Home Blog Page 89

செம்மணி புதைகுழியும் அம்மணியின் ஆட்சியும்!

இன்றுவரை (14-07-2025) செம்மணியில் 65,தமிழரின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு.
1994, நவம்பர்,12 தொடக்கம் 2005, நவம்பர்,19 வரை 11 வருடங்களாக ஜனாதிபதியாக பதவியில் இருந்தவர்  சமாதானப்புறா என அழைக்கப்பட்ட சந்திரிக்கா குமாரதுங்க அவர் காலத்தில் இடம்பெற்ற இனப்படு கொலை விபரம்:
1. 1995 யூலை 09, நவாலி தேவாலய படுகொலை-131 தமிழர்கள்.
2. 1995 செப்டம்பர்  22 நாகர்கோயில் பாடாசாலை படு கொலை-137  தமிழர்கள்.
3. 1996 செம்மணிப்படுகொலை-140 தமிழர்கள்.
4. 1996 பெப்ரவரி 11 குமரபுரம் படுகொலை -143 தமிழர் கள்.
5. 1996 மார்ச் 16 நாச்சிக்குடா படுகொலை -146, தமிழர்கள்.
6. 1996 மே 17 யாழ் தம்பிராஜ் சந்தை குண்டுவீச்சு-148 தமிழர்கள்.
7. 1996 யூலை 24-மல்லாவி படுகொலை -150 தமிழர்கள்.
8. 1996 செப்டம்பர் 07 கைதடி கிருஷாந்தி உட்பட தமிழினப்படுகொலை -151 தமிழர்கள்.
9. 1996 செப்டம்பர், 1997 ஆகஷ்ட் 15 இரண்டு தினங்கள் வவுனிக்குளம் படுகொலை -160, தமிழர்கள்
10. 1996 செப்டம்பர் 27 கோணாவில் குண்டு வீச்சு படுகொலை-153 தமிழர்கள்.
11. 1997 மே13 முள்ளிவாய்க்கால் படுகொலை-155 தமிழர்கள்.
12. 1997 யூன் 08 மாங்குலம் செல்வீச்சு படுகொலை-156 தமிழர்கள்.
13. 1997 யூலை05 பன்னங்கட்டி படுகொலை-158 தமிழர்கள்.
14. 1997யூலை15 அக்கிராசன் அரசினர் வைத்தியசாலை படுகொலை-159 தமிழர்கள்.
15. 1998பெப்ரவரி01 தம்பலகாமம் படுகொலை-162 தமிழர்.
16. 1998 மார்ச்26 பழைய வட்டக்கச்சி படுகொலை -163 தமிழர்கள்.
17. 1998 யூன்10 சுதந்திரபுரம் படுகொலை -165 தமிழர்கள்.
18. 1998 கிளிநொச்சி நகர் படுகொலை-142 தமிழர்கள்.
19. 1998 நவம்பர் 25 விசுவமடு படுகொலை -167 தமிழர்கள்.
20. 1998 டிசம்பர்02 சுண்டிக்குளம் படுகொலை-169 தமிழர்கள்.
21. 1999 செப்ரம்பர்15மந்துவில் படுகொலை-169 தமிழர்கள்.
22. 1999நவம்பர்03 பாலிநகர் படுகொலை -172 தமிழர்கள்.
23. 1999 நவம்பர்20 மன்னார் மடுதேவாலயம்  படுகொலை- 173 தமிழர்கள்.
24. 2000 அக்கோடபர்25 பிந்துனு வெவ படுகொலை- 177 தமிழர்கள்.
25. 2000 டிசம்பர்11 மிருசிவில் படுகொலை -180 தமிழர்கள்.
ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சி 11 வருடங்கள் அதில் முக்கியமான 25 படுகொலைகள் அவரின் ஆட்சியி லேயே இடம்பெற்றது.
சந்திரிகாவின் ஆட்சிக்கு முன்பிருந்த ஐனாதிபதிகளான ஜே.ஆர்.ஜெயவர்தன, ஆர். பிரேமதாஸ, டி வி.விஜயதுங்க, சந்திரிகாவின் ஆட்சியில் இருந்து கைமாறிய மகிந்தராசபக்ச, காலத்து இனப் படுகொலைகள் பற்றிய விபரம் இன்னும் ஒரு பதிவில் எதிர் பாருங்கள்.
தற்போது பேசும் பொருளாக மாறியு
ள்ள யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி, சித்துபாத்தி இந்துமயானத்தில் தோண்டப்படும் புதைகுழிகளில் இருந்து இதுவரை சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என 40க்கு மேற்பட்ட தமிழர்களின் எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.அவைகள் அனைத்தும் சந்திரிகா ஆட்சிக்காலத்தில் நடந் தவை என கூறப்படுவதால் அவருடைய ஆட்சிக் கால படுகொலைகள் மட்டும் அறிவதற்கான பதிவே இது.
இன்னும் எத்தனை எலும்பு கூடுகள் அங்கிருந்து எடுக்கப்படும் என்பதையும் பார்ப் போம்.
இனப்படுகொலை வரலாறுகளை இன் றைய இளைஞர்கள் அறியவேண்டும் என்பதற் காகவே இதனை பதிவிட்டேன்.

