இலங்கையில் மனித உரிமைகள் பாதாளத்திற்கு சென்று தமிழ் பிரதேசங்கள் இராணுவமயமாகி வருகின்றன என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதி பொதுச் செயலாளர் ஸ்ரீ ஞானேஸ்வரன் தெரிவித்தார்.
திருகோணமலையில் இன்று (24) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், இலங்கையில் இராணுவமயமாவது தமிழ் பிரதேசங்களை இலக்கு வைத்து செயற்படுவதை இரு நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் மட்டுவிலில் இடம் பெற்ற சம்பவத்தை (காணாமல் ஆக்கப்பட்டவர் களின் உறவினர்கள் மீதான அடக்குமுறை) வைத்து அறிய முடிகிறது. ஆயுதம் தாங்கிய படைகள் கட்டவிழ்த்து விடப்பட்டது போன்று அந்த தாய் மார்கள் செல்லுகின்ற பேருந்தை மறித்து மனித உரிமைகளை சிதைக்கின்ற செயலாக அது அரங்கேற்றப்பட்டுள்ளது.
அத்தியவசிய பொருட்கள் வாங்கும் இடமெல்லாம் ஆயுதம் ஏந்திய இராணுவம் உள்ளது. இது போன்று பொருளாதார நெருக்கடிக்குள் நாடு இருக்கும் போது சர்வதேச நாணய நிதியம் போன்றனவும் உதவும் நாடுகளான சீனா இந்தியா போன்றனவும் தமிழ் மக்களுடைய மனித உரிமைகள் அடிப்படை உரிமைகள் தொடர்பிலும் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்றார்.