சுகாதாரக் கட்டமைப்பின் முன்னேற்றங்களை மீளாய்வு செய்யவும், அதனை மேலும் வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்கவும் நாட்டிற்கு வருகை தந்திருந்த உலக சுகாதார ஸ்தாபணத்தின் சர்வதேச நிபுணர் குழுவினர், தமது பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.
அதற்கமைய இந்த மீளாய்வு அறிக்கையின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு, நாட்டின் சுகாதாரச் சேவை வலையமைப்பை அதிக வினைத்திறனுள்ள மற்றும் மக்கள் மையப்படுத்தப்பட்ட ஒரு கட்டமைப்பாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி வைத்தியர் ராஜேஷ் சம்பாஜிராவ் பாண்டவ் தலைமையிலான நிபுணர் குழுவினர், அண்மையில் சுகாதார அமைச்சில் வைத்து அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சரைச் சந்தித்து தமது மீளாய்வு முடிவுகளை உத்தியோகபூர்வமாக அறிவித்தனர். இதன்போது இலங்கையின் ஆரம்ப சுகாதாரப் பராமரிப்புச் சேவையின் தற்போதைய நிலை மற்றும் சவால்கள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.



