கொரோனா தடுப்பூசியை  சீரம் நிறுவனத்திடம் இருந்து பெற்றுக்கொள்ள ஐ.நா. ஒப்பந்தம்

இந்தியாவின் புனேவைச் சேர்ந்த  சீரம் நிறுவனத்திடம்,  110 கோடி கொரோனா தடுப்பு பூசியை   பெற ஐக்கிய நாடுகள் சபை, யுனிசெஃப்  ஒப்பந்தம் செய்துள்ளன.

மொத்தம் 110 கோடி தடுப்பூசி குப்பிகளை இந்நிறுவனம் தயாரித்து அளிக்கும் வகையிலும் நீண்ட கால அடிப்படையிலும் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இவை 100 நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதே போல்  அமெரிக்காவின் நோவாவாக்ஸ் நிறுவனத்துடனும் கொரோனா தடுப்பு ஊசி மருந்தை வாங்குவதற்கு ஒப்பந்தம்  செய்துள்ளதாக யுனிசெஃப் அமைப்பின் செயல் இயக்குநர் ஹென்ரிட்டா ஃபோர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “ஏழை நாடுகளுக்கும் தடுப்பு ஊசியை வழங்கும் வகையில் ஒரு தடுப்பு ஊசி மருந்து விலை 3 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.225) என்ற அளவில் வாங்க ஒப்பந்தம்  செய்யப்பட்டுள்ளது  இவை எந்தெந்த நாடுகளுக்கு எத்தனை குப்பிகள் அனுப்பப்படுகிறது என்ற விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

145 நாடுகளில் உள்ள சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பு ஊசி மருந்துகள் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தடுப்பு ஊசி போடும் விழிப்புணர்வை யுனிசெஃப் மேற்கொண்டுள்ளது. தடுப்பு ஊசி மருந்துகளை சேமித்து வைக்கும் குளிர்ப்பதன கிடங்கு வசதிகளை ஏற்படுத்திய பிறகு இந்த மருந்துகளை அனுப்புவது தொடர்பாக சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.