Home Blog Page 3100

தமிழ் மக்கள் தமது கோரிக்கைகளை முன்வைக்கும் போது மாத்திரம், இன, மத சாயம் பூசப்படுகிறது- அமைச்சர் மனோ

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை இன்று தமிழ் -முஸ்லிம் ஐக்கியத்தின் மையப் புள்ளியாக மாறியுள்ளது. எனவே கல்முனை வடக்கு உப-பிரதேச செயலகத்தை, முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்தும் நீண்டகால கோரிக்கைக்கு உடன்பட்டு முஸ்லிம் அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள், மக்கள் பிரதிநிதிகள் தமிழ், முஸ்லிம் ஐக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டும் என அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார். இதுதொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது:

கல்முனை வடக்கு பிரதேசம், சாய்ந்தமருது பிரதேசம், கல்முனை தெற்கு பிரதேசங்களை உள்ளடக்கியதே கல்முனை மாநகரம். இதில் சாய்ந்தமருது, கல்முனை தெற்கு ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாகவும், கல்முனை வடக்கு பிரதேசத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையா கவும் வாழ்கின்றனர்.

இந் நிலையில் சாய்ந்தமருது பிரதேச முஸ்லிம் மக்கள், தமது பிரதேச செயலகத்தை, கல்முனை மாநகரசபையிலிருந்து பிரித்து முழுமையான நகரசபையாக்கும்படி போராடுகிறார்கள். அதுபோல் கல்முனை வடக்கு தமிழ் சமூக தலைவர்கள் தமது உப பிரதேச செயலகத்தை, முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்த கோருகின்றனர்.

ஒரே இனத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள், கல்முனை மாநகரசபையிலிருந்து பிரிந்து தனி நகர சபைக்காகப் போராடும் போது, சகோதர இனத்தை சார்ந்த தமிழ் மக்கள், தமது உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்த வேண்டும் எனப் போராடுவதில் என்ன தவறு இருக்கின்றது. கல்முனை வடக்கு தமிழர்களின் போராட்டத்தை எதிர்க்கும் அரசியல்வாதிகள் நாட்டுக்கும், அரசாங்கத்துக்கும் தர்க்கரீதியாக எடுத்துக் கூற வேண்டும்.

இந்த விடயம் தொடர்பில் நேற்று முன்தினமிரவு தேசிய பாதுகாப்பு சபையிலும், நாம் கருத்துகளை பறிமாற்றிக்கொண்டோம். அம்பாறையில் இன்று கல்முனை வடக்கு உப-பிரதேச செயலகத்தை, முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்த கோரி உண்ணாவிரத சாத்வீக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர்,தேரர், சுவாமிகள் மற்றும் ஏனையோர் என்னுடன் தொலைபேசியில் நேற்றுமுன்தினம் பிற்பகல் உரையாடினர்.

அத்துடன் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் என்னை சந்தித்து இதுபற்றி தீர்க்கமாக உரையாடினர். இப்பிரச்சினை தொடர்பில், துறைசார் அமைச்சர் வஜிர அபேவர்தனவுடனும், நான் கலந்தாலோசித்துள்ளேன்.அமைச்சர் தயா கமகேயும், நானும் இதுபற்றி பேசியுள்ளோம். இதை இனியும் தொடர்ந்து நீடிக்க விடுவது நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகமாக அமைந்துவிடும். இன, மத அடிப்படைகளில் கல்வி வலய, பிரதேச செயலக, உள்ளூராட்சி மன்ற எல்லைகளை நிர்ணயிப்பது தொடர்பில் மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களின் பல்வேறு மாவட்டங்களில், இன அடிப்படையிலான பிரதேச செயலகங்கள், கல்வி வலயங்கள், நிலத்தொடர்பற்றும், நிலத்தொடர் புடனும் நடைமுறையிலுள்ளன.

எனவே கல்முனை வடக்கு தமிழ் மக்கள், தமது உப-பிரதேச செயலகத்தை முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்த கோருவதில் தவறிருக்காது. அத்துடன் ஏற்கனவே இயங்கி வரும் ஒரு உப-பிரதேச செயலகத்தையே, முழு-பிரதேச செயலகமாக தரமுயர்த்தும்படி இக்கோரிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இது பிழை என்றால், கிழக்கில் இருக்கும் எத்தனையோ இனரீதியான பிரதேச செயலகங்களை, கல்வி வலயங்களை கலைக்க வேண்டும். தமிழ் மக்கள் தமது கோரிக்கைகளை முன்வைக்கும் போது மாத்திரம், அதற்கு இன, மத சாயம் பூசுவதில் என்ன நியாயம் இருக்கிறது.

