பொதுவிவாதத்திற்கு சுமந்திரன் தயாரானால் பதிலளிக்க நாங்கள் தயார்-காணமலாக்கப்பட்ட உறவுகள் சங்க செயலாளர்

பதிலளிக்க நாங்கள் தயார்

பொதுவிவாதத்திற்கு சுமந்திரன் தயாரானால் பதிலளிக்க நாங்கள் தயார் என  காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்தார்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் இன்று ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தியிருந்தனர்.

இந்நிலையில்,  “ஊடக சந்திப்பின் போது உங்களுடைய நோக்கத்திலிருந்து மாறி, தொடர்ச்சியாக நீங்கள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மீது குற்றம் சுமத்தி வருகிறீர்கள். அதற்கான காரணத்தை கூறமுடியுமா?” என ஊடகவியலாளரால் வினவப்பட்ட போது,  பொதுவிவாதத்திற்கு சுமந்திரன் தயாரானால் பதிலளிக்க நாங்கள் தயார்” என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“நாங்கள் எந்த அரசியல் கட்சியிலோ அல்லது அரசியல்வாதி மீதோ குற்றம் சுமத்தவில்லை. 2015ஆம் ஆண்டு எங்கள் போராட்ட காலத்தில் வவுனியா வன்னியன் விடுதியில் ஒரு சந்திப்பின் போது,  தேர்தலுக்கு பின்னர் காணமலாக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகளின் பிரச்சினைகளை தான் முன்னின்று தீர்ப்பதாக சம்பந்தன் ஐயா கூறியிருந்தார்.

அதற்கு பின்னர் சம்பந்தன் ஐயா அரசோடு இணைந்து செயற்பட்ட போது அரசியல் கைதி, காணமலாக்கப்பட்டவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கான சாவி தன்னிடமில்லை என கூறியிருந்தார். அந்த அடிப்படையில் மக்கள் ஓர் சிறிய அமைப்புக்களாக உருவாகி சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோம்.

இந்த போராட்டத்தின்  நான்காம் நாள், இலங்கையின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ருவான்விஜயரத்ன, காணாமல்  ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பது, அரசியல் கைதிகளுக்கான விடுதலை , பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குதல் போன்றவற்றிற்கு தான் தீர்வினை பெற்றுதருவதாக அலரிமாளிகை உயர்மட்ட சந்திப்புக்கு அழைத்திருந்தார். அங்கு உயர்மட்ட அதிகாரிகள் பலர் வந்திருந்திருந்தனர். அதில் அழையா விருந்தாழியாக சுமந்திரனும் வந்திருந்தார்.

இதன் போது “காணமலாக்கப்பட்டவர்களின் பிரச்சினை தொடர்பாக தன்னுடன் தான் கதைக்க வேண்டும். இது தொடர்பாக அரசாங்கமும் தன்னுடன் தான் பேச வேண்டும். காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களிடம் பேசக்கூடாது” என்று  சுமந்திரன் கூறியிருந்தார்,

இதன் அடிப்படையில் தான் நாங்கள் சுமந்திரன் தொடர்பாக பல விடயங்களை ஆராய்ந்திருந்தோம்.  தமிழ்மக்களுகான நீதிக்கு, தீர்வுக்கு தடையாக இருப்பதோடு  தமிழ் மக்களை ஒற்றையாட்சிக்கு அவர் முடக்குகிறார் என்பதையும் அறிந்து கொண்டோம். பின்னர் நாம் போராடிக்கொண்டிருக்கும் போது வவுனியாவில் 4000 சிங்கள குடும்பங்களுக்கு காணி உறுதியினை கையளித்திருந்தார். ஆனால் காணியில்லாமல் எத்தனையோ தமிழ் மக்கள் இருக்கிறார்கள்.இந்த சூழலில் இச் செயற்பாட்டை நாம் ஒரு குற்ற செயலாகவே பார்க்கின்றோம்.

இவ்வாறான கேள்விகளை ஊடகவியலாளர்கள் கேட்பதையிட்டு மகிழ்சியடைகின்றோம். நாங்கள் நேரடியாக ஒரு பொது விவாதத்திற்கு வர தயாராக இருக்கின்றோம். பகிரங்கமாக சுமந்திரனிடம் எங்களுக்கு அவர் செய்த விடயங்களை பட்டியலுடன் கேள்வி கேட்க தயாராக இருக்கின்றோம். பொது விவாதத்திற்கு அவர் தயாரானால் பதிலளிக்க நாங்களும் தயாராக இருக்கின்றோம்” என மேலும் தெரிவித்தார்.