இஸ்ரேலின் மொசாட்டை மடக்கிய ஈரான்

ஈரானிய ஹண்டாலா ஹேக்கர் கள் இஸ்ரேலிய ஆதரவு பெற்ற ஈரான் இன்டர்நேஷனல் பிரச்சார மையத்தை வெற்றிகரமாக ஹேக் செய்துள்ளனர். ஈரான் இன்டர்நேஷனலின் முக்கிய செய்தி பெறும் கணக்கு கையகப்
படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. தகவல் தருபவர்கள், உளவாளிகள், துரோகிகள் மற்றும் வெளிநாட்டு முகவர்களுடன் தொடர்பு கொள்வதற்காக “பாதுகாப்பான வழி” என்று அழைக் கப்படும் இந்த சேனல், இப்போது ஹண்டாலாவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த சேனலுடன் பகிரப்ப டும், உள்வரும் அனைத்து செய்திகள், இணைப்புகள், அறிக்கைகள், படங்கள் மற்றும் வீடியோக்கள் முழுமையாகப் பிரித்தெடுக்கப்பட் டுள்ளன. உள்ளடக்கம் செயலாக்கப்பட்டு பல உளவுத்துறை மற்றும் அடையாள தரவுத்தளங்கள் இனங்காணப்பட்டு அவர்களின் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள் ளன.
இந்த நெட்வொர்க்கைத் தொடர்பு கொண்ட 71,000 க்கும் மேற்பட்ட நபர்களின் முழு அடை யாள சுயவிவரங்கள் தன்னிடம் இருப்பதாக ஹண்டாலா நிறுவனம் கூறுகின்றது. பெயர்கள் மற்றும் தரவு இப்போது வகைப்படுத்தப்பட்டு, அட்டவணைப்படுத்தப்பட்டு, காப்பகப்படுத் தப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் விரைவில் வெளியிடப்படும் என அது அறிவித்துள்ளது.
ஊடகம் என்ற போர்வையில் மொசாட் இயக்கிய உளவு மற்றும் செல்வாக்கு நெட்வொர்க்கின் இருப்பை கையகப்படுத்தப் பட்ட ஆவணங்களின்  பகுப்பாய்வு உறுதிப் படுத்துகிறது, இது “சுயாதீன பத்திரிகை” என்ற தவறான கொடியின் கீழ் செயற்பட்டுள்ளது என்று ஹண்டாலா தெரிவித்துள்ளது.

இலங்கையுடன் கூட்டுறவைக் கட்டியெழுப்புவதற்கு தயார்: சீனா அறிவிப்பு

இலங்கையுடன் நீடித்த நட்பு மற்றும் நேர்மையான பரஸ்பர உதவியை அடிப்படையாகக் கொண்ட கூட்டுறவைக் கட்டியெழுப்புவதற்கு தயாராக உள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடனான சந்திப்பின்போது, சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி (Wang Yi) இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பில், இரு தரப்பினரும் பட்டுப்பாதை திட்டத்தில் இணைந்து செயல்படுவதற்கும் முக்கியமான கட்டுமான திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவதற்கும், சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை துரிதமாக மேற்கொள்வதற்கும் ஒப்புக்கொண்டனர்.

கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற பெரிய திட்டங்கள் இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் என வாங் யி தெரிவித்துள்ளார்.

அத்துடன், பசுமை வலுசக்தி, டிஜிட்டல் பொருளாதாரம், நவீன விவசாயம் மற்றும் கடல்சார் பொருளாதாரம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். சீன-இலங்கை கடல்சார் ஒத்துழைப்பானது, பரஸ்பரம் நன்மை பயக்கும் எனவும் அது மூன்றாம் தரப்பினரை இலக்காகக் கொண்டதல்ல எனவும் சுட்டிக்காட்டிய அவர், மூன்றாம் தரப்பு அதில் தலையிடக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்த சந்திப்பில் கருத்துரைத்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இலங்கை சீனாவுடன் உள்ள உறவுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது எனவும் ஒரே சீனா கொள்கையை உறுதியாக கடைப்பிடிக்கிறது என்றும் கூறினார்.

அமெரிக்காவிடமிருந்து மேலும் சலுகைகளை பெற முயற்சிப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

அமெரிக்காவிடமிருந்து மேலும் சலுகைகளை பெறுவதற்கு தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஏற்றுமதியாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பொன்றில் கருத்துரைத்த ஜனாதிபதி, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாகவே இலங்கைக்கு விதிக்கப்பட்ட 44 சதவீத தீர்வை வரி, 30 சதவீதமாக குறைக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

அந்த பேச்சுவார்த்தைகளை தொடர்வதன் மூலம் மேலும் சலுகைகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம், வர்த்தக சமூகம் மற்றும் மக்களின் வாழ்க்கைக்கு மிகவும் சாதகமான திருத்தங்களை மேற்கொள்வதே அரசாங்கத்தின் விருப்பம் எனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்த சந்திப்பின்போது அமெரிக்காவினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய தீர்வை வரிக் கொள்கை தொடர்பான கலந்துரையாடல்களின் முன்னேற்றம் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன், புதிய சந்தை அணுகுமுறைகளை அடையாளம் காண அரசாங்கம் மற்றும் தனியார் துறையும் இணைந்து செயற்படுவதன் அவசியம் மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தலுக்கான வாய்ப்புகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவத்துள்ளது.

