கிளிநொச்சியில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற திலீபனின் 34 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு

திலீபனின் 34 ஆவது ஆண்டு நினைவு

தியாக தீபம் திலீபனின் 34 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வின் இறுதி நாளான இன்றைய தினம் கிளிநொச்சியில் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது. விசேடமாக ஒழுங்கமைக்கப் பட்ட இடத்தில் வீரச்சாவடைந்த நேரமான 10.48 மணிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் ஈகச்சுடரினையும் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.

தாயகம் எங்கும் திலீபன் அவர்களின நினைவேந்தலை தடுக்கும் நோக்கில் இராணுவம் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்

தியாகி திலீபன் அவர்கள் 1987 ஆண்டு புரட்டாதி மாதம் 15 ஆம் திகதி 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் நீராகாரம் ஏதுமின்றிய அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு புரட்டாதி 26 ஆம் திகதி வீரச்சாவினை தழுவியிருந்தார்.

மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும். சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும். ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும். தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.

போன்ற ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தே திலீபன் உண்ணாநோன்பு இருந்து தன்னுயிரை ஈகம் செய்தார்.

ilakku.org/ilakku-weekly-epaper-148-september-19-2021