தொல்பொருள் திணைக்களத்தின் காணி சுவீகரிப்புத் திட்டம்

வடக்கு கிழக்கில் 337 இடங்களை தொல்பொருள் திணைக்களம் சுவீகரிப்பதற்கு அடையாளப்படுத்தி வைத்திருப்பதாகவும்,  வடக்கு கிழக்கில் உள்ள பகுதி நிலங்களை சிறிலங்கா அரசின் கீழ் இயங்கும் தொல்பொருள் திணைக்களம் சுவீகரிக்க திட்டம் தீட்டியுள்ளதாகவும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும் இவர்களுடன் வன ஜீவராசிகள் திணைக்களம், வன இலாகா உட்பட சிறிலங்கா அரசின் கீழ் இயங்கும் அமைப்புகளும் இது போன்ற காணி சுவீகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தமிழ் மக்கள் குற்றஞ்சாட்டுவதுடன், போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். முல்லைத்தீவு, திருகோணமலை மாவட்டங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்களையும் தொல்பொருள் திணைக்களம் சுவீகரிக்கும் நடவடிக்கையில் அண்மைக்காலமாக ஈடுபட்டு வருகின்றது.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்றில் உரையாற்றும் போது, இப்போதிருக்கும் ஆட்சியிலுள்ளவர்களின் இறுதிக் கட்டத்திலாவது தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்றும், இதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டும் என்றும், போர்க் குற்ற விசாரணைகளுக்கு வெளிநாட்டு உதவி தேவை இல்லை என்று சொன்ன அரசாங்கம், ஐஎஸ் பிரச்சினைக்கு உலகநாடுகளில் ஏராளமான புலனாய்வாளர்களை விசாரணையில் இணைத்தது. இதை எதிர்க்கட்சியினரும் மௌனம் காத்து வந்தனர். என்று கூறினார்.

இதே போன்று தமிழர் பிரச்சினைக்கும் வெளிநாட்டு உதவியைப் பெற்று தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்றும் சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்றில் கோரிக்கை விடுத்தார்.

 

 

உலகின் தொன்மையான மொழி தமிழ் மொழி- பிரித்தானியா ஊடகம்

சிறீலங்கா, இந்தியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பேசப்படும் தமிழ் மொழி மிகவும் தொன்மையான மொழி என பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் டெய்லிமெயில் பத்திரிகை கடந்த செவ்வாய்க்கிழமை (18) தெரிவித்துள்ளது.

கேள்வி பதில் பகுதியில் உலகில் தற்போதும் பேசப்படும் பழமையான மொழி தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு டி.பி சால் என்பவர் பிளக்பூல் பகுதியில் இருந்து இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழி குறைந்தது 2,500 வருடங்களுக்கு முன்னைய மொழி என ஆதராங்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய மக்களும் அதனை இலகுவாக பயன்படுத்தும் தன்மை கொண்ட மொழி.

உலகில் பேசப்படும் மொழிகளில் தமிழ் 18 ஆவது இடத்தில் உள்ளதாகவும், உலகில் 70 மில்லியன் மக்கள் அதனைப் பேசுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 180 மில்லியன் டொலர் பெறுமதியான விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையின் அடுத்த பரிணாமமாக அமெரிக்காவின் அதி நவீன ஆளில்லாத உளவு விமானத்தை இன்று (20) ஈரான் சுட்டுவீழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமது நாட்டின் வான் எல்லைக்குள் பிரவேசித்த விமானத்தை நிலத்தில் இருந்து ஆகாயம் நோக்கி ஏவப்படும் ஏவுகணை மூலம் சுட்டுவீழ்த்தியுள்ளதாகவும், அமெரிக்காவுடன் முழு அளவிலான போருக்கு தயார் எனவும் ஈரான் தெரிவித்துள்ளது.

தமது நாட்டின் இறையான்மையை அமெரிக்கா மீறுவதாகவும் ஈரானிய கடற்படை தெரிவித்துள்ளது. இந்த தகவல் தொடர்பில் முதலில் கருத்துக்களைக் கூறமறுத்த அமெரிக்கா தற்போது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை ஏற்றுக்கொண்டுள்ளதுடன், அது அனைத்துலக வான்பரப்பில் பறந்ததாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் கார்மாஸ் கடற்பகுதியில் கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பும் மையத்தில் நான்கு எண்ணைக் கப்பல்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதன் பின்னர் ஓமான் கடற்பகுதியில் வைத்து எண்ணைக் கப்பல் மீது டொர்பிடோ எனப்படும் கடல் ஏவுகணை மூலம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

us drone அமெரிக்காவின் 180 மில்லியன் டொலர் பெறுமதியான விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதுஇவை அனைத்துக்கும் ஈரானே காரணம் என அமெரிக்கா தெரிவித்தபோதும் ஈரான் அதனை மறுத்துள்ளது.

இந்த நிலையில் தற்போது அமெரிக்காவின் மிக நவீன விமானத்தை ஈரான் வீழ்த்தியுள்ளது பதட்டத்தை அதிகரித்துள்ளது. சாம்-7 வகையான மீள்வடிவமைக்கப்பட்ட ஏவுகணையே இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

ஈழத் தமிழர்கள் தொடர்பில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் கொண்டுவருவது சாத்தியம் – வேல்முருகன்

வேல்முருகன் அவர்கள் தமிழக அரசியலையும் தாண்டி  உலகத் தமிழர்கள் மத்தியில் மிகவும் அறியப்பட்டவர். சொல்லுக்கு முன் செயல் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வேல்முருகன் அவர்கள் தேர்தல் அரசியலுக்கு அப்பால் மக்களின் உரிமைகளுக்கான  அனைத்து போராட்டக்களங்களையும்  தனதாக்கியவர். அரசியல் முரண்பாடுகளை கடந்து மக்களின் உரிமைக்கான போராட்டங்களில் அனைத்து அரசியல் சிவில் இயக்கங்களையும்   ஒருங்கிணைக்கும் ஆளுமை மிக்கவர்.  ஈழத் தமிழர்களின் உரிமைக்காகவும் தமிழகத்தின் உரிமைக்காகவும்   தீவிரமாக போராட்டங்களை  முன்னெடுத்து உலகத் தமிழர்களின் கவனத்தை பெற்றவர்.