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதராக எரிக் மேயரை நியமிக்க பரிந்துரை !

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதராக எரக் மேயரை (Eric Meyer) நியமிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிந்துரை செய்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இந்நிலையில், எரிக் மேயரின் பெயரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிந்துரை செய்து அமெரிக்க செனட் சபைக்கு உறுதிப்படுத்தலுக்காக சமர்ப்பித்துள்ளார்.

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், சிரேஷ்ட இராஜதந்திர சேவையில் கடமையாற்றும் ஒரு தொழில்சார் அதிகாரி ஆவார். தற்போது எரிக் மேயர், தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் சிரேஷ்ட பணியக அதிகாரியாக செயல்படுகிறார்.

அத்துடன் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, கஸகஸ்தான், கிர்கிஸ்தான், மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் அமெரிக்க அரசின் கொள்கை முன்னுரிமைகளை ஒருங்கிணைக்கும் பணிகளை முன்னெடுத்து வருகிறார்.

அண்மையில், எரிக் மேயர், நோர்வேயில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தற்காலிக தூதராகவும், வடமேசிடோனியாவின் ஸ்கோப்பே நகரத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தற்காலிக தூதராகவும், துணை தூதராகவும் பணியாற்றியுள்ளார்.

இதேவேளை, எரிக் மேயர், மத்திய ஆசியாவில் கஸகஸ்தானின் அமெரிக்கத் தூதராக செயற்பட்டு, அமெரிக்க நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தியதுடன், பல நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் பணிகளையும் மேற்கொண்டார்.

வொஷிங்டனில் தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள் பணியகத்தில் சிறப்பு உதவியாளர் மற்றும் சிரேஷ்ட ஆலோசகராக எரிக் மேயர் பணியாற்றியுள்ளார்.

அத்துடன் கம்போடியாவில் தூதரகத் தலைமை அதிகாரியாகவும், இடைக்கால துணை தூதராகவும் செயல்பட்டுள்ளார். பின்லாந்திலுள்ள அமெரிக்க தூதராகவும் கடமையாற்றிய எரிக் மேயர், ஆர்ஜன்டீனாவின் துணை தூதராகவும், பின்னர் எகிப்தின் கெய்ரோவிலுள்ள பண்பாட்டு விவகார தூதராகவும் பணியாற்றினார்.

வொஷிங்டனில், ஆர்க்டிக் கவுன்சிலின் அமெரிக்கத் தலைவராக எரிக் மேயர் இருந்தபோது கடல்சார், சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் விவகாரங்களுக்கான பணியகத்தின் ஆலோசகராகவும் செயற்பட்டுள்ளார்.

அமெரிக்க வெளியுறவு துறைக்குள் இணைவதற்கு முன்னர் எரிக் மேயர், விமானப் போக்குவரத்து துறையில் நிறுவன விற்பனை மற்றும் அரச தொடர்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தார்.

எரிக் மேயர், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பெர்க்லி வளாகத்தில் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றுள்ளதுடன் ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டமும் பெற்றுள்ளார்.

அவருக்கு அமெரிக்க வெளியுறவு துறையிலிருந்து பல உயரிய பாராட்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. எரிக் மேயர் டெனிஷ், பிரெஞ்சு, கம்மேர், ரஷ்யன் மற்றும் ஸ்பானிஷ் ஆகிய மொழிகளை பேசக்கூடிய ஆற்றலுடையவர்.

இதேவேளை, மலேசியாவிற்கான அமெரிக்காவின் தூதுவராக புளோரிடாவைச் சேர்ந்த, நிக்கோலஸ் அடம்ஸின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதுடன் தாய்லாந்திற்கான அமெரிக்கத் தூதுவராக வேர்ஜினயாவைச் சேர்ந்த ஷான் ஓ நீலின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் கசகஸ்தானுக்கான அமெரிக்கத் தூதுவராக ஒஹியோவைச் சேர்ந்த ஜூலி ஸ்டஃப்டின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழர்கள் ‘தந்திரோபாய நடுநிலைமை’ மூலம் தங்கள் இறைமையைக் காக்க வேண்டிய காலம் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 347

