இனப்பிரச்சினைக்குத் தீர்வு: பேச்சை நிறுத்தி, செயலில் காட்டுங்கள்-ஜனாதிபதியிடம் மனோ வலியுறுத்தல்

தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பில், முழுமையாக ஒத்துழைக்க நாம் தயார், ஆனால், நீங்கள் பேச்சை நிறுத்தி, செயலில் காட்டுங்கள் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி மேதின உரை தொடர்பில் பதிலளிக்கும் வகையில் விடுத்துள்ள அறிக்கையில் மனோ கணேசன் இதனை தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மை கட்சிகளின் தலைவர்கள் மத்தியில், தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் காத்திரமான முயற்சிகளை எடுத்த ஒருவர் ரணில் விக்கிரமசிங்க என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனினும் ஜனாதிபதியாக நியமனம் பெற்ற பின் பலமுறை இந்த கால அட்டவணைக்குள் இனப்பிரச்சினை தீர்வு என பலமுறை கூறிவிட்டார். தமிழ் மக்களுக்கும் இந்த வசனமும் பரிச்சயமாகிவிட்டது.

சர்வகட்சி மாநாட்டை நடத்தி முதற்கட்டமாக 13ஐ பற்றிப் பேசியபோது, அதுவரை ஒளிந்திருந்த பிக்குமார் தெருவுக்கு வந்தார்கள். அத்துடன், அந்த முயற்சியும் நின்று போனது. இனப்பிரச்சினை தீர்வுபற்றி, தமிழ் கட்சிகளை அழைத்துப் பேச முன்னதாக சிங்கள கட்சிகளை அழைத்து நாட்டின் உண்மை நிலைமை பற்றி ஜனாதிபதி பேச வேண்டும்.

இந்த வருட இறுதிக்குள் இனப்பிரச்சினை தீர்வு பொருளாதார வளர்ச்சிக்கு தேசிய இன ஐக்கியம் அவசியம் என்றெல்லாம் கூறுவதற்கு முன், வடக்கு – கிழக்கில் காணி பறிபோகிறது. தொல்பொருள் திணைக்களம், தொல்லை திணைக்களம் ஆகி விட்டது. சிவனை தூக்கியெறிந்து விட்டு, இராணுவ துணையுடன் பிக்குமார், புத்தரை பிரதிஷ்டை செய்கிறார்கள். காவி உடையில் அரசியல் செய்யும் பிக்குமாரை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அதற்கு இதுதான் சந்தர்ப்பம். இல்லாவிடின் வடக்கு கிழக்கில் விரைவில் கடும் பதற்ற நிலைமை உருவாகும்.

மலைநாட்டில், வந்தவன், போனவன் எல்லாம் அடாத்தாக தோட்ட காணிகளை பிடிக்கிறான். ஆனால், 200 வருட வரலாற்றை தொட்டு விட்ட பெருந்தோட்ட மக்களுக்கு வாழ, பயிர் செய்ய காணி இல்லை. மலையக தமிழருக்காக நான் குரல் கொடுத்தால், என்னை தேயிலை கொழுந்து பறிக்க வந்தவன் தோட்டகாட்டான் என்கிறார்கள். இது மலைநாட்டு பெருந்தோட்ட பகுதிகளில் கடும் பதற்ற நிலைமையை மெதுவாக உருவாக்கி வருகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.