இவர் இலக்கு மின்னிதழுக்கு வழங்கிய சிறப்பு பேட்டி:

கேள்வி: 2009 பின்னர் ஈழத் தமிழர்களின் உரிமைக்காக மிகப்பெரிய அளவில் அறவழியிலான போராட்டங்களை பரந்த அளவிலே முன்னெடுத்தீர்கள். ஆனால் அண்மைக் காலமாக இதன் வீரியம் சற்று குறைவடைந் துள்ளமைக்கு என்ன காரணம்?

பதில்: நான் 2009 முள்ளிவாய்க்கால் அவலத்திற்கு பின்னர் போராட்டக்களத்திற்கு வந்தவன் இல்லை. 1983 இல் அரசு ஏவிவிட்ட  கறுப்பு  யூலைக் கலவரத்திலே ஆயிரக்கணக்கான எமது தொப்புள் கொடி உறவுகள் உயிரையும் உடமைகளையும் இழந்து நிர்க்கதியாக நின்றதும்  குட்டிமணி, ஜெகன் உள்ளிட்ட போராளிகளின் படுகொலை என்னில் ஏற்படுத்திய தாக்கத்தினால் மாணவர் பருவத்திலிருந்தே நான் தமிழீழ  விடுதலையை நெஞ்சில் நிறுத்தி ஈழத் தமிழர்களுக்கும் அவர்களுக்காக அர்ப்பணிப்புடன் களமாடிய விடுதலைப் புலிகளுக்கும் என்னாலான உதவிகளை எந்தவொரு விளம்பரமும் இன்றி செய்ததையும், தற்போதும் தொடர்ந்து செய்து வருவதையும் போராளிகளும் ஈழத் தமிழர்களும் நன்கு அறிவார்கள்.

நான் தமிழக வாழ்வுரிமை கட்சியை நிறுவிய பின்னர் வெறும் சம்பிரதாய போராட்டங்களையும், மேடை பேச்சுக்களையும் தவிர்த்து ஈழத் தமிழர்களின் உரிமைக்காக  பல்லாயிரக்கணக்கான மக்களை அணிதிரட்டி தமிழீழத்தில் இலங்கை அரசு மேற்கொண்ட இனப்படுகொலைக்கு பன்நாட்டு புலனாய்வு மற்றும் அரசியல் தீர்வுக்கு பொது வாக்கெடுப்பு உள்ளிட்ட முழக்கங்களை  முன்வைத்தும் மாபெரும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தேன். மேலும் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் மற்றும் மாவீரர் தினம் உள்ளிட்ட  நினைவேந்தல் நிகழ்வுகளையும் பல்வேறு தடைகளுக்கு மத்தியில் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றோம்.

நான் எனது கட்சி பணிகளுக்காகவோ போராட்டங்களை முன்னெடுப்பதற்காகவோ ஈழத் தமிழர்களின் பணத்திலோ, புலம்பெயர்ந்த மக்களிடத்திலோ, இங்குள்ள செல்வந்தர்களிடத்திலோ ஒரு ரூபா பணத்தை கூட  பெற்றுக்கொள்வதில்லை.கட்சி சார்பில் முன்னெடுக்கப்படும் அனைத்து  சனநாயக கடமைகளையும் எனது சொந்த பணத்திலிருந்தும் எனது கட்சிக்காரர்கள் வழங்கும் நிதியிலிருந்துமே மேற்கொண்டு வருகின்றேன்.

கட்சி ஆரம்பித்ததிலிருந்து எனது வாழ்க்கை முழுவதுமே போராட்டக்களமாக இருந்தது கடந்த எட்டு வருடங்களாக தொடர்ந்து ஈழத் தமிழர்களின் போரட்டங்களில் தீவிர கவனம் செலுத்தி வந்தேன். அண்மைக்காலமாக மத்திய அரசின் திட்டங்கள் பல தமிழகத்திற்கு பேராபத்துக்களை ஏற்படுத்துவதால் தமிழகத்தின் உரிமைக்கான போராட்டங்களில் அதிகம் கவனம் செலுத்தவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளதால்  தமிழீழ விடுதலைக்கு ஆதரவான போராட்டங்கள்  சற்று குறைவான  தோற்றத்தை வெளிப்படுத்தலாம். ஆனால் அது உண்மையில்லை. எம்மை பொறுத்த மட்டில் தமிழகமும் தமிழீழமும் இரு கண்களை போன்றது. ஈழத் தமிழர்களின் உரிமைக்காக எனது குரல் இறுதிவரை ஓங்கி ஒலிக்கும்.

இங்குள்ள முன்நாள் போராளிகளுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் எங்களால் முடிந்த பல்வேறு உதவிகளை தற்போதும் செய்து வருகின்றோம். அண்மையில் தமிழகத்தை சூறையாடிய கஜா புயலில் ஈழத் தமிழர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டபோது இலட்சக்கணக்கான ரூபா பணத்தில் உதவி திட்டங்களை வழங்கினோம். எமது உயிர் உள்ளவரை தமிழகத்தின் உரிமைக்காகவும் ஈழத் தமிழர்களின் விடிவிற்காகவும் நானும் எனது கட்சியினரும் போராடிக்கொண்டே இருப்போம்.

