தாயும் மகளும் வெட்டிக்கொலை; பிரான்ஸ் தமிழ்க் குடும்பத்தில் நடந்த கொடூரம்

10 1 2 தாயும் மகளும் வெட்டிக்கொலை; பிரான்ஸ் தமிழ்க் குடும்பத்தில் நடந்த கொடூரம்பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் வீடு ஒன்றில் இருந்து 52 வயதான தாய், 21 வயதான மகள் இருவரது சடலங்களும் நேற்று செவ்வாய்கிழமை காலை பொலீஸாரால் மீட்கப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட இருவரும் புலம்பெயர்ந்து சென்ற ஈழத் தமிழர்கள் எனத் தெரிவிக்கப் படுகின்றது.

சடலங்கள் மீட்கப்பட்ட வீட்டில் மிகவும் அதிர்ச்சியுற்ற நிலையில் காணப்பட்ட தந்தையும் இரண்டு ஆண் பிள்ளைகளும் பொலீஸாரால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்று முதலில் வெளியாகிய தகவல்கள் தெரிவித்தன.

புலம்பெயர்ந்து வசிக்கின்ற இலங்கைத் தமிழ் குடும்பத்தினரது வீட்டிலேயே இந்தக் கொலைகள் நிகழ்ந்துள்ளன. கொலையுண்டவர்களது பெயர் மற்றும் மேலதிக விவரங்கள் உடனடியாகத் தெரிய வரவில்லை.

வேலை முடிந்து இன்று காலை வீடு திரும்பிய தந்தையார் மனைவியும் மகளும் வீட்டு அறையில் கூரிய ஆயுதத்தால் ஏற்பட்ட காயங்களுடன் சடலமாகக் கிடப்பதைக் கண்டார் என்று கூறப்படுகிறது. அயலவர்களால் அவசர மீட்புப் பிரிவிவினரும் பொலீஸாரும் அங்கு அழைக்கப் பட்டுள்ளனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு வருகை தந்த சமயம் தந்தையாரும் அவரது இரண்டு புதல்வர்களும் மிகவும் அதிர்ச்சி யுற்றவர்களாகக் காணப்பட்டனர் என்றும் பின்னர் அவசர முதலுதவிப் பிரிவினரால் மூவரும் பொலீஸ் பாதுகாப்புடன் பொந்துவாஸ் மருத்துவமனைக்குக் (centre hospitalier René-Dubos de Pontoise) கொண்டு செல்லப்பட்டனர் என்றும் உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

மூவரும் அதிர்ச்சியுற்ற காரணத்தால் வீட்டில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை விசாரணை மூலம் உடனடியாக அறிந்து கொள்ள முடியவில்லை என்று ஊடகங்களில் வெளியாகிய தகவல்கள் கூறுகின்றன. இக் கொலைகள் தொடர்பான விசாரணைகளைப் பொந்துவாஸ் அரச சட்டவாளர் அலுவலகம், Versailles நீதிமன்றப் பொலீஸாரிடம் ஒப்படைத்துள்ளது என்று ‘பரிஷியன்’ ஊடகம் தெரிவித்துள்ளது.

ilakku-weekly-epaper-141-august-01-2021