இலங்கையில் அத்தியாவசிய மற்றும் உயிர் காக்கும் மருந்துகளுக்குப் பாரிய தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுவதாக மருந்து உற்பத்தித் துறைச் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நெருக்கடியைத் தவிர்க்க அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை வழங்க வேண்டும் என்று அந்த சபை கோரிக்கை விடுத்துள்ளது.
உலகளாவிய ரீதியில் மருந்து விநியோகச் செலவுகள் அதிகரித்துள்ளமை மற்றும் எரிபொருள், கப்பல் கட்டணங்கள் உயர்வடைந்துள்ளமையால் விநியோகச் சங்கிலி பாதிப்படைந்துள்ளதாகவும், ரூபாயின் பெறுமதி மற்றும் இறக்குமதி செலவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மருந்து இறக்குமதியைப் பாதித்துள்ளதாகவும் அந்த சபை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், இறக்குமதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் ஏற்படும் காலதாமதம், நடைமுறைச் சிக்கல்கள், மருந்து விநியோகத்தின் போது ஏற்படும் மேலதிக வரி மற்றும் சுத்திகரிப்புச் செலவுகள் அதிகரிப்பு என்பன மருந்து நெருக்கடிக்கான முக்கிய காரணங்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனியார் மற்றும் அரச சுகாதாரத் துறைகளில் தடையின்றி மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய, உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு சபை வலியுறுத்தியுள்ளது.
இது ஒரு துறையின் பிரச்சினை மட்டுமல்ல, முழு நாட்டு மக்களினதும் ஆரோக்கியம் சார்ந்த தேசியப் பிரச்சினையாகும்.
எனவே, பாதுகாப்பான மற்றும் தரமான மருந்துகள் தட்டுப்பாடின்றி நோயாளிகளுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய உரிய தரப்பினர் ஒத்துழைக்க வேண்டியதுடன், அதிகாரிகள் உரிய தீர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் மருந்து உற்பத்தித் துறைச் சபை சுட்டிக்காட்டியுள்ளது



