வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளில் இருவர் தற்கொலை முயற்சி

இலங்கை மக்கள் பொருளாதார நெருக்கடியில் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், அகதிகளாக கனடா நோக்கி செல்ல முயற்சித்து, வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கை அகதிகளில் இருவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இலங்கைக்கு மீண்டும் செல்ல முடியாது என அகதிகள் கூறி வருகின்ற பின்னணியில், தங்களை இலங்கைக்கு மீள நாடு கடத்த அதிகாரிகள் முயற்சித்து வருவதாக தெரிவித்தே இவர்கள் நவம்பர் 18ஆம் திகதி இரவில் தற்கொலை முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அவர்களின் சக அகதிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த இருவரில், ஒருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக, வியட்நாமிலுள்ள இலங்கை அகதி ஒருவர் சர்வதேச ஊடகமான பிபிசி தமிழுக்கு தெரிவித்துள்ளார். இன்னொருவரின் உடல்நிலை வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.