எல்லைப் பாதுகாப்பு தொடர்பாக சீனா இயற்றியுள்ள புதிய சட்டம் ஒரு தலைப்பட்சமானது என இந்தியா தெரிவித்துள்ளது.
முந்தைய ஒப்பந்தங்களை மீறும் வகையில் இந்த புதிய சட்டம் அமைந்துள்ளதாக மத்திய அரசு சுட்டிக்காட்டி உள்ளது. புதிய சட்டத்தின் கீழ் இரு நாடுகளின் எல்லைப் பகுதியில் சீன இராணுவம் தன்னிச்சையாக எத்தகைய நடவடிக்கையையும் மேற் கொள்வதற்கான அதிகாரம் வழங்கப்படக் கூடாது என இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
“புதிய சட்டத்தில் உள்ள சில அம்சங்கள் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒப்பந்தங்களை மீறும் வகையில் உள்ளன. அதில் குறிப்பிட்டுள்ளபடி, எல்லைப் பகுதியில் நடவடிக்கைகளை மேற்கொள்வதை சீனா தவிர்க்கும் என இந்தியா எதிர்பார்க்கிறது,” என வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.
சீனாவின் புதிய சட்டத்தால் எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் சிக்கல் ஏற்படும் என்றும் இதைத் தவிர்ப்பது சீனாவின் கையில்தான் உள்ளது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இகற்கிடையே, ஜம்மு காஷ்மீர் முழுமையாக இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் வரும் என இந்திய விமானப் படையின் மேற்கு பிரிவுத் தலைவரான ஏர் மார்ஷல் அமித் தேவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்களை அந்நாடு சரியாக நடத்துவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ஜம்மு காஷ்மீரை முழுமையாக இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே நமது இலக்கு. எனினும், ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது தொடர்பாக தற்போது எந்தத் திட்டமும் செயல்படுத்த மாட்டாது,” என்றார் ஏர் மார்ஷல் அமித் தேவ்.
இதற்கிடையே, தென்பசிபிக் கடற்பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு இந்தியா மறைமுகமாக கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்திய கடற்படையின் மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய கடற்படைத் தலைவர் கரம்பீர் சிங், இந்திய, பசிபிக் வட்டாரத்தில் ஆதிக்கம் செலுத்த சில நாடுகள் நிலப்பகுதியை மையமாகக் கொண்ட வட்டார மனநிலையைப் பயன்படுத்துவதாக குறிப்பிட்டார்.
வியட்நாம், பிலிப்பீன்ஸ், மலேசியா, புருணை, தைவான் உள்ளிட்ட நாடுகளுக்கு இறையாண்மை தொடர்பான பிரச்சினைகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையே, அனைத்து நாடுகளின் உரிமைகளையும் மதிப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கடல்சார் பிரச்சினைகளில் இந்தோ-பசிபிக் வட்டார நாடுகள் இடையே ஒருங்கிணைந்த செயல்பாடுகள் தேவை என்றும் பொதுவான நோக்கங்களைக் கண்டறிய வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தோ-பசிபிக் வட்டாரம் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.