ருமேனிய எல்லையில் 16 இலங்கையர்கள் உட்பட 38 பேர் கைது

16 இலங்கையர்கள் உட்பட 38 பேர் கைது

16 இலங்கையர்கள் உட்பட 38 பேர் கைது

வாகனங்களிற்குள் மறைந்திருந்தவாறு ருமேனியாவின் எல்லையை சட்டவிரோதமாக கடக்க முயன்ற 16 இலங்கையர்கள் உட்பட 38 குடியேற்றவாசிகளை கைதுசெய்துள்ளதாக ருமேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு சிறிய பேருந்துகள் டிரக் ரக வாகனங்களிற்குள் மறைந்திருந்தவாறு நட்லாக் 11 எல்லையை கடக்க முயன்ற போது கைதுசெய்யப்பட்டுள்ளனர் இந்த வாகனங்களின் சாரதிகள் ருமேனியாவை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

ருமேனியாவில் பதியப்பட்ட சிறிய பேருந்துகளின் சாரதிகளாக 32 மற்றும் 42 வயதுடைய இருவர் இருந்துள்ளனர். அந்த வாகனங்களை எல்லையில் சோதனை யிட்டவேளை பொருட்களை வைப்பதற்காக விசேடமாக உருவாக்கப்பட்ட பகுதியிலும்,பயணிகள் அமரும் பகுதியிலும் பலர் மறைந்திருந்தது தெரியவந்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாகனங்களில் 16 இலங்கையர்கள் காணப்பட்டனர், இவர்கள் 22 முதல் 51 வயதுடையவர்கள் அவர்கள் தனிப்பட்ட ஆவணங்கள் மூலம் நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் “எல்லைக்கு வந்த காரில் ருமேனியாவை சேர்ந்த ஒருவரும் இலங்கையை சேர்ந்தவரும் காணப்பட்டனர்,ருமேனிய பிரஜை அந்த காரை ஓட்டினார், அந்த கார் இத்தாலியில் பதிவு செய்யப்பட்டிருந்தது,அந்த காரை சோதனை செய்தவேளை முன்னர் பேருந்தில் மறைந்திருந்தவர்களின் பயணபொதிகளும் ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டன“ என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அந்த பகுதி ஊடாக டிரக்ஒன்றில் மறைந்திருந்தவாறு எல்லையை கடக்க முற்பட்ட துருக்கி சிரியா ஈராக்கை சேர்ந்த 22 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.