கடந்த வாரத்தில் அமெரிக்க அரசுத் தலைவர் ட்ரம்ப் சிறிலங்காவுக்கு 30 வீத இறக்குமதி வரியினை விதித்து அனுப்பிய கடிதத்தில், சிறிலங்கா அசாதாரண நட்பு நாடு என்று குறிப்பிட்டுள்ளார். அதே வேளை மலேசியாவில் நடைபெற்ற ஆசியான் எனப்படும் தென்கிழக்காசியாவின் கூட்டிணைவு மாநாட்டில் ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சர் செர்கே லவ்ரோ சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திடம் உரையாடுகையில் “சிறிலங்கா ரஸ்யாவின் நம்பத்தகுந்த பங்காளி நாடு எனவும் பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்குச் சிறிலங்கா கடந்த அக்டோபரில் அனுப்பிய விண்ணப்பத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் அந்நகர்வு வரவேற்கத்தக்கதெனவும், அதற்கு ரஸ்யா முழுமையான ஆதரவை அளிக்கும்” என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.
சிறிலங்காவின் மொத்த அதிகாரபூர்வமான டொலர் இருப்பு இன்று  600 கோடி டொலர்கள் என்ற நிலையில் இதில் ஒருபகுதி சீன விதிமுறைகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் டொலர் இருப்புப் பயன்பாட்டுக்கான நிவாரணமாக இந்தியா 100 கோடி டொலர்களை அதில் 80 கோடி டொலர்களுக்கு மேல் மானியங்களாகவே கொடுத்துள்ளது. அதே வேளை பிரித்தானியா வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளின் வர்த்தகத் திட்டத்தின் கீழ் வளர்ச்சிக்கான வர்த்தகம் என்ற சிறப்புரிமையினை சிறிலங்காவுக்கும் வழங்கியுள்ளதால் சிறிலங்காவின் ஆடையுற்பத்தி போன்ற துறைகளுக்கான உள்ளீடுகளை சுதந்திரமாகப் பெறவும் உற்பத்தியினை வரிவிலக்குடன் பிரித்தானியாவில் சந்தைப்படுத்தவும் கூடிய பல வசதிகளைச் சிறிலங்கா பெற்றுள்ளது. இவைகளை எல்லாம் பார்க்கும் பொழுது அமெரிக்காவின் சிறிலங்காவுக்கான 30 வீத வரியினைக் கூட ஆகஸ்ட் முதலாம் திகதிக்குள் சிறிலங்கா அமெரிக்காவின் வளர்ச்சிக்கான வேறு சலுகைகளை உறுதிப்படுத்தி மேலும் குறைப்பதற்கான சாத்தியக் கூறுகள் கூட சிறீலங்காவுக்கு இன்னமும் உண்டு என்பதையும் உணரவைக்கிறது.
அமெரிக்க சீன இந்திய பிரித்தானியாவின் கடந்தவார சிறிலங்கா குறித்த செயற்பாடுகள்  சிறிலங்கா இன்றைய உலகின் அமெரிக்காவின் வர்த்தகப் போருக்கும் தொழில்நுட்பப் போருக்கும் தனது எல்லா நாடுகளுடனுமான ‘ தந்திரோபாய நடுநிலை’ மூலம் எதிர்கொள்ளும் என்கிற நம்பிக்கையை அளிக்கிறது. சிங்களவர்களின் இறைமையைப் பாதுகாக்க 1948 முதலே சிங்கள அரசாங்கங்கள் தொடர்ச்சியாக இந்த “தந்திரோபாய நடுநிலை” போக்கை கடந்த 77 ஆண்டுகளாகவே தெளிவாகக் கையாண்டு வருகின்றனர். ஆனால் ஈழத்தமிழர்களின் அரசியல்வாதிகள் உலக அரசியல் முறைமையுள் பக்கசார்பான நிலையினையே அன்றும் இன்றும் தொடர்ந்து எடுத்து வருவதாலேயே ஈழத்தமிழர்களின் இறைமையுள்ள தாயகத்தில் அவர்களின் தேசியத்தை முன்னிலைப்படுத்தி தங்களின் பாதுகாப்பான அமைதியையும் வளர்ச்சிகளையும் ஈழத்தமிழர்களால் உறுதிப்படுத்த இயலாதுள்ளது. தந்திரோபாய நடுநிலை என்பது உணர்ச்சி அரசியல் விருப்பு வெறுப்பு அரசியலைக் கடந்து சமகாலத்தில் உள்ள உலக அரசியல் முறைமைகளின் அரசியல் பொருளாதார எதார்த்தத்தைக் கருத்தில் கொண்டு சமகாலப் பிரச்சினைகளுக்கு தங்களின் இறைமையைத் தேசியத்தை இழக்காது உரையாடல்கள் பங்காண்மைகள் கூட்டாண்மைகள் வழி ஏற்புடைய தீர்வுகளை உருவாக்குவது.
உதாரணமாக சிறிலங்காவின் இன்றைய ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தியினரின் மூலவர்கள் 1965 இல் ரஸ்ய சீன சார்பான சிங்கள இடதுசாரி இயக்கமாகவே கருக்கொண்டவர்கள். அமெரிக்க எதிர்ப்பாளர்களாகவே உலகிற்கு அறியப்பட்டவர்கள்.   சிங்கள ஆட்சியாளர்களால் பயங்கரவாதிகளாகவே பிரகனடப்படுத்தப்பட்டவர்கள். பயங்கர வாதத்தடைச்சட்டத்தின் கொடுமைகளை அனுபவித்தவர்கள். 1970 இல் இந்தியப்படைகளின் நேரடியான நெறிப்படுத்தலில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சியில் படைகளால் முதலிலும் பின்னர் மேற்குலக ஆதரவுள்ள ஐக்கிய தேசியக்கட்சியின்  பிரேமதாசாவின் ஆட்சியில் அடுத்தும் தங்கள் போராளிகளைப் பல்லாயிரக்கணக்கில் இழந்த வரலாறு உடையவர்கள்.
வலிந்து காணாமால் ஆக்கப்பட்டோரால் நிறைந்தவர்கள். ஆயினும் அந்த வலிகளையும் வேதனைகளையும் பிரிவுகளையும் இழப்புகளையும் மீளவும் மீளவும் நினைந்து செயற்பாடின்றி சோர்ந்து ஒடுங்கிப் போகாது ‘தந்திரோபாய நடுநிலை’ யினை அரசியலாக்கியே இன்று அதே சிறிலங்காவின் ஆட்சியாளராக மட்டுமல்ல தம்மை ஒடுக்கிய பிராந்திய மேலாண்மைகள் வல்லாண்மைகள் தமக்கே உதவி செய்ய வைக்கும் ஆட்சியாளர்களாகவும் சிறிலங்காவில் விளங்குகின்றார்கள் என்பது ‘தந்திரோபாய நடுநிலை’ அரசியல் செயற்பாட்டின் சமகாலச் சான்றாக விளங்குகின்றார்கள். இதனால் தேசிய மக்கள் சக்தி தனது வரலாற்றின் நினைவை மறந்தவர்களாகவோ அதற்கான தண்டனை நீதியை மறந்து விட்டவர்களாகவோ இல்லை. தம்மைப்பபலப்படுத்தி எதற்காகத் தமது போராளிகள் உயிரிழந்தார்களோ ஊனமடைந்தார்களோ வாழ்விழந்தார்களோ அதனை சமகாலத்தின் ஒப்புரவுடன் நடைமுறைப்படுத்த முயன்று கொண்டிருக்கின்றார்கள் என்பதே உண்மை.