கேள்வி: பன்னாட்டுப் புலனாய்வுக்காகவும் பொது வாக்கெடுப்புக்காகவும் தமிழ்நாட்டு சட்டப் பேரவையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக நடக்க வேண்டியது என்ன?

பதில்: 1983 இல் நடந்த இனக்கலவரத்தை இனப்படுகொலை என குற்றஞ்சாட்டி அன்றைய  இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி நாடாளுமன்றத்தில் பேசினார். ஆனால், இறுதிப்போரில் நடந்த படுகொலைகளை  இந்திய அரசு இன்றைக்குவரை இன அழிப்பு என்றுகூட ஏற்கவில்லை. அந்த படுகொலைகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதிலும் அக்கறை செலுத்தவில்லை.

மாறாக இன அழிப்பு செய்த இலங்கையைப் பாதுகாத்து வருகின்றது.  இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி,  இலங்கையில் இறுதிப் போரில் நடந்தது இனப்படுகொலை என இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். தமிழக தீர்மானத்தின்படி, இலங்கை அரசுடனான அரசியல், பொருளியல், பண்பாடு என அனைத்து உறவுகளை இந்திய அரசு துண்டித்துக் கொள்ள வேண்டும்.

இதில் குறிப்பாக, அரசியல் வகையில் இந்திய இலங்கை உறவு நீடிப்பதை எதிர்த்து தமிழகம் கடுமையான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இருநாட்டு அரசத் தலைவர்களின் பயணங்களுக்கும் சந்திப்புகளுக்கும் எதிராக தமிழகம் போர்க்கொடி உயர்த்த வேண்டும்.

கேள்வி: ஈழத் தமிழர்கள் தொடர்பில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் கொண்டுவருவது சாத்தியமா? அதற்கு தமிழ்நாட்டுத் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்?

பதில்: ஈழத் தமிழர்கள் தொடர்பில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் கொண்டுவருவது சாத்தியம். இன்று இலங்கையை சீனா ஒருபுறமும் அமெரிக்கா ஒருபுறமும் பாகிஸ்தான் ஒருபுறமும் என்று பல உலக நாடுகள் தமது செல்வாக்கிற்குள் கொண்டுவர முயல்கின்றன. இந்த நிலைமை தொடரும்பட்சத்தில் இது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும்.

Velmurugan 2 ஈழத் தமிழர்கள் தொடர்பில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் கொண்டுவருவது சாத்தியம் - வேல்முருகன்அவ்வகையில் இலங்கைக்கு அருகிலே இருக்கும் தமிழகத்திற்கும் இதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்படும். தெற்காசிய பிராந்தியத்தில் முக்கியமான நாடாக விளங்கும் இந்தியா தனக்கு இப்படியான புவிசார் அரசியல் அழுத்தங்கள் மற்றும் பாதுகாப்பு நெருக்கடிகள் ஏற்படும்போது இலங்கை தீவில் சரியான நட்பு சக்தியை அடையாளம் காணவேண்டிய கட்டாயம் ஏற்படும். இது இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய புறக்காரணியாக அமையும்.

இன்னொருபுறம், இந்திய-சிங்கள கூட்டணியை முறிப்பதற்கான போராட்டங்கள் எந்தளவுக்கு தமிழ்நாட்டில் தீவிரம் பெறுகின்றனவோ அந்தளவுக்கு அது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும். இதன் வளர்ச்சிப் போக்கில், தமிழகத்தில் கொதிநிலை ஏற்படும் இடத்து இந்திய சிங்கள கூட்டு முறிக்கப்பட்டு இந்திய-ஈழ நட்புக்கான வெளியுறவுக்கொள்கை மாற்றம் ஏற்படும். இது இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அகக்காரணியாக அமையும்.

எனவே, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இந்திய வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் கொண்டுவருவதற்கு ஈழம் தொடர்பில் தமிழக சட்டசபை நிறைவேற்றியுள்ள தீர்மானங்களை ஏற்கும்படி இந்திய அரசை நிர்ப்பந்தித்து போராட்டங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும்.

கேள்வி: தங்கள் ஆதரவு பெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருந்து 38 பேர் நாடாளுமன்றம் செல்லும் நிலையில் ஈழத் தமிழர்கள் தொடர்பில் அவர்கள் செய்ய வேண்டியதென்ன என்று கருதுகிறீர்கள்?

பதில்: ஈழத்தில் நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு துணைபோன காங்கிரசு கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர்களை நாங்கள் ஆதரிக்கவில்லை அவர்களுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரையில் ஈடுபடவும் இல்லை. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள தி.மு.க மதி.முக. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சிபிஐ, சிபிஐ(எம்), இந்திய ஐனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போன்ற கட்சிகளைத்தான் நாங்கள் தேர்தலில் ஆதரவு தந்து பரப்புரையை முன்னெடுத்தோம்.

இந்த கட்சிகளிடத்தில் நாம் ஏற்கெனவே சில வலுவான கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறோம். ஈழத்தில் நடந்தது மாபெரும் இனப்படுகொலை என்றும் அதற்கு சர்வதேச ரீதியான நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் அதற்கு இந்தியா உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம்.

