முப்பது வருடங்களுக்கு முன்பே அமைச்சரவை அனுமதி – ஆனாலும் தரமுயர்த்தப்படவில்லை – நாடாளுமன்றில் சூடான உறுப்பினர்கள்

’93ஆம் ஆண்டு தரமுயர்த்துவதற்கான  அமைச்சு அங்கீகாரம் கிடைத்தது. கிட்டத்தட்ட 30 வருட காலமாக தமிழ் மக்களுக்கான உரிமை மறுக்கப்பட்டிருக்கின்றது.

‘1993 இல்  29உபபிரதேச செயலகங் களில்  28 உபபிரதேச செயலகங்கள் தரமுயர்த்தப்பட்டன.  ஏன் கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் மட்டும் தரமுயர்த்தப்படவில்லை.’

‘இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களினால் கல்முனை தமிழ்ப் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் அரசாங்கத்திற்கு வழங்கும் ஆதரவின் மூலமே அரசை முன்னெடுத்துச் செல்கின்றனர்.’

கோடிஸ்வரன் பா.உ –

அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை வடக்கு பிரதேச செயலகம் 30 வருட காலமாக தரமுயர்த்தப்படாமல் இருக்கின்ற பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டுமென்று உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றார்கள். பிரதமர்கூட இதை செய்து தருவதாக உறுதியளித்திருந்தார்.

ஆனாலும் அவர் தவறவிட்டிருக்கின்றார். எங்களை அவர் ஏமாற்றியிருக்கின்றார் என்று சொன்னால் அது உண்மையாகத்தான் இருக்கும். உதவிப் பிரதேச செயலகமாக இருந்ததை 93ஆம் ஆண்டு தரமுயர்த்துவதற்கான  அமைச்சு அங்கீகாரம் கிடைத்தது. கிட்டத்தட்ட 30 வருட காலமாக தமிழ் மக்களுக்கான உரிமை மறுக்கப்பட்டிருக்கின்றது.

அங்கு அடிப்படை மதவாதத்தை தோற்றுவித்து இஸ்லாமிய  இராச்சியத்தை உருவாக்குவதற்கு முக்கியமாக இருக்கின்றவர்களே வடக்குப் பிரதேசத்தை தரமுயர்த்தாமல் தடுத்து நிறுத்தியிருக்கின்றார்கள். அமைச்சு அங்கீகாரம் கிடைத்தும் 30 வருட காலமாக தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள். தேசிய தௌஜீத் ஜமாத் அமைப்பினர் இதை தரமுயர்த்தக் கூடாதென்று பள்ளிவாசலில் கோசமிட்டுட அதற்கான அறிக்கையையும் வெளியிட்டிருக்கின்றார்கள்.

விமல் வீரவன்ச பா.உ
தமிழ் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரின் கருத்தை நாங்கள்ஆமோதிக்கின்றோம். இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களினால் கல்முனை தமிழ்ப் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் அரசாங்கத்திற்கு வழங்கும் ஆதரவின் மூலமே அரசை முன்னெடுத்துச் செல்கின்றனர். அரசிற்கு வழங்கும் ஆதரவை வாபஸ் பெறுவதன் மூலம் அரசிற்கு இதனை செய்து கொடுக்க வேண்டுமென்று சிந்தனை வரும். ஏன் இவர்கள் இதனை செய்யாமல் இருக்கின்றனர்.

டக்ளஸ் தேவானந்தா பா.உ 

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கூறிய பிரச்சினை உண்மையே. ஆனால் அரசு இவர்களை ஏமாற்றவில்லை. இவர்கள் நினைத்தால் அரசாங்கத்துடன் கலந்துரையாடி ஒரு முடிவிற்கு வரமுடியும். பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காணலாம்.

வியாழேந்திரன் பா.உ

1993 இல்  29உபபிரதேச செயலகங் களில்  28 உபபிரதேச செயலகங்கள் தரமுயர்த்தப்பட்டன.  ஏன் கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் மட்டும் தரமுயர்த்தப்படவில்லை. இது மட்டும் 30 வருடம் தாண்டியும் தரமுயர்த்தப்படாமல் இருக்கின்றன. இதற்குப் பின்னால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சில முஸ்லிம் அரசியல்வாதிகள் காரணமாக இருக்கின்றனர். அண்மைக்காலத்தில் தேசிய தௌஜித் ஜமாத் இயக்கத்தினர் இதற்காக துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டிருந்தனர். இதற்குப் பின்புலத்தில் அரசியல் மாத்திரமல்ல இஸ்லாமிய பயங்கரவாதமும் இருக்கின்றது என்பதை தெட்டத் தெளிவாகக் காட்டுகின்றது. அரசாங்கம் தமிழ்த் தலைமைகளை ஏமாற்றவில்லை. தமிழ்த் தலைமைகள் அரசாங்கத்தை ஏமாற்றவில்லை. ஆனால் இரண்டும் சேர்ந்து அந்த பகுதி மக்களை ஏமாற்றியிருக்கின்றனர்.