முன்னிலை சோஷலிசக் கட்சியும் ஜனாதிபதித் தோ்தலில் களமிறங்கும் – குமாா் குணரட்ணம் அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னிலை சோஷலிசக் கட்சியும் களமிறங்கும் என்று அந்தக் கட்சியின் செயலாளர் குமார் குணரத்தினம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பாராளுமன்ற தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் என அடுத்து வரும் எந்தவொரு தேர்தலாக இருந்தாலும் எமது கட்சி களமிறங்கும்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஜனநாயக முறைமைக்கு அச்சுறுத்தல் எனக் கருதுகின்றோம். எனவே, அம்முறையை நீக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளோம்.

எனினும், அரசியல் வாய்ப்பை, அரசியல் தலையீட்டைக் கருத்திற்கொண்டு தேர்தலில் போட்டியிடுவோம். இடதுசாரி சக்திகளுடன் பொது வேலைத்திட்டத்துடன் களமிறங்குவோம். வேட்பாளர் குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

ஜே.வி.பி.யிலிருந்து பிரிந்து சென்ற குமாா் குணரட்ணம் தலைமையிலான குழுவினரால் அமைக்கப்பட்ட முன்னிலை சோஷலிசக் கட்சி இரண்டு வருடங்களுக்கு முன்னா் இடம்பெற்ற அரகலய போராட்டத்தில் முக்கியமன பங்காற்றியதாகக் கருதப்படுகின்றது.