சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எதிராக குரல்கள் எழுப்பப்படுவது போல் முதியோர் துஸ்பியோகத்திற்கு எதிராகவும் குரல் எழுப்பப்பட வேண்டும் என யாழ். மறை மாவட்டக் குருமுதல்வர் அருட்பணி ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்தார்.
சில்லாலை புனித யாகப்பர் ஆலய திருவிழா திருப்பலி இன்று நடைபெற்ற போது திருவிழா திருப்பலியை தலமையேற்று ஒப்புக் கொடுக்கையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ‘தற்போது இணையத் தளங்களில், பத்திரிகைகளில் சிறுவர் துஸ்பிரயோகம், சிறுமி கொலை தொடர்பாக செய்திகள் வெளி வருகின்றது. குறித்த சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்டாள், தீயில் எரிந்துள்ளாள் என்றும் இதன் பின்னர் சிறுவர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கவனயீர்புக்கள் இடம் பெற்று சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.
இதேபோல் முதியோர் துஸ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள் இந்த விடயங்கள் கவனிக்கப்பட வேண்டும்.
வயோதிபர்களது மாண்புகள், முக்கியத்துவங்கள், அனுபவங்கள் மதிக்கப்பட வேண்டும் திருத்தந்தை இந்த வருடம் ஜூலை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையை முதியோருக்காக செபிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
இனி ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முதியோர் தினம் அனுஸ்டிக்கப்படும். முதியோரும் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் அவமானப் படுத்தப் படுகிறார்கள். அவர்கள் துணையில்லாது முதுமையாலும் துன்பப் படுகிறார்கள். தமது பிள்ளைகளால் துன்பப்படுத்தப் படுகிறார்கள் சொத்துக்களை பறிப்பதற்காக துன்பப் படுகிறார்கள்.
இவ்வாறான முதியோர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்” என்றார்.