ஆனால் 1972இல் சிங்கள பௌத்த சிறிலங்கா குடியரசின் பின்னர் அனைத்துச் சிங்களவர்களுமே அவர்கள் வலதுசாரிகளாக இருந்தாலென்ன இடதுசாரிகளாக இருந்தாலென்ன ஈழத்தமிழர்களின் இறைமையை இனஅழிப்பு அரசியலால் ஒடுக்கி அவர்களின் நிலத்தை படைபலத்தால் ஆக்கிரமித்து தங்களின் சிங்கள கண்டி கோட்டே அரசுகளின் எல்லைகளைக் கடந்து ஈழத்தமிழரின் யாழ்ப்பாண – வன்னி அரசுக்களின் எல்லைகளை சிங்கள ஆட்சிக்குள் உட்படுத்தும் நோக்கும் போக்கும் உடைய அரசியலையே இலங்கைத் தீவில் படைபலம் கொண்டும் அரசபயங்கரவாதம் கொண்டும் செய்து வருகின்றனர். இதற்கு இவர்கள் மட்டுமல்ல என்றும் எந்தச் சிங்கள அரசுக்களும் கூட விதிவிலக்காக மாட்டாது. இந்நிலையில் ஈழத்தமிழர்கள் தாயகத்திலும் அனைத்து உலகிலும் ‘தந்திரோபாய நடுநிலைமை’ யைப் பின்பற்றி உலக நாடுகளுடனும் உலக அமைப்புக்களுடனும் தங்களது இறைமையைப் பாதுகாப்பதற்கான சனநாயக வழியிலான அனைத்து செயற்பாடுகளையும் உடன் தொடங்க வேண்டுமென்பதே இலக்கின் இவ்வார அழைப்பாக உள்ளது.
பிரித்தானிய அரசர் பிரான்சிய அரசத்தலைவரை அரசவிருந்தினராக அழைத்து பிரதமர் உட்பட அமைச்சர்கள் உடன் நடைபெற்ற சந்திப்புக்களும் இந்த ‘தந்திரோபாய நடுநிலை’ பால் பட்டதாகவே அமைகிறது. பிரித்தானியாவுக்கும் பிரான்சிற்கும் இடையில் எல்லைகளற்ற உறவு என்பது அறிவிக்கப்பட்டது. இதே பிரித்தானியாவும் பிரான்சும் எத்தகைய வரலாற்றுப் பகைமைகளை வெளிப்படுத்தின என்பது எல்லாம் அனைவருக்கும் தெரியும். ஆயினும் அவற்றை யெல்லாம் கடந்து இருக்கின்ற வேறுபாடுகளுக்கு நடுவிலும் சமகாலத்தில் பாதுகாப்பான அமைதிக்கும் வளர்ச்சிக்கும் தந்திரோபாய நடுநிலை காலத்தின் தேவையாகிறது என்பதற்கு இது உலக உதாரணமாக உள்ளது. அதே வேளை பிரான்சின் எந்த முடிவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளால் ஏற்கப்பட வேண்டிய நிலை பிரித்தானியா பிரிக்சிட் மூலம் வெளியே வந்ததால் உள்ளது என்ற எதார்த்தமும் பேசப்பட்டதைக் காணலாம்.  ஆகவே இந்த சில உதாரணங்களை மனதிருத்தி ஈழத்தமிழர்கள் தந்திரோபாய நடுநிலையில் தங்களை வளர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டுமென்பது இலக்கின் எண்ணம். ஏனெனில் இன்று அமெரிக்க அரசத் தலைவர் “மிரட்டுதல் வழி பணிய வைத்தல் இல்லையேல் தாக்குதல் வழி தளரவைத்தல்” என்கின்ற தந்திரோபாயத்தை உலக அரசியலில் தோற்றுவித்து அனைத்து உலக அரசியல் முறைமையை செயலிழக்க வைத்துள்ள நிலையில் ஈழத்தமிழ் மக்கள் போன்ற சிறுதேச இனங்களின் இறைமையைப் பாதுகாத்தல் என்பது மக்களே இணையும் செயற்பாடுகள் மூலமே நடைமுறைச் சாத்தியமாக உள்ளது.
இந்நிலையில் சமகாலத்தில் செம்மணியில் சிந்துபாத்தியில்  தகனமேடை அமைக்க முயன்ற பொழுது தொடங்கி சிறிலங்காவின் மனிதப் புதைகுழிகளில் இருந்து வெளியாகத் தொடங்கிய மனித எலும்புக் கூடுகளின் எண்ணிக்கை 65 ஐ தாண்டிய நிலையில் இது குறித்த அனைத்துலக விசாரணை மூலமே இதற்கான நீதியைப் பெற முடியுமென தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினருமான  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிறிலங்கா நடாளுமன்றத்தில் ஆற்றிய உரை மிக முக்கியமானதாக அமைகிறது. அதே வேளை கட்சி பேதங்களைக் கடந்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின்  அமர்வில் ஈழத்தமிழர்களின் பொது கோரிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முயற்சியாக அனைத்து ஈழத்தமிழ் அரசியல்வாதிகளையும் சந்திக்கும் திகதி குறித்த பயணத்தைத் தொடங்க இருப்பதும் முக்கியமாக காலத்தின் தேவையாக உள்ளது.
அதே நேரம் ஈழத்தமிழர்களும் “அனைத்துலக நீதி விசாரணையைக் கோருகின்றனர்” என்பதை உலகுக்கு வெளிப்படுத்தவும் ஐக்கிய நாடுகளின் செப்டெம்பர் மாத மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் அனைத்துலக நீதி விசாரணைக்கான முன்னெடுப்புக்கள் வெளிப்படுத்தப்பட வேண்டுமென்றும் கோரி  அனைத்து ஈழத்தமிழ்  மக்களையும் யூலை 26ம் நாளில் மக்கள் போராட்டத்தில் ஒன்றிணையுமாறு வடக்கு-கிழக்கு சமூக அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான கண்டுமணி லவகுசராசா அழைப்பு விடுத்துள்ளார். இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் இந்த ஈழத்தமிழ்மக்களின் போராட்டம் தாயகத்திலும் அனைத்துலகிலும் ஈழமக்களின் பெருங்குரலாக அமைய ஈழத்தமிழ் மக்கள் தேசமாக எழுவதற்கான ஆயத்தங்களை இப்போதிருந்தே செய்ய வேண்டும் என்பது இலக்கின் இவ்வார அழைப்பாக உள்ளது.
 ஆசிரியர்