மேலும் தமிழகத்திலே தஞ்சமடைந்து வாழ்ந்துவரும் ஈழத் தமிழர்களுக்கான பாதுகாப்பு, அவர்களுக்கான இரட்டை குடியுரிமை, இங்குள்ள ஈழத்து மாணவச் செல்வங்களுக்கு மருத்துவம், சட்டம் உள்ளிட்ட உயர்கல்விகளில் பாரபட்சமின்றி சம வாய்ப்பளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். இதன் அடிப்படையில் நாங்கள் ஆதரவு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈழத் தமிழர்களின் உரிமைக்காக   நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவார்கள் என்று நம்புகின்றோம். இந்த விடயத்தில் கூட்டணி கட்சிகளிடத்தில் தொடர்ந்து வலியுறுத்துவோம்.

கேள்வி: தற்போது முள்ளிவாய்க்கால் நினைவு  10 ஆவது ஆண்டை நெருங்கிய வேளையில் இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் 80 வீதமானவர்கள் தமிழர்களே இறந்துள்ளனர் இது குறித்து தங்கள் கருத்து?

பதில்: இந்த தாக்குதல் குறித்து முன்பே உளவுத் தகவல்  இலங்கைக்கு வழங்கப்பட்டபோதிலும்  கொல்லப்படப் போவது கிறித்தவர்கள் என்பதாலும் அதிலும் தமிழர்கள் என்பதாலும் இந்த தாக்குதலை சிங்கள பெளத்தப் பேரினவாதிகள் அனுமதித்துள்ளார்கள் என்பது வெளிப்படையாக தெரிகிறது. இப்போது இந்த தாக்குதலின் பெயரால் சிங்கள இராணுவத்தின் மீது பன்னாட்டுப் புலனாய்வு நடத்தப்பட வேண்டும் என்ற தமிழர்களின் பத்தாண்டு காலப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான தீவிர முயற்சிகளை இலங்கை அரசும் அதன் உளவுத்துறையும் முன்னெடுத்து வருகிறது  அதுமட்டுமின்றி, தமிழர்களை அழிப்பதற்காக முஸ்லிம்களை அணைத்த சிங்களப் பெளத்த பேரினவாதிகள்,  தற்போது முஸ்லிம்களையும் அடக்கி ஒடுக்கி சிங்களப் பெளத்த மேலாண்மையை நிறுவுவதற்கு இந்த தாக்குதலைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இலங்கை அரசு சிங்களப் பெளத்த பேரினவாத இன அழிப்பு அரசு என்பதை இப்போதேனும் உலகம் புரிந்துகொள்ள வேண்டும். சிங்கள பேரினவாதத்தின் சூழ்ச்சியை உணர்ந்து தமிழர்களும் அங்குவாழும் முஸ்லீம்களும் இணைந்து செயற்படுவதன் ஊடாகவே பௌத்த பேரினவாதிகளிடமிருந்து தற்பாதுகாத்துக்கொள்ள முடியும்.

 

 

முப்பது வருடங்களுக்கு முன்பே அமைச்சரவை அனுமதி – ஆனாலும் தரமுயர்த்தப்படவில்லை – நாடாளுமன்றில் சூடான உறுப்பினர்கள்

’93ஆம் ஆண்டு தரமுயர்த்துவதற்கான  அமைச்சு அங்கீகாரம் கிடைத்தது. கிட்டத்தட்ட 30 வருட காலமாக தமிழ் மக்களுக்கான உரிமை மறுக்கப்பட்டிருக்கின்றது.

‘1993 இல்  29உபபிரதேச செயலகங் களில்  28 உபபிரதேச செயலகங்கள் தரமுயர்த்தப்பட்டன.  ஏன் கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் மட்டும் தரமுயர்த்தப்படவில்லை.’

‘இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களினால் கல்முனை தமிழ்ப் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் அரசாங்கத்திற்கு வழங்கும் ஆதரவின் மூலமே அரசை முன்னெடுத்துச் செல்கின்றனர்.’

கோடிஸ்வரன் பா.உ –

அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை வடக்கு பிரதேச செயலகம் 30 வருட காலமாக தரமுயர்த்தப்படாமல் இருக்கின்ற பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டுமென்று உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றார்கள். பிரதமர்கூட இதை செய்து தருவதாக உறுதியளித்திருந்தார்.

ஆனாலும் அவர் தவறவிட்டிருக்கின்றார். எங்களை அவர் ஏமாற்றியிருக்கின்றார் என்று சொன்னால் அது உண்மையாகத்தான் இருக்கும். உதவிப் பிரதேச செயலகமாக இருந்ததை 93ஆம் ஆண்டு தரமுயர்த்துவதற்கான  அமைச்சு அங்கீகாரம் கிடைத்தது. கிட்டத்தட்ட 30 வருட காலமாக தமிழ் மக்களுக்கான உரிமை மறுக்கப்பட்டிருக்கின்றது.

அங்கு அடிப்படை மதவாதத்தை தோற்றுவித்து இஸ்லாமிய  இராச்சியத்தை உருவாக்குவதற்கு முக்கியமாக இருக்கின்றவர்களே வடக்குப் பிரதேசத்தை தரமுயர்த்தாமல் தடுத்து நிறுத்தியிருக்கின்றார்கள். அமைச்சு அங்கீகாரம் கிடைத்தும் 30 வருட காலமாக தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள். தேசிய தௌஜீத் ஜமாத் அமைப்பினர் இதை தரமுயர்த்தக் கூடாதென்று பள்ளிவாசலில் கோசமிட்டுட அதற்கான அறிக்கையையும் வெளியிட்டிருக்கின்றார்கள்.

