தேசிய பொங்கல் நிகழ்வெனக் கூறி தமிழர் தாயகத்தில் ஜனாதிபதி காலடி வைப்பதை அங்கீகரிக்க முடியாது – அருட்தந்தை மா. சத்திவேல்

தேசிய பொங்கல் நிகழ்வெனக் கூறி ஜனாதிபதி தமிழர் தாயகத்தில் காலடி வைப்பதை அங்கீகரிக்க முடியாது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை (ஜன.14) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவித்திருக்கும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

தைப்பொங்கல் என்பது பானையும் அரிசியும் அடுப்பும் சம்பந்தப்பட்ட விடயம் மட்டுமல்ல, உழைப்பாளர்களின் வியர்வை, அதனால் விளைந்த விளைச்சல், உழைப்பு, உழைப்புக்கு அடிப்படை காரணமான மண், அதனுடைய உரிமை கலந்த விடயமாகும். இதற்குள்ளே தான் வாழ்வும் வளமும் தங்கியிருக்கிறது. கலாசார சிறப்போடு தேச உணர்வும் அதன் பாதுகாப்பும் அதற்கான உறுதியும் மேலோங்கி இருக்கின்றது.

இவற்றையெல்லாம் சிதைத்தழித்து தொடர் அழிவுகளுக்கும் திட்டமிட்டுக்கொண்டு, தேசிய பொங்கல் என்று ஜனாதிபதி தமிழர் தாயகத்தில் காலடி வைப்பதையோ, அவரின் வருகையை வரவேற்பதையோ நாம் எந்த வகையிலும் அங்கீகரிக்க முடியாது. வியர்வை விதைத்த நிலம், உழுது விளைந்த நிலம், பொங்கலிட்டு மகிழ்ச்சியோடு உறவுகளோடு கூடி பகிர்ந்து உண்ட நிலம் இன்று  இராணுவத்திடம் சிக்கியுள்ளது.

அரச திணைக்களங்கள் பேரினவாத சிந்தனையோடு தமிழர்களின் நிலத்தையும் வாழ்வையும் தொடர்ந்து சூறையாடிவரும் காலமிது. இவற்றுக்கு மத்தியில் தேசிய தைப்பொங்கல் என்ற அரசியல் நாடகம். இதனை ஏற்க தமிழர்கள் ஏமாளிகள் அல்லர் என்பதை போலி தேசியவாதிகள் உணர வேண்டும்.

தமிழர்களின் கலாசாரத்தை முற்றாக அழிப்பதற்கு போதைப்பொருட்களின் பாவனையும் எங்கும் வியாபித்துள்ளது. இதற்குப் பின்னணியில் அரச படைகள் இருப்பதாகவும் மக்கள் சந்தேகிக்கின்றனர்.

நாட்டில் வேறெந்த பிரதேசத்திலும் இல்லாத அளவுக்கு முப்படையினரும், காவல்துறையினரும் , அவர்களுக்கு உதவியாக இரகசிய காவல்துறையினரும், அவர்களின் புலனாய்வாளர்களும், அவர்களோடு சேர்ந்து இயங்கும் ஒட்டுக் குழுக்களும் பலமாக இருக்கும்போது போதைப்பொருட்கள் வடக்கு கிழக்கில் அதிகரித்துள்ளதென்றால், அதற்கு பொறுப்பேற்க வேண்டியது, பாதுகாப்பு அமைச்சும் பாதுகாப்புக்கு பொறுப்பான ஜனாதிபதியுமே.

இத்தகைய கலாசார அழிவை தமிழர் தாயகத்தில் விதைத்து, அதன் அறுவடையில் மகிழ்ந்துதானா ஜனாதிபதி தேசிய தைப்பொங்கல் என தமிழர் தாயகத்தில் காலடி வைக்கிறார் என்றே கேட்கிறோம். தமிழர்களின்  தேசிய பாதுகாப்புக்காக போராடி உயிர்த்தியாகம் செய்தோரை சொந்த மண்ணிலே நினைவுகூர முடியாது.

இறுதி யுத்தத்தில் வான் தாக்குதலாலும், நச்சு குண்டுகளாலும் படுகொலை செய்யப்பட்டோரை கூட்டாக நினைவுகூருவதற்கு முடியாதுள்ளது.

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி இல்லை. தமிழர் தேசியத்தின் உயிர்த்துடிப்போடு இயங்கியவர்கள் அரசியல் கைதிகளாகி விடுதலையின்றி வாடுகின்றனர். இவற்றுக்கெல்லாம் அடிப்படை காரணகர்த்தாவான தற்போதைய ஜனாதிபதி, தேசிய தைப்பொங்கல் என தமிழர்கள் மத்தியில் வந்து, உழைப்பின் விழாவை, பாரம்பரிய தேசிய நிகழ்வை அசிங்கப்படுத்துவதற்கு இடமளிக்கக் கூடாது.

அத்தோடு தேசிய தைப்பொங்கல் என தமிழர்களை கூட்டிச் சேர்க்கும் செயற்பாட்டிலும் பல அரசியல் கைக்கூலிகள் நம் மத்தியில் தோன்றி இயங்கத் தொடங்கியுள்ளனர். இது இவர்களின் அரசியலாகும்.

இவர்கள் காலகாலமாக எமக்கு எதிராகவே செயற்பட்டு வந்துள்ளனர். இத்தகைய புல்லுருவிகளை அகற்றி, தமிழர் தாயக அரசியலை காப்பதற்கு உறுதிகொண்டு, நிலம் காக்கும் பொங்கல் எம் மண்ணிலே பொங்க சக்திகொள்வோம் என தெரிவித்துள்ளார்.