இலங்கையில் தொடரும் அசம்பாவிதங்களால் அகதிகள் போர்வையில் சமூக விரோதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ வாய்ப்புள்ளதால், கண்காணிப்பை தீவிரப்படுத்தி ஊடுருவலைத் தடுக்க வேண்டும் என்று தமிழகத்துக்கு மத்திய உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையில் கடும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக ஆளும் கட்சியின் அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களின் வீடுகள் பல குறிவைத்து சூறையாடப்பட்டு வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன. முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வீடும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. தொடரும் வன்முறையால் நாட்டில் அவசர நிலை,ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
மேலும் 50 கைதிகள் தப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில்,இலங்கையில் நடைபெறும் அசம்பாவிதங்கள் மற்றும் விரும்பத்தகாத நிகழ்வுகளால் அந்நாட்டிலிருந்து அகதிகள் போர்வையில் தமிழகத்துக்குள் தேச விரோதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாகவும் அதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய உளவுத்துறை, தமிழக உளவுத்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.