தமிழ் மக்கள் தமது கோரிக்கைகளை முன்வைக்கும் போது மாத்திரம், இன, மத சாயம் பூசப்படுகிறது- அமைச்சர் மனோ

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை இன்று தமிழ் -முஸ்லிம் ஐக்கியத்தின் மையப் புள்ளியாக மாறியுள்ளது. எனவே கல்முனை வடக்கு உப-பிரதேச செயலகத்தை, முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்தும் நீண்டகால கோரிக்கைக்கு உடன்பட்டு முஸ்லிம் அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள், மக்கள் பிரதிநிதிகள் தமிழ், முஸ்லிம் ஐக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டும் என அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார். இதுதொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது:

கல்முனை வடக்கு பிரதேசம், சாய்ந்தமருது பிரதேசம், கல்முனை தெற்கு பிரதேசங்களை உள்ளடக்கியதே கல்முனை மாநகரம். இதில் சாய்ந்தமருது, கல்முனை தெற்கு ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாகவும், கல்முனை வடக்கு பிரதேசத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையா கவும் வாழ்கின்றனர்.

இந் நிலையில் சாய்ந்தமருது பிரதேச முஸ்லிம் மக்கள், தமது பிரதேச செயலகத்தை, கல்முனை மாநகரசபையிலிருந்து பிரித்து முழுமையான நகரசபையாக்கும்படி போராடுகிறார்கள். அதுபோல் கல்முனை வடக்கு தமிழ் சமூக தலைவர்கள் தமது உப பிரதேச செயலகத்தை, முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்த கோருகின்றனர்.

ஒரே இனத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள், கல்முனை மாநகரசபையிலிருந்து பிரிந்து தனி நகர சபைக்காகப் போராடும் போது, சகோதர இனத்தை சார்ந்த தமிழ் மக்கள், தமது உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்த வேண்டும் எனப் போராடுவதில் என்ன தவறு இருக்கின்றது. கல்முனை வடக்கு தமிழர்களின் போராட்டத்தை எதிர்க்கும் அரசியல்வாதிகள் நாட்டுக்கும், அரசாங்கத்துக்கும் தர்க்கரீதியாக எடுத்துக் கூற வேண்டும்.

இந்த விடயம் தொடர்பில் நேற்று முன்தினமிரவு தேசிய பாதுகாப்பு சபையிலும், நாம் கருத்துகளை பறிமாற்றிக்கொண்டோம். அம்பாறையில் இன்று கல்முனை வடக்கு உப-பிரதேச செயலகத்தை, முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்த கோரி உண்ணாவிரத சாத்வீக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர்,தேரர், சுவாமிகள் மற்றும் ஏனையோர் என்னுடன் தொலைபேசியில் நேற்றுமுன்தினம் பிற்பகல் உரையாடினர்.

அத்துடன் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் என்னை சந்தித்து இதுபற்றி தீர்க்கமாக உரையாடினர். இப்பிரச்சினை தொடர்பில், துறைசார் அமைச்சர் வஜிர அபேவர்தனவுடனும், நான் கலந்தாலோசித்துள்ளேன்.அமைச்சர் தயா கமகேயும், நானும் இதுபற்றி பேசியுள்ளோம். இதை இனியும் தொடர்ந்து நீடிக்க விடுவது நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகமாக அமைந்துவிடும். இன, மத அடிப்படைகளில் கல்வி வலய, பிரதேச செயலக, உள்ளூராட்சி மன்ற எல்லைகளை நிர்ணயிப்பது தொடர்பில் மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களின் பல்வேறு மாவட்டங்களில், இன அடிப்படையிலான பிரதேச செயலகங்கள், கல்வி வலயங்கள், நிலத்தொடர்பற்றும், நிலத்தொடர் புடனும் நடைமுறையிலுள்ளன.

எனவே கல்முனை வடக்கு தமிழ் மக்கள், தமது உப-பிரதேச செயலகத்தை முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்த கோருவதில் தவறிருக்காது. அத்துடன் ஏற்கனவே இயங்கி வரும் ஒரு உப-பிரதேச செயலகத்தையே, முழு-பிரதேச செயலகமாக தரமுயர்த்தும்படி இக்கோரிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இது பிழை என்றால், கிழக்கில் இருக்கும் எத்தனையோ இனரீதியான பிரதேச செயலகங்களை, கல்வி வலயங்களை கலைக்க வேண்டும். தமிழ் மக்கள் தமது கோரிக்கைகளை முன்வைக்கும் போது மாத்திரம், அதற்கு இன, மத சாயம் பூசுவதில் என்ன நியாயம் இருக்கிறது.