‘எமது பூர்வீக நிலங்களை உடனடியாக எம்மிடம் ஒப்படையுங்கள்’ : போராட்டத்துக்கு அழைப்பு

‘எமது பூர்வீக நிலங்களை உடனடியாக எம்மிடம் ஒப்படையுங்கள்’   என்ற கோரிக்கையை   வலியுறுத்தியும், நீண்ட காலமாக தமது பூர்வீக நிலங்களை மீட்டெடுப்பதற்காக தொடர்ந்து போராடி வரும் மக்களுக்கு ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்தியும், நாளை (07)  வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு மன்னார் நகர சுற்றுவட்டத்துக்கு முன்பாக ஜனநாயக கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.

காணி இழந்த மக்களின் குரல் ஏற்பாட்டில், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் அனுசரணையில்   போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தப் போராட்டம், யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு, முல்லைத்தீவு கேப்பாபுலவு மற்றும் மட்டக்களப்பு மயிலத்தமடு–மாதவனை பகுதிகளில் தமது பூர்வீக காணிகளை மீட்டெடுப்பதற்காக பல ஆண்டுகளாக இடையறாது போராடி வரும் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் முன்னெடுக்கப்படுகிறது.

மனித உரிமைகள், காணி உரிமைகள், சமூக நீதி மற்றும் ஜனநாயகத்தை மதிக்கும் அனைத்து சிவில் சமூக அமைப்புகள், மக்கள் அமைப்புகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்வில் தங்களது மேலான பங்களிப்பை வழங்குமாறு  ஏற்பாட்டு குழு அழைப்பு விடுத்துள்ளது.