வவுனியா: ஊடகவியலாளர் மீது கத்திக் குத்து தாக்குதல்

வவுனியாவில் விபத்து தொடர்பான செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது கத்திக் குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா நகரப்பகுதியில் இன்று (15) மாலை விபத்துச்சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது. இதனையடுத்து விபத்துடன் தொடர்புடைய இருதரப்பிற்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதுடன் அது கைகலப்பாக மாறியது.

இதனையடுத்து குறித்த சம்பவத்தை செய்தி சேகரிப்பதற்காக சென்ற வவுனியா பிராந்திய ஊடகவியலாளர் வரதராசா பிரதீபன் மீது அங்கு நின்ற சில நபர்கள் கத்தி மற்றும் இரும்புத் தகடினை பயன்படுத்தி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

தான் ஊடகவியலாளர் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்திய நிலையிலும் அதனை பொருட்படுத்தாமல் கடுமையாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த ஊடகவியலாளர் மற்றும் பிறிதொரு நபரும் வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tamil News