பிரச்சினைகளை தேடாமல் தீர்வுகளை அறிவிக்க வேண்டும் – மனோ கணேசன்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மலையகத்திற்கான விஜயத்தை மேற்கொண்டு பிரச்சினைகளை தேடாமல், தீர்வுகளை அறிவிக்க வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வடக்கிற்கு செல்வதைப் போன்று மலையகத்திற்கும் அரசியல் விஜயம் மேற்கொள்ள உள்ளதாகவும் அங்கு சந்திப்பதற்கு வருமாறும் ஜனாதிபதி தம்மிடம் நேரடியாக கூறியதாக மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பெருந்தோட்டப் புறங்களில் உணவின்மை 43 வீதமாகவும் வறுமை 53 வீதமாகவும் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையும் உலக வங்கியும் தெரிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மலையகத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளும் போது பிரச்சினைகளை தேடாமல் தீர்வுகளை அறிவிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

200 வருடங்களாக உழைத்து நாட்டை உருவாக்கிய பெருந்தோட்ட மக்களின் இன்றைய நிலைமை பற்றி சர்வதேச சமூகம் கூறுவதை கேட்டு ஜனாதிபதி பெருந்தோட்ட மக்களிடம் மன்னிப்பையே கோர வேண்டியுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா, இந்தியாவின் உதவிகளைப் பெற்று பெருந்தோட்ட மக்களின் உணவு பிரச்சினைகளை முதலில் கவனிக்குமாறும் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.