வங்கதேசம்- பெரு வெள்ளத்தில் தத்தளிக்கும் ரோகிங்யா (Rohingya) ஏதிலி முகாம்களின் நிலையை ஏதிலிகளே புகைப்படங்கள் எடுத்து Norwegian Refugee Council – அமைப்பிடம் வழங்கியுள்ளனர்.
இந்த புகைப்படங்கள் aljazeera இணைய தளத்தில் வெளியாகியுள்ளது.
உலகின் மிகப் பெரிய ஏதிலிகள் முகாமாக கருதப்படும் வங்கதேச ரோகிங்யா ஏதிலி முகாம்களில் 900,000 ஏதிலிகள் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.
இந்த பகுதியில் தொடர்ந்து பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி இது வரையில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். அதில் மூவர் குழந்தைகள் என்றும் கூறப்படுகின்றது.
இதையடுத்து 20,000 பேர் வரையில் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளர்.
மியான்மரின் வடக்குப் பகுதியில் உள்ள ரக்கைன் மாகாணத்தில் வாழ்ந்த சுமார் 10 இலட்சம் ரோகிங்யா முஸ்லிம்கள், எட்டாம் நூற்றாண்டு முதல் பல தலைமுறைகளாக வாழ்கின்றனர். ஆனாலும், அவர்களை மியான்மர் குடியுரிமை சட்டப்படி தங்கள் நாட்டு குடிமக்களாக அங்கீகரிக்க முடியாது என்ற நிலைப்பாட்டை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது.
இதனால் ரோகிங்யா மக்களுக்கு எதிரான வன்முறைகளும் மோதல்களும் 2012-ஆம் ஆண்டில் தீவிரம் அடைந்தன. அதன் பிறகு உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ரோகிங்யாக்கள், வங்கதேசம், இந்தியா போன்ற நாடுகளுக்கு தப்பித்து அடைக்கலம் தேடிக் கொண்டனர்.
மியாமன்மரில் ரோகிங்யா முஸ்லிம்கள் மீதான அந்நாட்டு இராணுவ நடவடிக்கைகளை “அப்பட்டமான இனப்பேரழிப்பு செயல்” என ஐ.நா. மனித உரிமை ஆணையர் சையத் ராவுத் அல் ஹுசைன் கண்டித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.