வடபகுதி அமைதியாக இருக்கின்றதா? சொல்ஹெய்மின் கருத்துக்கு அம்பிகா பதிலடி

வடபகுதி அமைதியாக உள்ளது. அது சிறப்பான விடயம். பாதுகாப்பு சிறப்பாக உள்ளது என நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்திற்கு கடும் பதிலடி கொடுத்துள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், இராணுவத்தினர் அங்கு தங்கள் முகாம்களை விஸ்தரிக்கின்றனர். ஊடகங்கள் சிவில் சமூகத்தினர் போன்றவர்களை கடுமையாக கண்காணிக்கின்றனர் துன்புறுத்துகின்றனர். இது அமைதிக்கு மாறான நிலையை ஏற்படுத்துகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடா்பில் அம்பிகா சற்குணநாதன் மேலும் தெரிவித்தபோது, “இலங்கையின் வடபகுதி கடுமையாக இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு தரப்பினர் சிவில் சமூகத்தினரை மாற்றுக் கருத்துடையவர்களை ஊடகங்களை கண்காணிக்கின்றனர். துன்புறுத்துகின்றனர். அச்சுறுத்துகின்றனர்.

பொதுமக்களின் காணிகளை கைப்பற்றுவதன் மூலம் இராணுவம் தொடர்ந்தும் தனது முகாம்களை விஸ்தரிக்க முயல்கின்றது. இந்து வழிபாட்டு தலங்களை பௌத்த மதகுருமாரும் தொல்பொருளியல் திணைக்களமும் கைப்பற்றுவதற்கு உதவுகின்றது. இது பாதுகாப்பின்மையை ஏற்படுத்துகின்றது அமைதிக்கு எதிரான சூழலை உருவாக்குகின்றது” என்று சுட்டிக்காட்டியுள்ளாா்.