ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் 16வது ஆண்டு நினைவு தினம் இன்று

சு.சுகிர்தராஜனின் 16வது ஆண்டு

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் 16வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மட்டு.ஊடக அமையத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையம் ஆகியன இணைந்து இந்த நிகழ்வினை நடாத்தியது.
இதன்போது படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின்  உருவ படத்திற்க்கு மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.அதைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய செயலாளர் எஸ்.நிலாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஊடகவியலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன்,ஊடகவியலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

2006 இல் உயர்தரக் கல்வியை முடித்து பின்பு, பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருந்த 5 மாணவர்கள்,திருகோணமலை கடற்கரையில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
படுகொலை செய்யப்பட்ட இந்த மாணவர்களை இவர் நிழற்படமெடுத்து செய்தி வெளியிட்டிருந்தார்.மாணவர்களின் இறப்புக்கு கைகுண்டுத் தாக்குதலே காரணம் என்று விசாரணையை திசைதிருப்ப முயற்சிக்கப்பட்டபோது, இவர் எடுத்த நிழற்படங்கள் தலையில் சுடப்பட்டு இறந்ததை தெளிவாக எடுத்துக் காட்டின. இதனால் அரசுக்கு சர்வதேச ரீதியில் அவப்பெயரும், அழுத்தங்களும் ஏற்பட்டன.
அத்துடன், கொலை செய்யப்படுவதற்கு முதல் நாள், அரசு சார்பு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் திருகோணமலையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் அடங்கிய தகவல்களை, இவர் சுடரொளியில் வெளியிட்டிருந்தார்.

சுகிர்தராஜன் மட்டக்களப்பு, குருமண்வெளியில் பிறந்தார். தந்தையார் சுப்பிரமணியம். தாயார் அருள் ஞானம்மா. அம்பாறை வீரமுனையை வசிப்பிடமாகக் கொண்ட இவர், திருகோணமையில் பணி நிமித்தம் தங்கியிருந்தார். பாண்டிருப்பு கதிர்ப்பு கலை இலக்கிய வட்டத்தின் ஸ்தாபகத் தலைவரான இவர், 1997 இல் இலங்கைத் துறைமுக அதிகார சபையின் ஊழியராக  பணியாற்றினார். அத்துடன்,  சுடரொளி, உதயன் ஆகிய பத்திரிகைகளின் திருகோணமலை நிருபராகக் கடமையாற்றிய இவர் – வீரகேசரி, மெற்றோ நியூஸ் ஆகியவற்றில் அரசியல் கட்டுரைகள் எழுதிவந்தார். வீரகேசரியில் –  எஸ்.எஸ்.ஆர், மனோ, ரஹ்மான் ஆகிய பெயர்களிலும், மெற்றோ நியூசில் – ஈழவன் என்ற பெயரிலும் துணிச்சலுடன் அரசியல் விடயங்களை வெளிச்சப்படுத்தி எழுதி வந்தார்.

இவருக்கு மிதுசா(19), சதுர்சன் (17) என்று 2 பிள்ளைகள் இருக்கின்றனர். உள்ளதை உள்ளபடி உலகுக்கு வெளிப்படுத்தும் ஊடக பணியை, நேர்மையாக செய்பவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இருப்பதில்லை. இதில்  பலியானவர்களின் தொகை எண்ணிலடங்கா.  அவர்களுக்கு நாம் செய்யும் ஒரே நன்றிக்கடன், அவர்களின் நினைவு நாளில் அவர்களுக்கான மரியாதையை செலுத்துவதும், அவர்களின் அர்ப்பணிப்பையும், தியாகத்தையும் நினைவு கூருவதுமாகும்.

Tamil News