விமல் வீரவன்ச பா.உ
தமிழ் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரின் கருத்தை நாங்கள்ஆமோதிக்கின்றோம். இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களினால் கல்முனை தமிழ்ப் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் அரசாங்கத்திற்கு வழங்கும் ஆதரவின் மூலமே அரசை முன்னெடுத்துச் செல்கின்றனர். அரசிற்கு வழங்கும் ஆதரவை வாபஸ் பெறுவதன் மூலம் அரசிற்கு இதனை செய்து கொடுக்க வேண்டுமென்று சிந்தனை வரும். ஏன் இவர்கள் இதனை செய்யாமல் இருக்கின்றனர்.

டக்ளஸ் தேவானந்தா பா.உ 

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கூறிய பிரச்சினை உண்மையே. ஆனால் அரசு இவர்களை ஏமாற்றவில்லை. இவர்கள் நினைத்தால் அரசாங்கத்துடன் கலந்துரையாடி ஒரு முடிவிற்கு வரமுடியும். பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காணலாம்.

வியாழேந்திரன் பா.உ

1993 இல்  29உபபிரதேச செயலகங் களில்  28 உபபிரதேச செயலகங்கள் தரமுயர்த்தப்பட்டன.  ஏன் கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் மட்டும் தரமுயர்த்தப்படவில்லை. இது மட்டும் 30 வருடம் தாண்டியும் தரமுயர்த்தப்படாமல் இருக்கின்றன. இதற்குப் பின்னால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சில முஸ்லிம் அரசியல்வாதிகள் காரணமாக இருக்கின்றனர். அண்மைக்காலத்தில் தேசிய தௌஜித் ஜமாத் இயக்கத்தினர் இதற்காக துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டிருந்தனர். இதற்குப் பின்புலத்தில் அரசியல் மாத்திரமல்ல இஸ்லாமிய பயங்கரவாதமும் இருக்கின்றது என்பதை தெட்டத் தெளிவாகக் காட்டுகின்றது. அரசாங்கம் தமிழ்த் தலைமைகளை ஏமாற்றவில்லை. தமிழ்த் தலைமைகள் அரசாங்கத்தை ஏமாற்றவில்லை. ஆனால் இரண்டும் சேர்ந்து அந்த பகுதி மக்களை ஏமாற்றியிருக்கின்றனர்.

 

 

ஏட்டிக்குப் போட்டியான போராட்டங்கள் – வெளிவரும் முஸ்லீம்கள் எதிர்ப்பு

கல்முனையில் கடந்த நான்கு நாட்களாக இடம்பெற்றுவரும் உண்ணாவிரத போராட்டம் சட்டப்படி பிழையான ஒன்று.எனக்கோரி கல்முனை பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களால் ஒரு சத்தியாகிரக போராட்டம் ஐக்கிய சதுக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதிகளில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த போராட்டத்தில் உலமாக்கள், கல்முனை பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் வைத்தியர் அஸீஸ்,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், ஏ.எல்.தவம், கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.ரகீப், காரைதீவு பிரதேச சபை பிரதி தவிசாளர் எ.எம்.ஜாஹீர், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்,கல்முனை அபிவிருத்தி குழு இணைத்தலைவர் எம்.எஸ்.ஏ.ரஸாக், மாளிகைக்காடு, சாய்ந்தமருது, கல்முனை, பிரதேசங்களை சேர்ந்த பொதுநல அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். 1561017505 ஏட்டிக்குப் போட்டியான போராட்டங்கள் - வெளிவரும் முஸ்லீம்கள் எதிர்ப்பு

காலையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் கல்முனை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்றுவரும் உண்ணாவிரத பந்தலில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சத்தியாகிரக போராட்டக்கார்களை  சந்தித்து பேச்சுவார்த்தை செய்த பொலிஸாரின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவுற்றது. இப்போது உண்ணாவிரதம் மற்றும் சத்தியாகிரகம் இடம்பெறும் இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றபோது முஸ்லிம் மக்களின் சத்தியாகிரக பந்தலை அந்த போராட்டம் நெருங்கிய சமயம்  சிறு சலசலப்பு வந்ததையடுத்து கல்முனை பொலிஸார்  நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

முஸ்லீம் மக்களின் போராட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது, மாளிகைக்காடு அரசியல் பிரமுகர்கள்,பொது அமைப்புக்கள் சத்தியாகிரக பந்தலில் அமர்ந்து தமது ஆதரவை தெரிவித்துவருகிறார்கள்.ஆனால் இப்போது கல்முனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கலந்து கொள்ளும் பிரமுகர்கள் எல்லோரும் இப்போது ஊடகங்களை சந்தித்து தமது பக்க நியாயங்களை முன்னிறுத்தி பேசிவருகிறார்கள்.

சிறீலங்காவின் பாதுகாப்பை பலப்படுத்துவதில் சீனாவும், பிரித்தானியாவும் தீவிரம்

கடந்த ஏப்பிரல் மாதம் சிறீலங்காவில் இடம்பெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்து உலகின் பல நாடுகள் தமக்கு இடையிலான போட்டிகளை மறந்து சிறீலங்காவுக்கு உதவி செய்து பெரும்பான்மை சிங்கள சமூகத்தை காப்பாற்றுவதற்கு போராடி வருகின்றன.

