திருகோணமலையில் முள்ளி வாய்க்கால் கஞ்சியானது சிவன் கோயிலடிக்கு முன்னால் வழங்கி வைக்கப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் நேற்று மாலை வழங்கி வைக்கப்பட்டது.
கடந்த வாரம் மூதூர் பொலிஸாரால் சம்பூரில் கஞ்சி வழங்கப்பட்ட போது ஐசிசிபீ ஆர் குற்றச் சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பில் நேற்றைய தினம் இது தொடர்பில் தடையை அகற்றக் கோரிய சமர்ப்பணத்தை சிரேஷ்ட சட்டத்தரணி க.சுகாஷ் மன்றில் வாதிட்டார் இதனை தொடர்ந்து மன்றினால் தடை உத்தரவு அகற்றப்பட்டுள்ளதை அடுத்து முள்ளி வாய்க்கால் கஞ்சிகளை வழங்கி வைத்தனர்.
திருகோணமலை சிவன் கோயிலடிக்கு முன்னால் உள்ள வீதியில் உள்ள பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு கஞ்சிகளை அருந்தினர். இதில் தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் மாவட்ட அமைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரை நேற்றிரவு சந்தித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் , சார்ள்ஸ் நிர்மலநாதன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரை அமெரிக்க தூதுவர் நேற்று சந்தித்துள்ளார்.
வட மாகாண மக்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான சவால்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்புக்கூறல் தொடர்பான அவர்களின் கோரிக்கைகள் மற்றும் சிறுபான்மையினரின் குரல்களை உறுதிப்படுத்துவதற்கான அவர்களது முன்மொழிவுகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை, அமெரிக்க தூதுவருடனான சந்திப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இன்று கருத்து தெரிவித்தார். தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான விடயங்களை அமெரிக்க தூதுவர் கேட்டறிந்து கொண்டதாக சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டார்.
முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி பகிர்ந்தளிப்பின் போது பெண்கள் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது தொடர்பான விடயங்களையும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் கேட்டறிந்து கொண்டதாக சிறிதரன் கூறினார்.
சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் Agnès Callamard இன்று இலங்கைக்கு வருகை தந்தார். சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் Agnès Callamard-இன் தெற்காசியாவிற்கான முதல் விஜயம் இதுவாகும்.
Agnès Callamard எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் 18 ஆம் திகதி, இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிலும் அவர் பங்கேற்கவுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நினைவேந்தல் தொடர்பில் ஒரு பொது கொள்கை ஏன் அரசுக்கு இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்றிரவு தொலைபேசியில் கேட்டேன். மேலும், தனிப்பட்ட இல்லம் ஒன்றுக்கு தேடி சென்று இறந்தவர்களை நினைவில் ஏந்தி நிற்கும் தமிழ் பெண்களை கதற வைத்து, இழுத்து சென்று கைது செய்யும் அளவுக்கு, ஸ்ரீலங்கா பொலிசுக்கு அப்படி என்ன அவசர தேவை இருக்கிறது?” என்றும் கேட்டேன்.
இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவா் மனோ கணேசன் தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் மேலும் தெரிவித்தவை வருமாறு-
“புலிகள் இயக்கம் சட்டப்படி தடை செய்யப்பட்டது. அது சட்ட பிரச்சினை. அதுபற்றி நான் இங்கே பேச வரவில்லை. ஆனால், அந்த இயக்கத்தின் சின்னங்கள் எதுவும் இல்லாமல் தங்கள் வீட்டில் கஞ்சி காய்ச்சி குடித்த மக்களை ஏன் தேடி போய் பொலிஸ் கைது செய்ய வேண்டும்? தடை செய்யப்பட்ட இயக்கத்தின் சின்னங்கள் இருந்தால் எப்போதும் கைது செய்யலாம் தானே. ஆகவே இதற்காக ஏன் விசேடமாக நீதிமன்ற ஆணையை கேட்டு பெற வேண்டும்? இது தெரியாமலா அந்த நீதிமன்றமும் தடை உத்தரவு தீர்ப்பு வழங்கி உள்ளது? இதில் இருக்கும் மர்மம் என்ன?
நினைவேந்தல் தொடர்பில் ஒரு பொது கொள்கை ஏன் அரசாங்கத்துக்கு இல்லை? தடை செய்யப்பட்ட இயக்கத்தின் சின்னங்கள் இல்லாமல் எவரும் தம் மறைந்த உறவுகளை நினைந்து நினைவேந்தல்களை நடத்தலாம் என அரசாங்கம் ஒரு பொது கொள்கையை அறிவித்தால் என்ன?” என்றும் நான் மீண்டும், மீண்டும் கேட்டேன்.
