உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் போது கருணா என்ற முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளதாக வார இறுதி சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விசாரணையின் போது பிள்ளையான் தரப்பினருக்கும் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்கள் கிழக்கு மாகாணத்தில் இணைந்து மேற்கொண்ட செயற்பாடுகள் குறித்த பல முக்கிய தகவல்கள் கருணா ஊடாக வெளியாகியுள்ளதென அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பிள்ளையான் தரப்பினருக்கு தங்குமிட வசதிகளை பெற்றுக்கொடுப்பதில் சுரேஷ் சலேவினால் அறிமுகப்படுத்தப்பட்ட நபர்களே உதவிகளை வழங்கியதாக கருணா குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான நிதி உதவிகள் மற்றும் வசதிகளும் அவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டதாகவும் கருணா ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருணா மற்றும் பிள்ளையான் ஆகிய இருவரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்கி வந்துள்ளனர்.
ஆனால் அவர்கள் இருவருக்கும் இடையில் நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிள்ளையான் தரப்பினரால் பொலன்னறுவை, வெலிகந்தை பகுதியில் நடத்தப்பட்ட சித்திரவதை முகாம் குறித்தும் குற்றப்புலனாய்வு திணைக்களம் பலரிடம் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளது.
மேலும், கொழும்பு நகருக்குள் அவர்களின் செயற்பாடுகளுக்கு உதவிய நபர்கள் குறித்த விரிவான விசாரணைகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