Tamil News

Ilakku Weekly ePaper 347 | இலக்கு-இதழ்-347-யூலை 12, 2025

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 347 | இலக்கு-இதழ்-347-யூலை 12, 2025

Ilakku Weekly ePaper 347

Ilakku Weekly ePaper 347 | இலக்கு-இதழ்-347-யூலை 12, 2025

Ilakku Weekly ePaper 347 | இலக்கு-இதழ்-347-யூலை 12, 2025: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்

  • ஈழத்தமிழர்கள் ‘தந்திரேபாய நடுநிலைமை’ மூலம் தங்கள் இறைமையைக் காக்க வேண்டிய காலம்| ஆசிரியர் தலையங்கம்
  • செம்மணி இனவழிப்புக்கான ஆதாரம் அடுத்து என்ன? – விதுரன்
  • செம்மணியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஒரு பார்வை – தாமோதரம் பிரதீவன்- மனித உரிமை செயற்பாட்டாளர்,எழுத்தாளர்,அம்பாறை.
  • செம்மணி மனித புதை குழி: உள் நாட்டு விசாரணையில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை- (பகுதி 1) மூத்த சட்டவாளர் கே.எஸ். ரட்ணவேல்
  • இலங்கையின் சனத்தொகையில் ஈழத்தமிழர்களின் பிறப்பு வீதம் வீழ்ச்சி.! – பா. அரியநேத்திரன்
  • அபகரித்த முத்து நகர் விவசாய காணியை பெற போராடும் விவசாயிகள் – கிண்ணியான்
  • அரசுகளுடனான உறவுகளும், ஈழத் தமிழர் போராட்டமும் (பகுதி 1) மு. திருநாவுக்கரசு
  • மலையக மக்களின் வாழ்வியலுடன் இணைந்த – மருதன் ராம்
  • ஐக்கிய இராட்சியத்தில் Palestine Action அமைப்பு தடை போர் வியாபாரிகளுக்கு எதிரான சனநாயகப் போராட்டம் – B A காதர்
  • அணுவணுவாகச் செயலிழக்கிறது அணுவாயுதப் போரைத் தவிர்த்த அந்த ஒப்பந்தம். –தமிழில்: ஜெயந்திரன்
  • போர்க்களமாகும் செங்கடல் அணுவாயுதப் போருக்கு தயாராகும் ஐரோப்பா – வேல்ஸில் இருந்து அருஸ்

 

கிளிநொச்சி கோணாவிலில் நெல் அறுவடை விழா!

கிளிநொச்சி – கோணாவில் வயல் பகுதிகளில் இயந்திரம் மூலம் அறுவடை செய்யப்பட்ட நெல் அறுவடை விழா இன்று (11) இடம்பெற்றது.

