பௌத்த சிங்கள பேரினவாதம் இருக்கும் வரை விமோசனமே இல்லை

பேரினவாதம் இருக்கும் வரை விமோசனமே இல்லை

எண்ணிக்கையில் தவறான கொள்கைகளினாலும் பௌத்தசிங்கள பேரினவாதம் இருக்கும் வரை விமோசனமே இல்லை என ஜனாதிபதி கோட்டாபயவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தின் இனப்பரம்பலை மாற்றியமைப்பதற்கு எதிராக நெடுங்கேணி பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது. குறித்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும்படியாக வவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.

குறித்த மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதவது,

வவுனியா மாவட்டத்தில் மூவின மக்களும் வரலாற்று ரீதியாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். யுத்தத்திற்கு முன்னரான காலத்திலும் யுத்தகாலத்திலும் எமக்கிடையிலான வாழ்வியலில் அதற்குப்பின்னரும் பாரிய மாற்றங்கள் எவையும் இடம்பெறவில்லை. மேற்சொன்ன காலப்பகுதியில் ஒரு சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தபோதிலும் நாம் ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்துள்ளோம்.

கடந்த காலங்களில் எமது மாவட்டத்தில் வடக்கு மாகாணத்தை பூர்வீகமாக கொண்டிராத வேறு மாகாணத்தை பூர்வீகமாகவும் கொண்ட பலர் திட்டமிட்டு குடியமர்த்தப்பட்டார்கள் . குறிப்பாக வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலும் வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிலும் இக்குடியேற்றச் செயற்பாடுகள் மிகவும் இரகசியமான  முறையில் மக்களுடன் கலந்துரையாடப்படாமல் நடைபெற்றது.

இவ்விரகசியமான குடியேற்றச் செயலானது எமது மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியிலும் பாரிய சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாரிய எண்ணிக்கையில் வேறு மாகாணங்களில் இருந்து கொண்டு வந்து குடியேற்றப்படும் சிங்கள மக்களால் தமது பூர்வீகத்திற்கும் தமது வாழ்வியல் முறைகளுக்கும் தனித்துவத்திற்கும் இடையூறு ஏற்பட்டு தாம் இரண்டாந்தரப் பிரஜைகள் ஆக்கப்பட்டு விடுவோம் என்ற அச்சம் எமது மாவட்ட தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல காலம் அகதிகளாக வாழ்ந்த எமது மாவட்ட மக்கள், மீண்டும் இன்றுவரை சொந்தக் காணிகளில் முழுமையாக குடியமர்த்தப்படவில்லை. இடம்பெயர்ந்த மக்கள் தமது காணிகளில் மீளக்குடியேற பல்வேறு அரச திணைக்களங்களால் தடை ஏற்ப்படுதப் படுகின்றது.

குறிப்பாக வனவளத்திணைக்களம் மக்களுடைய காணிகளை எல்லைக்கல்லிட்டு மீள்குடியேற்றத்தை தடுத்துவருகிறது.

அக்காணிகளில் உள்ள நீண்டகால பயிர்களும் பழமரங்களும் சிதைந்த கட்டடங்களும் அவர்கள் அங்கு வாழ்ந்தமைக்கான சான்றுகளாகும். காணியற்றவர்களாக காணிகளில் எமது மாவட்ட மக்களின் வழித்தோன்றல்கள் பலர் புதிய குடும்பங்களாக இன்றும் தமது பெற்றோர்களுடன் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு இடம்பெயர்ந்து  மீளக்குடியமரமுடியாமலும் திருமணம் செய்து புதிய குடும்பங்களாக காணிகள் அற்ற நிலையிலும் உள்ள பலர் எமது மாவட்டத்தில் பெருவாரியாக உள்ள நிலையில், எமது மாகாணத்திற்கு வெளியே இருந்து மக்களை கொண்டுவந்து குடியேற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறான திட்டமிட்ட குறிப்பிட்ட ஓரின மக்களை மட்டும் முன்னிலைப்படுத்தி செய்யப்படுகின்ற குடியேற்றமானது எமது மாவட்டத்தின் இன விகிதாசாரத்தை மாற்றுகின்ற உள்நோக்கோடு செய்யப்படும் செயலாகவே நாம் கருதுகிறோம்.

அத்துடன் 2014 ம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்ட மணலாறு பிரதேச செயலாளர் பிரிவின் (வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவு) நிர்வாகத்தினுள் இருந்த 5 கிராம அலுவலர் பிரிவுகள் (4 உள்ளூராட்சி மன்ற வட்டாரங்கள்) கஜபாபுர  அத்தாவெட்டுனுவெவ, நிக்கவெவ, மொனராவெவ, கல்யாணபுரவின் ஒரு பகுதி ஆகியன வவுனியா வடக்கு பிரதேச சபையுடன் இணைக்கப்பட்டன.

இருந்தபோதிலும் இன்றுவரை இப்பகுதிகள் முல்லைத்தீவு நிர்வாக மாவட்டத்தி னாலேயே நிர்வகிக்கப்படுகிறது. இன்று எமது பாரம்பரிய பிரதேசத்தில் சிங்கள மக்களை குடியேற்றும் செயற்பாடுகள் தொடர்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளை வடமத்திய மாகாணத்தின் அனுராதபுர மாவட்டத்தில் உள்ள மூன்று கிராமசேவையாளர் பிரிவுகளை வவுனியா மாவட்டத்துடன் இணைப்பதற்கான வேலைத்திட்டமானது மேற்கொள்ளப்படுகிறது .

அனுராதபுர மாவட்ட நிர்வாகத்தில் உள்ள கெப்பிற்றிக்கொலாவ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கனகாவெவ (600 குடும்பங்கள்) மற்றும் பதவியா பிரதேச செயலாளர் பிரிவின் வெரகதென்ன, கம்பிலிவெவ ஆகிய கிராமசேவையாளர் பிரிவுகளை (600 குடும்பங்கள்) அத்துடன் கொரவப்பொத்தான பிரதேசசெயலாளர் பிரிவில் உள்ள போகஸ்வெவ 02 இல் உள்ள 07 ம் வீதியிலிருந்து 22 வது வீதி வரையிலான பிரதேசம் ஆகியன வவுனியா வடக்கு பிரிவில் உள்வாங்குதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக அறிகிறோம்.

இச்செயற்பாடானது மேலும் இன விகிதாசாரத்தில் பாரிய மாற்றத்தை மிக துரித கதியில் நடைமுறைப் படுத்துவதற்கான ஒரு உத்தியாகவே நோக்க வேண்டியுள்ளது. எண்ணிக்கையில் தவறான கொள்கைகளினாலும் பௌத்த சிங்கள பேரினவாதத்தாலும் இந்த நாடு ஆழப்படும் வரை இந்த நாட்டிற்கு விமோசனமே இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ilakku Weekly Epaper 156 November 14 2021 Ad பௌத்த சிங்கள பேரினவாதம் இருக்கும் வரை விமோசனமே இல்லை