இந்த நிலையில் சிறீலங்காவின் பாதுகாப்புக்களை முன்னிட்டு 60 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான எக்ஸ்ரே இயந்திரங்கள் உட்பட பல பாதுகாப்புச் சாதனங்களை சீனத் தூதுவர் சிறீலங்காவுக்கு நேற்று (19) வழங்கியுள்ளார்.

சிறீலங்காவின் நாடாளுமன்றத்தை பாதுகாப்பற்கே அவை வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சிறீங்கா காவல்துறையினருக்கும், படையினருக்கும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் தொடர்பில் பயிற்சிகளை வழங்குவதற்கு என பிரித்தானியாவின் படை அதிகாரிகள் சிறீலங்கா வந்துள்ளதாகவும், அவர்கள் ஒருவாரம் அங்கு தங்கியிருப்பார்கள் எனவும் சிறீலங்காவுக்கான பிரித்தானியாத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு போலியான வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றிவரும் இந்த நாடுகள் சிங்கள மக்களை பாதுகாப்பதற்கு ஒருங்கிணைந்து பணியாற்றி வருவது தமிழ் மக்களிடம் அனைத்துலகசமூகம் தொடர்பில் அவநம்பிக்கைகளைத் தோற்றுவித்துள்ளது.

சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் தொடர்பாக 4பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

M H 17 என்ற பயணிகள் விமானம் ஆம்ஸ்டெர்டாமிலிருந்து கோலாலம்éர் செல்லும் போது, சுட்டு வீழ்த்தப்பட்டது. 2014 இல் உக்ரெனில் விழுந்து நொருங்கிய மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக 4 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இகோர் கிர்கின், செர்கெய் டுபின்ஸ்கி மற்றும் ஒலெக் புல்டோவ் ஆகிய மூன்று ரஸ்யர்களும் லியோனிட் கார்சென்கோ என்னும் உக்ரேன் நாட்டவரும் விமானத்தை எறிகணை கொண்டு சுட்டு வீழ்த்தி பயணிகள், விமானப் பணியாளர்கள் உள்ளடங்கலாக 298பேரை கொலை செய்ததாக நெதர்லாந்து விசாரணையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகள் 2020 மார்ச்சில் தொடங்கவுள்ளது.  இந்த நான்கு பேருக்கு எதிராக சர்வதேச ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த கூட்டு விசாரணை குழு முதலில் ஒரு பெரிய பட்டியல் இருப்பதாகவும் ஆதாரம் கிடைத்தால் வெளியிடுவதாகவும் அறிவித்திருந்தது.

இகோர் கிர்கின் என்பவர் ரஷ்ய உளவுத்துறையின் முன்னாள் கேணல் ஆவார். அவருக்கு கிழக்கு உக்ரைனில் பிரிவினைவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த டோனெட்ஸ்க் என்ற நகரத்தின் பாதுகாப்பு அமைச்சர் என்னும் பதவி வழங்கப்பட்டிருந்தது.

ரஸ்ய கூட்டமைப்பின் உயரிய இராணுவ அதிகாரி என மதிக்கப்படுபவர் கிர்கின் ஆயுதக் குழுக்கள் விமானத்தை சுட்டு வீழ்த்தவில்லை என்பதை மட்டும் தன்னால் கூறமுடியும் என்று தெரிவித்துள்ளார்.

 

தளரும் மைத்திரியின் பிடி பலமடைகிறாரா ரணில்? – சத்தியன்

“ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் குறித்த விசாரணைகளை முன்னெடுக்கும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தாவிட்டால், அமைச்சரவையைக் கூட்டப் போவதில்லை” என அறிவித்து, அந்த விடயத்தில் உறுதியாக இருந்து கடந்த வாரம் அமைச்சரவையையும் கூட்டாத சனாதிபதி மைத்திரி, இப்போது தன்னுடைய இறுக்கமான நிலைப்பாட்டைத் தளர்த்தியிருக்கின்றார்.

வரும் செவ்வாய்க்கிழமை 18 ஆம் திகதி அமைச்சரவை வழமைபோல கூடும் என அமைச்சர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது. மைத்திரி இப்படி தடாலடியாக சரணடைந்தமைக்கு என்ன காரணம் என ஆராயப்புகுந்த போது சுவாரசியமான பல தகவல்கள் கிடைத்தன.

அதிரடியாக முடிவுகளை எடுப்பதும், செயற்படுத்துவதும் சனாதிபதி மைத்திரியின் வழமை. அது சாத்தியமா? அரசியலமைப்பில் அதற்கு இடமிருக்கின்றதா? என்பதையிட்டு பின்னர்தான் அவர் பார்க்கின்றார். அல்லது பின்னர் யாராவது எச்சரிக்கும் போது விழித்தெழுந்து தடுமாறுகின்றார்.

கடந்த வாரத்தில் அதிரடியாக இரண்டு செயற்பாடுகளை மைத்திரி மேற்கொண்டார். அதில் முதலாவதுதான் அமைச்சரவையைக் கூட்டாமல் விட்டது. இரண்டாவது, இராஜினாமாச் செய்த முஸ்லிம் அமைச்சர்களின் இடத்துக்கு பிரதமர் ரணிலின் ஆலோசனையோ பரிந்துரையோ இன்றி தம்பாட்டில் பதில் அமைச்சர்களை நியமித்தமை.