“இல்லை, அவர்கள் பொலிஸ் உடன் முரண் பட்டுள்ளார்கள். அதனால்தான் கைது. சட்ட ஒழுங்கு அமைச்சர் டிரான் அலஸிடம் கூறி விட்டேன். பிணை கோரிக்கையை எதிர்க்க வேண்டாம் என பொலிசுக்கு, சட்ட ஒழுங்கு அமைச்சர் டிரான் அலஸ் கூறி உள்ளார். ஆகவே அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்” என்று ஜனாதிபதி விக்கிரமசிங்க, அவசர, அவசரமாக பதில் அளித்தார்.
“பொலிஸ் அந்த வேளையில் அவர்களது வீட்டுக்கு சென்று கைது செய்ய முயன்றதால்தானே முரண்பாடு ஏற்பட்டது? முதலில் பொலிஸ் ஏன் தடை உத்தரவு பெற்றார்கள்? அரசாங்கம் சொல்லியா அதை அவர்கள் கிழக்கு மாகாணத்தில் செய்துள்ளார்கள்? என்று திருப்பி கேட்டேன். “அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்” என்று மட்டுமே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எனக்கு அவசர, அவசரமாக பதில் கூறினாரே தவிர, “நினைவேந்தல் தொடர்பில் பொது கொள்கை இல்லையா? அறிவிக்க முடியாதா?” என்ற எனது கேள்விகளுக்கு ஜனாதிபதி பதில் அளிக்கவில்லை, என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 நாட்டுப் படகிலிருந்த 14 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இந்திய கடல் எல்லை பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றத்திற்காக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கையின் எந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் வேதாரண்யம் கடலோர காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்வதா அல்லது காவலில் வைத்திருப்பதா என்பது குறித்தான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்களின் படகுகளில் ஆயுதங்கள் அல்லது வேறு ஏதேனும் பொருட்கள் வைத்திருந்தனரா என்பது குறித்தும் பொலிஸார் தீவிர விசரணையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ் பொது வேட்பாளர் விடயத்தை வலியுறுத்தும் சிவில் அமைப்புகள் சிலவற்றின் பிரதிநிதிகளை நேற்று யாழ்ப்பாணம் வந்த அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சந்தித்துப் பேசியுள்ளார்.
தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் பொது வேட்பாளர் விவகாரம் பரவலடைந்து – வரவேற்பை பெற்றுள்ள நிலையில் நிகழ்ந்த இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
வடக்கு மாகாணத்தில் உள்ள இலங்கையர்களுக்கான தொடர்ச்சியான அமெரிக்க ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுக்கான வழிகளை ஆராய்வதற்காக சிவில் சமூகம், இளைஞர்கள், உள்;ர் அரச அதிகாரிகள் மற்றும் மதத் தலைவர்கள் ஆகியோரின் பலதரப்பட்ட கண்ணோட்டங்களை கேட்பதற்காக இந்தவாரம் நான் மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளேன் என்று ஜூலி சங் கூறியிருப்பதும் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.
இலங்கையில் செயற்படும் உண்மை மற்றும் நல்லிணக்கத் திட்டமொன்று காணப்படுவது அவசியம் என தெரிவித்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு, எதிர் வரும் தேர்தல்களில் வெற்றி பெறும் தலைவர்கள் இதனை முன்னெடுப் பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கையின் தற்போதைய கடன் மறுசீரமைப்புத் திட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், அமெரிக்கா அபிவிருத்தி சகாவாக விளங்குவதற்கு தயார் இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு நிதி ஆலோசனை மற்றும் கடனை வழங்க தயார் எனவும் கூறினார்.
இரு தரப்பு உறவுகளை இலங்கை தொடர்ந்தும் வலுப்படுத்தவேண்டும் என அமெரிக்கா ஊக்குவிக்கின்றது. ஆரோக்கியமான போட்டிதன்மையை பேணுவதற்கு வெளிநாட்டு தரப்புகள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு இலங்கை வாய்ப்புகளை வழங்கவேண் டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
அதன் மூலம் கிடைக்கின்ற நன்மை களை பொதுமக்களுக்கு வழங்கவேண்டும்எனவும் அவர் கோரினார்.
சிறிய ரக ஆயுதங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைப்பது குறித்து இந்தியாவுடன் பேச்சுகளை நடத்துகிறோம் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவம், இந்தியாவின் பாதுகாப்பு தொழில்துறை ஆகியவை இணைந்த இந்தக் கூட்டு முயற்சி குறித்து இலங்கை அரசாங்கம் பேச்சில் ஈடுபட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
ஆயுதங்களை உற்பத்தி செய்வதில் இலங்கை இராணுவத்துக்கு நிபுணத்துவம் உள்ளது. உற்பத்தி தொழில்துறை குறித்து கவனம் செலுத்தவேண்டும். நாங்கள் ஏற்கனவே ஆயுதங்களை உற்பத்தி செய்கின்றோம். சிறிய அளவிலேயே அவற்றை செய்கிறோம். தற்போது, நாம் இந்தியாவுடன் பேச்சுகளில் ஈடுபட்டுள்ளோம் – பேச்சுகள் தொடர்கின்றன.
