ஆபிரிக்க நாட்டில் இராணுவப்புரட்சி முறியடிக்கப்பட்டதாக தகவல்

தமது நாட்டில் மேற்கொள்ளப்படவிருந்த இராணுவப் புரட்சியை தமது படையினரும், புலனாய்வுத்துறையினரும் முறியடித்துள்ளதாக பேர்கினோ பசொ நாட்டின் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

கடந்த வருடமே இந்த நாட்டில் படைத்துறை புரட்சி மூலம் இராணுவ அதிகாரி கப்டன் இப்ராஹீம் தாகூர் ஆட்சியை கைப்பற்றியிருந்தார். அங்கு தற்போது மேலும் ஒரு இராணுவப்புரட்சி மேற்கொள்ளவிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டின் அரச அலுவலகங்கள், படைதளங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டதை தமது புலனாய்வுத்துறையினர் கடந்த புதன்கிழமை(27) கண்டறிந்ததால் அனர்த்தம் தவிர்ப்பட்டதாகவும், அதற்கு பொறுப்பானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் பலரை தேடி வருவதாகவும் அரச அதிகாரிகள் வியாழக்கிழமை(28) தெரிவித்துள்ளனர்.

அண்மைக்காலமாக ஆபரிக்க நாடுகளில் பல இராணுவப்புரட்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் பல நாடுகளில் மேற்குலகத்திற்கு ஆதரவான அரசுகள் அகற்றப்பட்டுள்ளன. அண்மையில் நைகரில் இடம்பெற்ற புரட்சியை தொடர்ந்து அங்கிருந்து பிரான்ஸ் தூதுவர் வெளியேறியுள்ளதுடன், பிரான்ஸ் நாட்டு படையினரும் வெளியேறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரஸ்யாவும், மேற்குலகமும் இந்த புரட்சிகளின் பின்னனியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.