அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் சென்று தெரிந்து கொண்ட தகவல்களுக்கமைய அண்மையில் லொகான் ரத்வத்தையின் செயற்பாடுகள் குறித்து ஊடகங்களில் வெளியாக செய்திகள் உண்மையானவை. தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறை கைதிகளை அச்சுறுத்தியதாக வெளியான தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் பதிவி விலகியுள்ளார்.
இந்நிலையில், இது குறித்து நிலைமையை ஆராய்வதற்காக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரோகண பண்டார உள்ளிட்டோர் இன்று அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர்.
இதன் போது ஊடகங்களுககு கருத்துத்தெரிவித்த மனோ கணேசன், நாம் சிறைச்சாலைக்கு வருகை தரவுள்ளதாக ஏற்கனவே உரிய அதிகாரிகளுக்கு அறிவித்திருந்த போதிலும் இன்று எமக்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து சபாநாயகரை தொடர்பு கொண்டதன் பின்னரே எமக்கு உள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்களான எமக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண பிரஜைகளின் நிலைமை என்னவாயிருக்கும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
நாம் உள்ளே சென்று தெரிந்து கொண்ட தகவலுக்கமைய அண்மையில் லொகான் ரத்வத்தையின் செயற்பாடுகள் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் அனைத்தும் உண்மையானவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இராஜங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை மது போதையில் துப்பாக்கியுடன் வந்ததாகவும், போதையில் இருந்தமையால் துப்பாக்கியை எடுத்து அச்சுறுத்தியதாகவும் கைதியொருவர் கூறினார்.
இதன் போது தவறுதலாகவேனும் அந்த துப்பாக்கி இயக்கப்பட்டு நாம் கொல்லப்பட்டிருந்தால் நாம் அவரை கொல்ல முற்பட்டதால் ஏற்பட்ட கலவரம் என்று கூறியிருப்பார்கள் என்றும் அந்த கைதிகள் எம்மிடம் தெரிவித்தனர்.
இந்த கைதிகளை விடுதலை செய்து தமிழ் மக்களின் மனதை வெல்லுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம்” என்றார்.