எனினும், இந்தத் தருணத்தில் நாங்கள் இந்தியாவிடமிருந்து ஆயுதங்களை
கொள்வனவு செய்வதற்கான முயற்சிக ளில் ஈடுபடவில்லை. இந்திய – இலங்கை பாதுகாப்பு உறவுகள் சிறந்த நிலையில் உள்ளன. கடந்த இரண்டு தசாப்த காலத்தில் இந்தியாவின் ஆயுத உற்பத்தித்துறை பல மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது – என்றும் கூறினார்.
திருகோணமலை சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை பகிர்ந்து முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்தவர்களை அநாகரீகமான முறையில் கைது செய்த இலங்கை பொலிசாரின் அத்துமீறலை கண்டிப்பதாக கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
திருகோணமலை சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை பகிர்ந்து முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்தவர்களை அநாகரீகமான முறையில் கைது செய்த இலங்கை பொலிசாரின் அத்துமீறலை கண்டிக்கின்றோம்.
உரிமையை வேண்டி போராடிய ஒரு இனத்தின் மீது, சர்வதேச நாடுகளை தவறாக வழி நடாத்தி இலங்கை அரசால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பாரிய இனவழிப்பினால், இறுதி எட்டு மாதங்களில் 146679 க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டனர்.
அந்தவகையில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை கொண்டு கொன்றொழிக்கப்பட்ட குழந்தைகள், சிறுவர்கள், அப்பாவி பொதுமக்களுக்கு 15 ஆண்டுகள் கழிந்தும் நீதி வழங்கப்படாத நிலையில் தமிழரின் உரிமைகள் இலங்கை அரசினாலும் அதன் ஆதரவில் இருக்கும் பெரும்பான்மை சமூகத்தினாலும் தொடர்ந்தும் மறுக்கப்பட்டும் பறிக்கப்பட்டும் வருகின்றன.
அந்த வகையில், இலங்கை அரசினாலும் அரச படைகளாலும் கொன்றுகுவிக்கப்பட்ட எமது மக்களை நினைவுகூறும் உரிமையிலும் இலங்கை அரசாங்கம் கை வைத்துள்ளது.
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவுகூறும் முகமாக ஞாயிற்றுக்கிழமை (12.05.2024) திருகோணமலை சம்பூர், சேனையூர் புவனகணபதி ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு பொதுமக்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அந்நிகழ்வில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் சமூக செயற்பாட்டாளர் கமலேஸ்வரன் விஜிதா(வயது 40), சமூக செயற்பாட்டாளர் செல்வவினோத்குமார் சுஜானி (வயது40), பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் நவரெட்ணராஜா ஹரிஹரகுமார் (வயது 43) ஆகியோருடன் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள கலைப்பிரிவு மாணவி கமலேஸ்வரன் தேமிலா (வயது 22) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதனை பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் வன்மையாக கண்டிப்பதுடன் அவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் தமிழர்களின் நினைவேந்தல் உரிமையைக்கூட மறுக்கும் இலங்கை அரசை சர்வதேசம் கண்டிப்பதுடன் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்கு அழுத்தம் வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம் என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரைன் மோதலில் இலங்கையின் ஓய்வு பெற்ற 16 இராணுவத்தினர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது ரஷ்யா மற்றும் உக்ரைனில் உள்ள ஓய்வு பெற்ற இராணுவத்தினரை வௌிவிவகார அமைச்சின் தலையீட்டுடன் நாட்டிற்கு அழைத்துவருவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய – உக்ரைன் யுத்தத்திற்கு ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களை அனுப்பிவைக்கும் ஆட்கடத்தல் தொடர்பில் இதுவரை 287 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.
இதேவேளையில், போா் முனையிலிருந்து தப்பிவந்தவா்களின் தகவல்களின்படி சுமாா் ஆயிரம் வரையிலான இலங்கையின் முன்னாள் இராணுவத்தினா் இந்த யுத்த முனையில் பணியாற்றுவதாகவும், 200 போ் வரையில் மரணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முதவா்கள் சிலா் பல இலட்சம் ரூபாவைப் பெற்றுக்கொண்டு போா் முனைக்கு ஆட்களை அனுப்பிவைப்பதாக விசாரணைகளின் போது தெரியவந்திருக்கின்றது.