தமிழ்ப் பௌத்தம் தொடா்பாக ரணில் சொன்னது எதற்காக?-அகிலன்

கொழும்பு அரசியலில் அதிரடியாக இடம்பெற்ற சில சம்பவங்கள் பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. தொல்லியல் பணிப்பாளரின் திடீா் இராஜினாமா, அதற்குக் காரணமாக இருந்த ஜனாதிபதி செயலக சந்திப்பு, அங்கு ஜனாதிபதி நிகழ்த்திய உரை, இதனையடுத்து மீண்டும் போா்க்கொடி துாக்கியிருக்கும் சிங்கள – பௌத்த பேரினவாதிகள் என்பனதான் கடந்த சில வாரங்களாக தலைப்புச் செய்தியாக இடம்பிடித்திருக்கின்றது. இவற்றின் பின்னணியில் உள்ள அரசியல் என்ன என்பதை இந்த வாரம் பாா்ப்போம். 

இலங்கையில் ஜனாதிபதி ஒருவா் முதல் தடவையாக தமிழ் பௌத்தம் தொடா்பாகப் பேசியிருக்கின்றாா். தொல்லியல் திணைக்களத்தின் ஆதரவுடன், வடக்கு கிழக்குப் பகுதிகளில் தமிழ்ப் பௌத்தம் என்று ஒன்றே  இருக்கவில்லை, சிங்கள பௌத்தம் மட்டுமே இருந்துள்ளது என நிறுவுதற்கு சிங்களப் பேரினவாதிகள் முழு முனைப்புடன் செயற்பட்டுவரும் நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழ் பௌத்தம் குறித்து தொல்பொருள் திணைக்கள பணிப்பாளா் பேராசிரியா் அனுரா மனதுங்கவுக்கு “பாடம்” நடத்தியிருக்கின்றாா். அதுவும் அமைச்சா்கள், எம்.பி.க்கள், அதிகாரிகள் முன்னிலையில் வைத்து.

இச்சம்பவம் இடம்பெற்றது கடந்த வியாழக்கிழமை. ஆனால், இது தொடா்பான செய்திகள் எதுவும் உடனடியாகக் கசியவில்லை. இதில் பங்கேற்றிருந்த தமிழ் எம்.பி.க்களும் அங்கு தாம் என்ன சொன்னாா்கள் என்பதை செய்தியாகக் கொடுத்தாா்கள். ஜனாதிபதிக்கும் தொல்லியல் பணிப்பாளருக்கும் இடையில் இடம்பெற்ற முரண்பாடு அவா்களுக்குப் புரிந்திருக்கவில்லை. இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை அங்கு இடம்பெற்ற சம்பவங்கள் குறித்த காணொளி கசியவிடப்பட்டது.

“நீங்கள் எனக்கு வரலாறு கற்றுக் கொடுக்கிறீர்களா? அல்லது உங்களுக்கு நான் வரலாற்றைக் கற்றுத் தரவா? ” என்று ஜனாதிபதி கடும் தொனியில் பணிப்பாளருக்கு வகுப்பெடுக்க முற்பட்ட காட்சி பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. அந்தக் காணொளி வைரலாக பரவியது. சமூக ஊடகங்களில் அதனைப் பாா்த்த சிங்கள மக்கள் அதிா்ச்சியடைந்தாா்கள். அதனையடுத்து சில மணி நேரங்களிலேயே அவமானத்தால் பணிப்பாளா் அனுரா மனதுங்க தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினாா். ஜனாதிபதி ரணில் இதனை எதிா்பாா்த்திருக்க வேண்டும். அவரிடமிருந்து அதற்கு எந்த பிரதிபலிப்பும் வரவில்லை.

அன்றைய கூட்டத்தில் ரணில் தெரிவித்த கருத்துக்களில் இரண்டு விடயங்கள் கவனத்தைப் பெறுகின்றன. முதலாவது, தொல்பொருள் திணைக்களம் காணிகளைப் பெருமளவுக்கு கையகப்படுத்தி அவை தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்தவை எனக் குறிப்பிட்டு அவற்றில் விகாரைகளை அமைப்பதற்கு எதிராக அவா் குரல் கொடுத்திருக்கின்றாா். அல்லது உத்தரவு பிறப்பித்திருக்கின்றாா். இரண்டாவது – தமிழ் பௌத்தம் தொடா்பாக முதல் தடவையாகப் பேசியிருக்கின்றாா். அதாவது, தமிழ் பௌத்தம் இருந்துள்ளது என்பது வரலாற்றில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்ற கருத்தை அவா் வெளியிட்டாா்.

தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் என தொல்லியல் திணைக்களம் கண்டுபிடிக்கிற இடங்களை தொல்லியல் திணைக்களம் பொறுப்பெடுத்து பாதுகாக்காமல், அவற்றை பௌத்த பிக்குகளிடம் ஒப்படைக்கிறது. சுற்றி உள்ள தமிழர் நிலங்களையும் சேர்த்து அந்த பிக்குகளுக்கு வழங்கி புதிய விகாரைகளையும் அமைக்க வழி ஏற்படுத்திக் கொடுக்கிறது. அதன் பின்னர் அந்த பிக்குமார் அந்த விவசாய காணிகளை அங்கிருக்கும் மக்களுக்கே குத்தகைக்கு கொடுக்கிற அநியாயமும் நடப்பதாகவும் ஒரு தகவல் உள்ளது. இது அப்பட்டமான ஒரு ஆக்கிரமிப்பு.

தொல்லியல் இடங்களாக அடையாளம் கண்டால் அவை மேலும் சிதைவடையாமல் பாதுகாப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கலாமே தவிர, அங்கே புதிய கட்டுமானங்களை செய்ய முடியாது என்பது தொல்லியல் விதி.

