இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் உயிருக்கான பாதுகாப்பு மற்றும் உத்தரவாதங்களை இந்திய மற்றும் இலங்கை அரசுகள் உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும் என இந்திய தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பின் தலைவர் சே. நல்லதம்பி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மின்னஞ்சல் ஊடாக அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் அனுப்பி வைத்துள்ள கோரிக்கை மடலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இராமேஸ்வரம் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த பல மீனவர்கள் இலங்கையின் பல்வேறு சிறைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இது இலங்கை சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட விடயமாக இருப்பினும், அவர்கள் இந்திய மீனவர்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது.
ஜூலை மாதத்தில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறையில் 32 பேர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து கொழும்பு மெகசின், குருவிட்ட மற்றும் பள்ளன்சேனை ஆகிய சிறைச்சாலைகளிலும் அடுத்தடுத்து வன்முறைச் சம்பவங்கள் வெடித்துள்ளன. இச்சம்பவங்களில் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலரும் காயமடைந்துள்ளனர். இதனால் இலங்கைச் சிறைகளில் தற்போது பாதுகாப்பற்ற சூழ்நிலையே நிலவுகின்றது.
வன்முறைகள் இடம்பெறும் இச்சிறைச்சாலைகளில் இந்திய மீனவர்களும் அடைக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் தமிழக மீனவக் குடும்பங்களிடையே அதிகரித்துள்ளது. எனவே, இலங்கையிலுள்ள இந்திய மீனவர்களின் பாதுகாப்புத் தொடர்பில் எழுந்துள்ள நியாயமான அச்சத்தை இலங்கை மற்றும் இந்திய அரசுகள் புரிந்து கொண்டு, அவர்களின் பாதுகாப்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு தமிழக மீனவர்களின் பாதுகாப்பில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால், அதற்கான முழுப் பொறுப்பையும் இந்திய – இலங்கை அரசுகளே ஏற்க வேண்டும்.
இலங்கையிலுள்ள அனைத்துச் சிறைகளின் பாதுகாப்பையும் உடனடியாகப் பலப்படுத்துமாறு அந்நாட்டுச் சிறைச்சாலைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார். இந்நிலையில், நேற்று கடல் காற்றின் வேகம் காரணமாகக் கரை ஒதுங்கிய 11 தமிழக மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுபோன்று இலங்கையின் பல்வேறு சிறைகளிலும் இந்திய மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.



