பிரான்ஸ் சென்ற 46 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

கடல் மார்க்கமாக ரீயூனியன் தீவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த 46 இலங்கை பிரஜைகளை அந்நாட்டு அதிகாரிகள் விமானம் மூலம் திருப்பி அனுப்பியுள்ளனர்.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி நீர்கொழும்பில் இருந்து பல நாள் மீன்பிடி இழுவை படகில் குறித்த நபர்கள் புறப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

தனிநபர்கள் குழுவில் பல நாள் மீன்பிடி கப்பலின் பணியாளர்கள், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 43 ஆண்கள் உள்ளனர். 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி பிரான்சின் ரீயூனியன் தீவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, சிலாபம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இவர்கள் அனைவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.