அபிவிருத்தித் திட்டங்களை சீனாவுக்கு வழங்கியமை தொடர்பில் அமெரிக்கா அதிருப்தியடைந்துள்ளதுடன் சந்தேக நோக்குடனுமே உள்ளது. இதனை அரசாங்கம் உணர்ந்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோவின் இலங்கை விஜயத்தின் போது சீனாவை விமர்சித்தது போன்று மனித உரிமைகள் தொடர்பில் நினைவூட்டினார். எனவே எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும் அது அந்நாட்டின் தேசிய கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தாது.

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலங்களில் அனைத்து நாடுகளையும் முறையாக அணுகினோம். சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுடன் எமது இராஜதந்திர தொடர்புகளும் அணுகுமுறைகளும் எந்தவொரு நாடும் இலங்கை குறித்து சந்தேகக் கண்ணுடன் நோக்கும் நிலையை உருவாக்கவில்லை.

ஆனால் ராஜபக்ஷர்களின் ஆட்சியில் சீன சார்பு என்று இலங்கை அநாவசியமாக அடையாளப்பட்டது. இதுவே இன்றைய நெருக்கடிகளுக்கும் காரணமாகியுள்ளது. எனவே அமெரிக்க இராஜாங்கச் செயலரின் விஜயத்தை அரசாங்கம் எளிதாக எடுத்துக்கொள்ளாது இராஜதந்திர ரீதியில் சிறப்பாக அணுகவேண்டும். குறிப்பாக எம்.சி.சி.ஒப்பந்தம் போன்ற விடயங்களில் அமெரிக்காவின் நிலைப்பாடு யார் ஆட்சிக்கு வந்தாலும் அங்கு மாறுபடாது.”