ஆப்கானிஸ்தானில் இயங்கிவந்த பெண்கள் நலத் துறையை தற்போது நன்நடத்தை கற்பித்தல் மற்றும் தவறுகளைத் தடுக்கும் துறை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆப்கனில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்நாட்டில் ஆட்சி அமைத்துள்ளனர். இஸ்லாமிய சட்டப்படிதான் ஆட்சி எனத் தெரிவித்த அவர்கள் பெண்ணுரிமை பேணப்படும் என்றும் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இயங்கிவந்த பெண்கள் நலத் துறையானது தற்போது நன்நடத்தை கற்பித்தல் மற்றும் தவறுகளைத் தடுக்கும் துறை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பெண்கள் நலத் துறையின் கீழ் இயங்கிவந்த 100 மில்லியன் டொலர் முதலீட்டிலான பெண்கள் பொருளாதார மேம்பாடு மற்றும் கிராமப்புர மேம்பாட்டு திட்டமானது முடக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தலிபான்கள், 7ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான ஆண் பிள்ளைகளை இன்று முதல் பள்ளிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும், பெண் பிள்ளைகள் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதனால் தலிபான்களின் போக்கில் எவ்வித மாற்றமும் இல்லை என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.
தலிபான்களின் இச் செயற்பாடு அங்குள்ள பெண்களின் நிலையை மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளது.