திறைசேரியிலிருந்து நிதி களவாடப்பட்டமை குறித்து பிரதி அமைச்சர் விளக்கம்

02. நிதி அமைச்சின் கீழ் இயங்கும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பிற்குள் அங்கீகரிக்கப்படாத நபர் பிரவேசித்து முன்னெடுத்த நிதித் திருட்டுச் சம்பவம் தொடர்பில் சட்ட அமுலாக்க நிறுவனங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய ஏற்றுமதி நிதி முகவர் நிலையத்திற்கும் திறைசேரிக்கும் இடையிலான நிதி கொடுக்கல் வாங்கல்களின் போது, மின்னஞ்சல் வாயிலாக பரிமாறப்பட்ட தகவல்களை இணைய ஊடுருவிகள் இடைமறித்து மாற்றியமைத்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு வழங்கப்பட வேண்டிய ஒரு கொடுப்பனவின் போது, இதே முறையில் மேலதிக நிதியைப் பெற்றுக்கொள்ள ஊடுருவிகள் முயற்சித்துள்ளனர்.

இதன்போது வங்கி கணக்கு இலக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து சந்தேகம் எழுந்ததையடுத்து இந்த பாரிய மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இது குறித்து இலங்கை காவல்துறையின் கணினி குற்ற விசாரணை பிரிவு மற்றும் கணினி அவசர தயார்நிலை குழுவிற்கு உடனடியாக அறிவிக்கப்பட்டதாக பிரதி நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த இரண்டு பிரதி திறைசேரி செயலாளர்கள் உள்ளடங்கிய உள்வாரி குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

அந்த குழுவின் பரிந்துரையின் பேரில், தொடர்புபட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஏற்கனவே ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் குற்றப்புலனாய்வு திணைக்களத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

“குற்றவாளிகளை கைது செய்வதும், திருடப்பட்ட நிதியை மீளப் பெறுவதுமே எமது முன்னுரிமை” என்று அவர் தெரிவித்தார்.