உயிர்த்த ஞாயிறு நாளை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுப்பு

ஏப்ரல் முதலாம் திகதி வரை தேவாலயங்கள் மற்றும்  தங்கும்/ உணவு விடுதிகள் உட்பட  சில முக்கிய  பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் கொழும்பில் உள்ள 3 தேவாலயங்கள், 3 ஆடம்பர விடுதிகள் ஆகியவற்றில் பயங்கரவாதிகள் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தினர். இதில் 258 பேர் கொல்லப்பட்டனர்.  500க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இந்நிலையில், உயிர்த்த ஞாயிறைக் கருத்தில் கொண்டு  சிறப்பு பாதுகாப்புத் திட்டம் செயற்படுத்தப்படுவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு உயிர்த்த ஞாயிறு தினம் ஏப்ரல் 4ஆம் திகதியாகும். இதேவேளை 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களின் இரண்டாம் ஆண்டு நிறைவும் நினைவு கூரப்படவுள்ளது.

இராணுவத் தலைமையகம் பாதுகாப்பு படைத்தளபதிகளுக்கு குறிப்பிட்ட மதிப்பீடுகளை மேற்கொள்ளவும் தேவையான பாதுகாப்புத் தேவைகளை அடையாளம் காண்பதற்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது என பிரிகேடியர் பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

பிரதான பாதுகாப்பு திட்டத்தை காவல்துறை செயற்படுத்தும் அதேநேரம் இராணுவம் தேவையான உதவிகளை வழங்கும் எனவும் உயிர்த்த ஞாயிறைக் கருத்தில் கொண்டு இராணுவத்தினரும் காவல்துறையினரும்  கூட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செயற்படுத்துவர் எனவும் அவர் கூறியுள்ளார்.