யுக்ரேனில் போர் புரியும் சூழலுக்குள் ரஷ்யாவை தள்ள, அமெரிக்கா முயற்சிப்பதாக அமெரிக்கா மீது புதின் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
ஆயிரக்கணக்கான வீரர்களை யுக்ரேனின் எல்லையில் ரஷ்யா நிறுத்தியதால் ரஷ்யா – யுக்ரேன் எல்லையில் பதற்றம் நிலவியது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகள் கடுமையாக விமர்சித்தன. யுக்ரேன் மீது ரஷ்யா படை எடுத்தால், ரஷ்ய அதிபர் புதினுக்கு நெருக்கமாக உள்ளவர்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று கடந்த திங்கள்கிழமை அமெரிக்கா எச்சரித்தது.
இந்நிலையில், பல வாரங்களாக நிலவும் யுக்ரேன் – ரஷ்யா நெருக்கடி குறித்த தனது முதல் கருத்தைத் தெரிவித்துள்ள புதின், ரஷ்யா மீது அதிக தடைகளை விதிக்க ஒரு சந்தர்ப்பமாக, இந்த நெருக்கடியை பயன்படுத்துவதே அமெரிக்காவின் குறிக்கோள் என்றும் ஐரோப்பாவில் நேட்டோ கூட்டணிப் படைகள் குறித்த ரஷ்யாவின் கவலைகளை அமெரிக்கா புறக்கணிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
யுக்ரேன் எல்லைப் பகுதிகளுக்கு அருகில் ரஷ்யப் படைகள் குவிந்துள்ளதால் பதற்றம் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.