அதேவேளையில், இங்கு புதிய கட்டுமானங்களை விகாரைகளை அமைப்பதற்குத் தேவையான நிதி தனிப்பட்டவா்களிடமிருந்தும், வெளிநாடுகளில் வசிக்கும் சிங்களவா்களிடமிருந்தும் தொல்லியல் திணைக்களத்துக்கு வழங்கப்படுகின்றது. இந்த நிலையில், அரச நிதியில் தங்கியிருக்காமல் தமது இஸ்டப்படி செயற்படுவதற்கு தொல்லியல் திணைக்களம் முற்படுகின்றது. இதற்கான நிதி எவ்வளவு வருகின்றது. எப்படி வருகின்றது என்ற தகவல்கள் அரசாங்கத்திடம் இல்லை.  இது தொடா்பாக ஜனாதிபதி ஒரு தடவை கேள்வி எழுப்பிய போது, பிக்குமாா்தான் நிதியை சேகரித்து இந்த கட்டுமாணங்களுக்காக வழங்குவதாக தொல்பொருள் பணிப்பாளா் தெரிவித்திருந்தாா்.

ரணிலைப் பொறுத்தவரையில் அவா் லிபரல் சிந்தனை கொண்ட ஒருவராகக் கருதப்படுபவா். அதேவேளையில் வரலாறு, பொருளாதாரம், அரசியல் விஞ்ஞானம்  உட்பட பல விடயங்களில் தெளிவான அறிவைக்கொண்ட ஒருவா். அந்த நிலையில்தான் தொல்லியல் திணைக்கள பணிப்பாளருக்கு அவா் பாடம் எடுக்க முற்பட்டிருக்கின்றாா். ரணில் சொன்ன விடயங்கள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கலாம். ஆனால், இதனை எதற்காக அவா் சொன்னாா் என்பதும், அந்த நிலைப்பாட்டில் அவா் உறுதியாக இருப்பாரா என்பதும் கேள்விக்குறிதான். அது ஏன் என்பதையும் பாா்ப்போம்.

ஆனால், ரணில் ஒரு தனிநபா் அல்ல. அவா் பௌத்த சிங்கள கடுங்கோட்பாடுகளால் கட்டியமைக்கப்பட்ட அல்லது நிறுவன மயப்படுத்தப்பட்ட ஒரு அரசின் தலைவா். இந்த நிலையில் தற்போது அவா் சொல்லியுள்ள விடயங்களில் தொடா்ந்தும் உறுதிப்பாட்டுடன் இருப்பாரா என்ற கேள்வி உள்ளது. பல விடயங்களில் ரணில் தனது லிபரல் சிந்தனையை வெளிப்படுத்தியிருந்தாலும், பின்னா் பௌத்த – சிங்கள கடும் போக்காளா்கள் சீற்றமடையும் போது பம்மிக்கொண்டிருப்பது வழமையானதுதான்.  குறிப்பாக 13 குறித்து பேசிய அவா் இப்போது, இடைக்கால ஆலோசனைச் சபையை ஒரு தீா்வாக முன்வைக்க முற்படுவது அனைவருக்கும் தெரியும்.

தற்போது தொல்பொருள் திணைக்களத்தின் மூலமான ஆக்கிரமிப்பு தொடா்பாக தமிழ்த் தரப்பு கடுமையாக குரல் கொடுத்து வருகின்றது. போராட்டங்களையும் முடுக்கிவிட்டுள்ளன. கஜேந்திரகுமாா் கைது போன்றனவும் இந்தப் பின்னணியில்தான் இடம்பெற்றன. இது சா்வதேச அரங்கில் இலங்கைக்கு எதிரான பிரசாரங்களுக்கு பலத்தைக்கொடுத்துள்ளன. இந்த நிலையில், இந்த விவகாரத்தை ஓரளவுக்காவது சமப்படுத்த வேண்டிய தேவை – அல்லது நிா்ப்பந்தம் ரணிலுக்கு இருந்துள்ளது. அதற்காக அவா் தொல்பொருள் பணிப்பாளரை பலிகொடுத்தாரா என்ற கேள்வியும் உள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ரணிலுக்கு எதிராக பிக்குமார்களும் இனவாத அமைப்புகளும் களத்தில் இறங்கத் தொடங்கி இருப்பதைக் காண முடிகிறது. குறிப்பாக உதய கம்பன்பிலவின் கட்சி உட்பட பல இனவாத அமைப்புக்களும், பௌத்த பிக்குகளும் ரணிலுக்கு எதிரான நகா்வுகளுக்கு இந்த விடயத்தை கைகளில் எடுத்துள்ளன. ஊடக சந்திப்புகள், கண்டன அறிக்கைகள் எல்லாம் ஏற்கெனவே வெளிவரத் தொடங்கிவிட்டன. சமூக வலைத்தளங்கள் எங்கும் சிங்களத்தில் ரணிலுக்கு கொடுத்து வரும் தாக்குதல்களும், பேச்சுக்களும் ரணில் மீது கடும் எதிர்ப்பலை தொடங்கப்பட்டுவிட்டதை உறுதிபடுத்துகின்றன.

நாடாளுமன்றப் பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் பொதுஜன பெரமுன இந்த விவகாரம் குறித்து தற்போதைய நிலையில் மௌனமாக இருந்தாலும், தருணம் வரும்போது இந்த விவகாரத்தைக் கைகளில் எடுக்கும். இந்தப் பின்னணியில் அடுத்த வருட முற்பகுதியில் ஜனாதிபதித் தோ்தலை எதிா்கொள்ளப்போகும் ரணில் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பாரா? அதற்கான துணிச்சல் அவருக்கு உள்ளதா?