காலநிலைக்கு சீரமைவான விவசாயத்திட்டத்தின் தொழில்நுட்ப உதவியுடன் மாவட்ட விவசாயத்திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய நாற்று நடும் இயந்திரம் மூலம் AT362 நெல் வர்க்கம்  நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது.

விவசாயிகள் மத்தியில் நவீன விவசாய தொழில்நுட்பங்களை வழங்கி நெல் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இயந்திரம் மூலம் நெல் அறுவடை செய்யப்பட்டது.

நெல் அறுவடை நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் வி.சோதிலட்சுமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் காலநிலைக்கு சீரமைவான விவசாயத்திட்டத்தின் பணிப்பாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன ,வடமாகாண விவசாய மேலதிக பணிப்பாளர் த.யோகேஸ்வரன், காலநிலைக்கு சீரமைவான விவசாயத்திட்டத்தின் வடமாகாண  பணிப்பாளர் A.C.பாபு,யாழ் பல்கலைக்கழக விவசாய பீட பண்ணை முகாமையாளர்,  ,விவசாயத்திணைக்கள உத்தியோகத்தர்கள் ,காலநிலைக்கு சீரமைவான விவசாயத்திட்டத்தின் உத்தியோகத்தர்கள் ,விவசாய அமைப்பு பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

மூலதனச் செலவினங்களை முறையாக செலவழிக்க வேண்டுகோள் – ஜனாதிபதி

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஏறக்குறைய 1400 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இது அண்மைக் காலத்தில் ஒரு அரசாங்கத்தால் மூலதனச் செலவீனமாக ஒதுக்கப்பட்ட மிகப் பாரிய தொகையாகும் என்றும், இந்த வருட இறுதிக்குள் அந்த நிதி ஒதுக்கீட்டை உரிய முறையில் செலவிட்டு எதிர்பார்த்த பொருளாதார அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு பங்களிப்பது அரசியல் அதிகாரம் மற்றும் அரச அதிகாரிகளின் பொறுப்பு என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

அரசியல் அதிகாரம் மற்றும் அரச அதிகாரிகள் எடுக்கும் தீர்மானங்களுக்கு தொடர்பில்லாத சாதாரண மக்களே பலியாகியுள்ளதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கு இனியும் இடமளிக்க முடியாது என்றும் வலியுறுத்தினார்.

மாத்தறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை (11) பிற்பகல் நடைபெற்ற மாத்தறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

இவ்வருடம் 5% பொருளாதார வளர்ச்சியை அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும், அரச முதலீட்டின் அதிகரிப்பு பொருளாதார வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பை வழங்கும் எனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டின் அபிவிருத்திப் பணிகளை மீள ஆரம்பிக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கம் ஒதுக்கியுள்ள மூலதனச் செலவினங்களை உரிய முறையில் செலவிடத் தவறினால் அந்த சுழற்சி முறிந்துவிடும் என்றும், எனவே இந்த நிதி ஒதுக்கீட்டை உரிய முறையில் செலவிடுவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,  இதற்கு முன்னர் மூலதனச் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, அதே அளவிலும் உரிய நேரத்திலும்  கிடைக்காத வரலாறு இந்த நாட்டில் இருந்ததையும் நினைவு கூர்ந்தார்.

2025 வரவுசெலவுத் திட்டத்தில் அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்கள் மட்டத்தில் மாத்தறை மாவட்டத்தில் அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அதன் கீழ் இதுவரை ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இங்கு மீளாய்வு செய்யப்பட்டது.

மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடி, சுகாதாரம், கல்வி, கிராமிய வீதி அபிவிருத்தி, காணி மற்றும் நீர்ப்பாசனம் ஆகிய துறைகளில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான சாத்தியமான தீர்வுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

நில்வலா உப்புத் தடுப்பு பிரச்சினை தொடர்பில் இங்கு ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியதுடன், இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக எதிர்கொண்டுள்ள பிரச்சினையைத் தீர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, அது குறித்து நடத்தப்பட்ட சுயாதீன விசாரணையில், அவதானிப்புகளை மீண்டும் பரிசீலனை செய்வதற்காக,  சம்பந்தப்பட்ட துறைகளில் வல்லுநர்கள் அடங்கிய நிபுணர் குழுவை ஒரு மாதத்திற்குள் நியமித்து  அறிக்கையொன்றைப் பெற்றுக்கொள்ளுமாறும் பணிப்புரை விடுத்தார்.

அத்துடன், மாத்தறை மாவட்டத்தில் ஏற்படும் வெள்ள நிலைமையை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கு பிரதான திட்டமொன்றின் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஆசிய அபிவிருத்தி வங்கி அல்லது உலக வங்கி மூலம் அது குறித்து மறுஆய்வு செய்து, அது நடைமுறையில் செயல்படுத்தப்படும் வரை, அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க குறுகிய கால தீர்வுகளைச் செயல்படுத்துவதன் முக்கியத்துவத்தையும்  சுட்டிக்காட்டினார்.

