வடக்கு மாகாண ஆசிரியர்களுக்கு வடக்கில் நியமனம் மறுப்பு – இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் கண்டனம்

வடக்கு மாகாண ஆசிரியர்களுக்கு வடக்கில் நியமனம் மறுக்கப்படுவதற்கு இலங்கை தமிழர் ஆசியர் சங்கம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

கல்வியியற் கல்லூரிகளை முடித்த வட மாகாண ஆசிரியர்களுக்கு வடக்கில் நியமனம் இல்லை. இது திட்டமிட்ட செயற்பாடு. இதனை வன்மையாகக் கண்டிப்பதோடு இப்போதுள்ள சூழ்நிலையில் அவர்கள் வாழ்க்கைக்காக போராடும் நிலையில் இதனை ஏற்க முடியாது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்சம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

வடக்கு மாகாணத்தில் உள்ள வன்னிப் பிரதேச பாடசாலைகளில் பெருமளவான ஆசிரிய பற்றாக்குறை உள்ளது. அங்கு கடமையாற்றும் வெளி மாவட்ட ஆசிரியர்கள் தமது சேவைக்காலத்தை நிறைவு செய்து, அவர்களில் பலருக்கு இடமாற்றமும் வழங்கப்பட்டு விட்டது.

இந்நிலையில் இன்னும் வன்னிப்பிரதேசத்தில் ஆசிரிய பற்றாக்குறை அதிகரித்த நிலையில் வடக்கு மாகாணத்தை சொந்த வாழ்விடமாக உள்ள ஆசிரியர்களை அவர்கள் அறியாத தென்பகுதி ஊர்களுக்கு நியமிப்பதன் நோக்கம் என்ன? இது ஒரு இனவாத அல்லது பழி தீர்க்கும் கருமமாகவே பார்க்கிறோம்.

தயவு செய்து இப்போதுள்ள நாட்டுச் சூழ்நிலையில் அவர்களை அவர்களது சொந்த மாகாணத்தில் கடமையாற்ற அனுமதியுங்கள்.

இங்குள்ள வெற்றிடத்தை நிரப்புங்கள்.இதுபற்றி வடக்கு மாகாணம் சார்ந்த அரசியல் தலைவர்கள் சுட்டிக் கதைக்க வேண்டும். என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamil News