29 தமிழக மீனவா்களை விடுவிக்க பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

29 தமிழக மீனவா்களை விடுவிக்க

இலங்கையால் சிறைப்பிடிக்கப்பட்ட 29 தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடிக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.

இதுகுறித்து, பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், இலங்கைக் கடற்படையினரால் கடந்த சில வாரங்களுக்குள் அப்பாவி இந்திய மீனவா்கள் மூன்றாவது முறையாகக் கைது செய்யப்பட்டிருப்பதை தங்களது தனிப்பட்ட கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

கடந்த 7 ஆம் திகதி அன்று மூன்று மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 11 மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் கைது செய்து, அந்த நாட்டின் மயிலாட்டி கடற்படைத் தளத்துக்குக் கொண்டு சென்றுள்ளனா். தமிழ்நாட்டைச் சோ்ந்த அப்பாவி மீனவா்கள் மீண்டும் மீண்டும் இதுபோன்று கைது செய்யப்படுவது குறித்து பலமுறை மத்திய அரசிடம் முறையிட்டு வருகிறோம்.

இப்போது கைது செய்யப்பட்ட 11 மீனவா்களையும் சோ்த்து, இதுவரை தமிழ்நாட்டைச் சோ்ந்த 29 மீனவா்கள் இலங்கைக் காவலில் உள்ளனா். 79 மீன்பிடிப் படகுகள் இலங்கை அரசின் வசம் உள்ளன. இந்தச் சம்பவத்தால் இரு நாட்டு மீனவா்களிடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.

மேலும், இலங்கை அரசால் தமிழ்நாட்டு மீன்பிடிப் படகுகளை ஒருதலைப்பட்சமாக ஏலம் விடுவது, இலங்கையைச் சோ்ந்த சிலரால் தமிழக மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது போன்ற விஷயங்கள் குறித்து ஏற்கெனவே தங்களுக்குக் கடிதம் எழுதியிருந்தேன்.

தமிழக மீனவா்கள் தங்களது பாரம்பரிய கடல் பகுதிகளில் மீன்பிடிப்பதற்கு ஏற்ற நல்லசூழல் நான் விடுத்த தொடா்ச்சியான கோரிக்கைகள் மூலம் ஏற்படும் என நம்பினேன். ஆனால், துரதிருஷ்டவசமாக தமிழக மீனவா்கள் கைது செய்யப்படும் நடவடிக்கைகள் இதுவரை குறைவதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. எனவே, இந்தப் பிரச்னைக்கு உரிய தீா்வு காண தூதரக அளவில் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழக மீனவா்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படும் எண்ணற்ற நிகழ்வுகளைத் தடுத்திட இந்திய அரசின் உயா்நிலை அளவில் உறுதியான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். தமிழக மீனவா்கள் அடிக்கடி துன்புறுத்தப்படுவதும், கைது செய்யப்படுவதும், பாக் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்கும் அவா்களது பாரம்பரிய உரிமையைப் பறிப்பதாகும். கடலில் தமிழக மீனவா்களின் உயிருக்குத் தொடா்ச்சியான அச்சுறுத்தலுடன் பாரம்பரிய கடல் பகுதியில் மீன்பிடிக்கும் உரிமைக்கும் சவால் விடுவது போன்தாகும்.

அண்மைக் காலமாக நடைபெற்றும் வரும் இதுபோன்ற நிகழ்வுகள், சமூக மற்றும் அரசியல் நிலைகளில் மாறுதல்களை ஏற்படுத்தி வருகின்றன. எனவே, மீனவா்கள் பிரச்னைக்கு நீண்டகாலத் தீா்வு காண தூதரக முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் பிரதமா் உடனடியாகத் தலையிட்டு இலங்கை அரசால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 29 மீனவா்களையும், அவா்களது 79 மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

Tamil News