கழிவுப் பிரச்சினை காரணமாக மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை மற்றும் அதற்கான நடவடிக்கைகளுக்கு வசதிகளை வழங்குவது  தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

மாத்தறை மாவட்டத்தில் தற்போது பயன்படுத்தப்படாத பாரிய அரச கட்டிடங்களை செயற்திறன் மிக்க அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மாத்தறை கலாசார நிலையத்தை நிர்மாணிப்பதற்காக பெருமளவிலான பணம் செலவிடப்பட்ட போதிலும், அது பயனுள்ள அபிவிருத்திப் பணிகளுக்கு இதுவரை பயன்படுத்தப்படவில்லை என்றும், சேதமடைந்து வரும் அந்த கட்டிடம் குறித்து இறுதி முடிவு எடுப்பதற்கு உரிய முன்மொழிவுகளை விரைவாக சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

பொல்ஹேன உத்தேச கிரிக்கெட் பயிற்சி பாடசாலை நிர்மாணிப்பு தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இது தொடர்பான பரிந்துரையை தயாரித்து முன்வைக்குமாறும்,  அதற்குத் தேவையான அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா போல்ராஜ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான லால் பிரேமநாத், அஜந்த கம்மெத்தகே, சத்துர கலப்பத்தி, மொஹமட் அர்கம் இல்யாஸ், எல்.எம். அபேவிக்ரம ஆகியோர் உட்பட  மாத்தறை மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், மாத்தறை மாவட்ட செயலாளர் சந்தன திலகரத்ன உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

வவுனியா கூமாங்குளத்தில் பதற்றம்

வவுனியா கூமாங்குளம் பகுதியில் நேற்று இரவு போக்குவரத்து  காவல்துறையினர் துரத்திச்சென்றமையால் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார். இதனால் கொதிப்படைந்த ஊர்மக்கள் பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையால் அந்தப்பகுதியில் பெரும் அமைதியின்மை ஏற்ப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்…..

வெள்ளிக்கிழமை இரவு10 மணியளவில் கூமாங்குளம் மதுபாண விற்பனை நிலையம் அமைந்துள்ள வீதியில்இரண்டு மோட்டார் சைக்கிள்களில் காவல்துறையினர் வந்துள்ளனர்.

இதன்போது அவ்வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த நபர் ஒருவரை துரத்திச்சென்றதுடன் அவரது வாகன சக்கரத்தில்தடையினை ஏற்ப்படுத்தியதாக ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர்.இதனால் நிலை தடுமாறி கீழே வீழ்ந்த குறித்த நபர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

இதனை அவதானித்த இளைஞர்கள் மற்றும் ஊர்மக்கள் ஆத்திரமடைந்து காவல்துறையினரின் இரண்டு மோட்டார்சைக்கிள்களையும் ஒரு வாகனத்தையும் சேதப்படுத்தினர். அடாவடியான இச்செயற்ப்பாட்டிற்கு நீதி கிடைக்கவேண்டும் என தெரிவித்ததுடன்  காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரை நீண்டநேரமாக சிறைப்பிடித்து வைத்தனர்.இதனால் குறித்த பகுதியில் குழப்பநிலை ஏற்ப்பட்டது.

உயிரிழந்தவரின் சடலத்தை அகற்றுவதற்கு மறுப்பு தெரிவித்த இளைஞர்கள் நீதிபதி இங்கு வரவேண்டும் வந்த பின்னரே சடலத்தை அகற்ற அனுமதிப்போம் என தெரிவித்தனர்.

இதனால் காவல்துறையினர் இளைஞர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. இளைஞர்களின் செயற்ப்பாட்டினால் தடுமாறிய பொலிசார் நிலமையை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.

இந்த நிலையில் வவுனியா சிரேஸ்டபொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்திற்கு வருகைதந்ததுடன், இந்த மரணத்தை கொலை வழக்காக பதிவுசெய்து அதனுடன் தொடர்புடையை சந்தேகநபர்களை விசாரிப்பதாக தெரிவித்ததுடன், சடலத்தை அகற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தெரிவித்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் பொலிசார் மீது நம்பிக்கை இல்லை நீதிபதி இங்கு வரவேண்டும் என விடாப்பிடியாக நின்றனர் . இதனால் குறித்த பகுதியில் கலவரம் ஒன்று ஏற்ப்படுவதற்கான நிலைமை ஏற்ப்பட்டிருந்தது.

இந்த நிலையில் திடீர் மரணவிசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு வருகைதந்து மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தார். இதனையடுத்து பொதுமக்களின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் சடலம் அந்த பகுதியில் இருந்து அகற்றப்பட்டு பொலிசாரின் வாகனத்தில் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இதற்கு எதிர்ப்பினை வெளியிட்டபொதுமக்கள் பொலிசாருடன் கடும் வாக்குவாதத்தில்  ஈடுபட்டனர்.

உயிரிழந்தவர் கூமாங்குளம் பகுதியை சேர்ந்த இராமசாமி அந்தோணிப்பிள்ளை வயது 58 என்று தெரிவிக்கப்படுகின்றது. அவரது சடலத்திற்கு அருகில் பொலிசார் ஒருவரின் பெயர் பொறிக்கப்பட்ட இலட்சனை ஒன்றும் காணப்படுகின்றது

குறித்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெருமளவான பொலிசார் குவிக்கப்பட்டதுடன் விசேட அதிரடிப்படையினர், கலகதடுப்பு பொலிசாரும் களம் இறக்கப்பட்டிருந்தனர்.