இலங்கை ஆளும் கட்சி அமைச்சருக்கு ஒத்தி வைக்கப்பட்ட 2 ஆண்டு கடூழிய சிறைத் தண்டனை

அமைச்சருக்கு ஒத்தி வைக்கப்பட்ட 2 ஆண்டு கடூழிய சிறை

இலங்கை வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி 64 மில்லியன் ரூபா பணத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு ஐந்து வருடம் ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி கப்பம் கோரிய சம்பவத்தில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, உறுதிப் பத்திரமொன்றில் கையெழுத்திட்டுள்ள குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நீதிமன்றத்திற்கு 25 மில்லியன் ரூபா தண்டப் பணத்தை செலுத்துமாறு நீதி மன்றம் உத்தரவிட்டதுடன், இந்த தண்டப்பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 9 மாத சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பாதிக்கப்பட்ட தரப்பிற்கு ஒரு மில்லியன் ரூபா இழப்பீட்டைசெலுத்துமாறும், அந்த  இழப்பீட்டை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 3 மாத கால சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tamil News