பதில் அமைச்சர்களை நியமித்தமை அரசமைப்பை மீறிய தவறான நடவடிக்கை எனச் சுட்டிக்காட்டி சனாதிபதிக்கு ஒரு கடிதம் எழுதினார் ரணில். இந்த விடயத்தை ஒட்டிப் பிரதமர் உயர் நீதிமன்றுக்குப் போகலாம் என்ற பேச்சு எழுந்ததும், பிரதமரைச் சமாளிக்கும் விதத்தில், நிறுத்தப்பட்ட அமைச்சரவையைக் கூட்டுவதாக மைத்திரி அறிவித்திருக்கின்றார். ஆனால், அதற்கு மற்றொரு காரணமும் இருக்கின்றது.

மூன்று முஸ்லிம் அமைச்சர்கள் இராஜினாமாச் செய்தமையை அடுத்து ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு ராஜித சேனாரத்ன, மலிக் சமரவிக்கிரம, ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோரின் பெயர்களை ரணில் விக்கிரமசிங்க பரிந்துரைத்திருந்தார். ஆனால் அதை கணக்கில் எடுக்காமல், சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்குப் பொறுப்பான பிரதி மற்றும் இராசாங்க அமைச்சர்களை அந்தந்த அமைச்சுகளுக்கான பதில் அமைச்சர்களாக நியமித்திருக்கின்றார் சனாதிபதி.

இந்த நடவடிக்கை அரசமைப்பின் 19 ஆவது திருத்தத்துக்கு முற்றிலும் மாறான செயற்பாடு என்பதைத் தெளிவுபடுத்தி சனாதிபதிக்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கின்றார் ரணில். அரசமைப்பின் 19 ஆவது திருத்தப்படி பிரதமரின் பரிந்துரையின் பேரில்தான் அமைச்சர்களை சனாதிபதி நியமிக்க முடியும். இது முதலாவது விடயம்.

இதனைவிட மற்றும் ஒரு விடயத்தையும் ரணிலால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. ஒரு விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் இராஜினாமாச் செய்து, அந்த அமைச்சு வெற்றிடமாக இருக்கும் போது, அந்த இடத்துக்கு ஒரு பதில் அமைச்சரை நியமிக்க முடியாது. அமைச்சர் ஒருவர் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டிருந்தால், அல்லது கடமையைச் செய்ய முடியாமல் இருந்தால் மட்டுமே அவரின் இடத்துக்கு ஒரு பதில் அமைச்சர் நியமிக்கப்படலாம். அதற்கு மாறாக, ஓர் அமைச்சுக்கு அமைச்சரே நியமிக்கப்படாமல் இருக்கும் நிலையில் அந்த இடத்துக்கு ஒரு பதில் அமைச்சர் நியமிக்கப்பட முடியாது.

ஆக, அரசியலமைப்பைத் தொடர்சியாக மீறிவரும் சனாதிபதி, இப்போது பதில் அமைச்சர்களை நியமிப்பதிலும் அரசியலமைப்பின் இரண்டு விடயங்களை மீறியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த விடயங்களையும் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கின்றார் ரணில். சனாதிபதியின் இத்தகைய அரசமைப்பு மீறல் நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் மூலமே நிவாரணம் கோரிப் பெற வேண்டியநிலையில் உள்ளார் ரணில்.  பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டம் கடந்த வாரம் கூட்டப்படவில்லை. இதற்கு ரணில் உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர்.

அடுத்த வாரமும் அமைச்சரவை கூட்டப்படாவிட்டால் பாராளுமன்றத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி விசேட பிரேரணையொன்றை முன்வைத்துவிட்டு தனக்கிருக்கும் அதிகாரங்களுடன் தற்றுணிவாக அமைச்சரவையைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட்டுவதற்கு நடவடிக்கைகளை எடுக்கத் தயாராகி வருகின்றார் எனத் தகவல்களும் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் தனக்கு நெருக்கமானவர்களுடன் ரணில் ஆராய்ந்திருந்தார்.

இவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டால், சனாதிபதியாக இருந்தாலும் மைத்திரி  தனிமைப்படுத்தப்படும் நிலை ஏற்படும். இது குறித்து மைத்திரியின் ஆலோசகர்கள் அவருக்கு அவசர ஆலோசனை வழங்கியிருக்கின்றார்கள். அமைச்சரவையைக் கூட்டாவிட்டால் உங்களுக்குத்தான் ஆபத்து என அவர்கள் கூறியிருக்கின்றார்கள். இதனையடுத்தே அமைச்சரவைக் கூட்டம் 18 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்குமாறு தனது செயலாளருக்கு உத்தரவிட்டுவிட்டு தஜிகிஸ்தானுக்கு பறந்தார் மைத்திரி.

இந்தப் பின்னணியில்தான் எதிர்வரும் 18 ஆம் திகதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது என அமைச்சரவையில் உள்ள சகல அமைச்சர்களுக்கும் சனாதிபதி செயலகத் தரப்பால் வியாழக்கிழமையே அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் சனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் ஏற்பட்ட இரண்டு பிரச்சினைகளில் ஒன்றுக்கு இவ்வாறு தீர்வு காணப்பட்டுவிட்டது.

அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் என்ன நடைபெறுகின்றது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். செவ்வாய்கிழமை நடைபெறப்போகும் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்திலும், பாராளுமன்ற கூட்டத் தொடரிலும் இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தும் என நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.