திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட அரச அதிகாரிகளுக்கான மந்த போசனை தொடர்பான விழிப்புணர்வு தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வானது Scalng up Nutrition peoples Forum ன் நிதி பங்களிப்பிலும் சக்தி மகளிர் அமைப்பின் மூலமாக இடம் பெற்றது.
மந்தபோசனே,உணவு பழக்க வழக்கங்கள்,கர்ப்பிணி தாய்மார்களின் ஆரோக்கியமான நிலை உள்ளிட்ட பல விடயங்கள் இதன் போது விழிப்புணர்வூட்டப்பட்டது. குறித்த நிகழ்வுக்கு வளவாளராக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் தாய் சேய் நல மருத்துவ அதிகாரி வைத்தியர் ஏ.எச்.சமீம் கலந்து கொண்டார்.
இதில் தம்பலகாமம் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப்,தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி
வைத்தியர் மலர்விழி உட்பட பொது சுகாதார மருத்துவ மாதுக்கள்,பொதுச் சுகாதார பரிசோதகர்கள்,கல்வி அதிகாரிகள்,வெளிக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடைசெய்யப்பட்ட அமைப்பு என அரசாங்கம் கூறிவரும் வேளையில் பிள்ளையானின் கட்சிக்கு மாத்திரம் எவ்வாறு விடுதலைப் புலிகள் என்ற பெயர் பிரதிசெய்ய முடிந்தது என இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்
இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 47வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
விடுதலைப் போராட்டத்திலே இணைந்து கொண்டவர்கள் தான் இன்று அந்த விடுதலைப் போராட்டத்தை மழுங்கடிக்கும் விதமாக கருத்துக்களை கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற சிவனேசத்துரை சந்திரகாந்தன் அந்த கட்சியினுடைய பெயரை பிரதி செய்து கொண்டு அரசியல் செய்கின்றார். இப்போது நாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று கூறுவோமாக இருந்தால் அதனை தடை செய்யப்பட்ட இயக்கம் என கூறுகின்றார்கள்.
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எவ்வாறு இலங்கையிலே பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளாக இருக்கின்றது என்கின்ற? அரசாங்கத்துடன் காட்டி கொடுத்து அல்லது அரசாங்கத்திற்கு சோரம் போய் அரசாங்கத்துக்கு சார்பாக எந்த பெயரும் வைக்கலாம்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் தற்போது காணப்படும் அதிகரித்த வெப்பநிலை இந்த மாதத்தின் இறுதி நாட்களிலும் (28,29,30)அடுத்த மாதத்தின் ஆரம்ப நாட்களிலும் குறிப்பாக 12.05.2024 வரை வெப்பநிலை தற்போது உள்ளதை விட உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளா் நாகமுத்து பிரதீபராஜா இந்தத் தகவல்களைத் தெரிவித்துள்ளாா். இது தொடா்பில் இன்று அவா் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது –
“வெப்ப அலைச் சுட்டெண்ணின் (Heatwave Index) ஆபத்தான வகைப்பாட்டுக்குள் நாம் இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் 30.04.2024 க்கு பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பகல் பொழுதின் அதிகூடிய வெப்பநிலை 40 பாகை செல்சியஸ்க்கு மேலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்காலத்தில் உணரக்கூடிய வெப்பநிலையின் அளவு உண்மையான வெப்பநிலையை விடவும் உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே வேளை இந்துக்களின் பஞ்சாங்கம் காண்டாவனம் அல்லது அக்கினி நாள்/ அக்கினி நட்சத்திரம் என்பது எதிர்வரும் 04.05.2024 சனிக்கிழமை முதல் 28.05.2024 செவ்வாய்க்கிழமை வரை நிலவும் என குறிப்பிடுகின்றது. (காண்டாவனம்/அக்கினி நாள்/அக்கினி நட்சத்திரம் என்பது பரணி நட்சத்திரத்தின் 3ம் 4ம் பாதங்களையும் (கால் எனவும் குறிப்பிடுவர்) கார்த்திகை நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களையும், ரோகிணி நட்சத்திரத்தின் முதலாம் பாதத்தையும் சூரியன் கடக்கும் நாட்களே ஆகும்).
கடந்த சில நாட்களாக இரவுப் பொழுது வளிமண்டல சாரீரப்பதனின் அளவு உயர்வாக உள்ளது. இது எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் எமது உடல் அசௌகரியமான நிலைமையை உணரும் வாய்ப்புண்டு.
தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆவியாக்க அளவு உயர்வாக உள்ளது. இது மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனவே எமது நீர்ப் பயன்பாட்டினை வினைத்திறனாக மேற்கொள்வது சிறந்தது.
எதிர்வரும் 27,28, 29 மற்றும் 30 ம் திகதிகளில் வடக்கு மாகாணத்தின் சில இடங்களில் பிற்பகலுக்கு பின்னர் மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. எனினும் இம்மழை அதிகரித்த வெப்பமான வானிலையை தணிக்க போதுமானதல்ல.
எனவே இக்காலப்பகுதியில் பாடசாலைகளில் மாணவர்களின் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுச் செயற்பாடுகளை தவிர்ப்பதுடன், நோயாளர்கள், வயதானவர்கள், விசேட தேவையுடையவர்கள் பகல் பொழுது பிரயாணங்களை தவிர்ப்பது சிறந்தது.”
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நிறுவுனர் தந்தை செல்வநாயகத்தின் 47வது ஆண்டு நினைவு நாளும் நினைவுப் பேருரையும் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவின் ஏற்பாட்டில் யாழிலுள்ள தந்தை செல்வநாயகம் நினைவுத் தூபியில் இந்நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. தந்தை செல்வாவின் தூபிக்கு மலர் மாலை அணிவித்து சமாதியில் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் “இலங்கை தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான வாய்ப்புக்களும் சவால்களும்” எனும் தலைப்பில் நினைவுப் பேருரையாற்றினார்.
இதன்போது இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உள்ளிட்ட கட்சியின் மூத்த பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்கள் மீட்கப்பட்ட சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டார்.
கிளிநொச்சி பளைப்பொலிஸ் பிரிவுக்குற்பட்ட முகமாலைப்பகுதியில் நேற்றைய தினம் கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்று இனங்காணப்பட்டதையடுத்து பளை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.
பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன் மாவட்ட நீதிமன்ற நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் இன்று காலை சம்பவ இடத்திற்கு வருகை தந்து குறித்த மனித எச்சம் மற்றும் மனித எச்ச இனங்காணப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மூலம் குறித்த பகுதியை கண்ணிவெடி அகற்றும் பணியை முன்னெடுக்குமாறும் கிடைக்கப்பெறுகின்ற எச்சங்கள் மற்றும் தடயங்கள் தொடர்பாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டுவருமாறும் தற்போது கிடைக்கப்பெற்ற மனித எச்சங்கள் சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பி வைக்குமாறும் எதிர்வரும் திங்கட்கிழமை சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிடுவதாகவும் நீதவான் தெரிவித்தார்.
ஈரான் ஜனாதிபதிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அளித்த இராப்போசன விருந்துபசாரத்தில் எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாஸ கலந்துகொள்ளாமைக்கு காரணம் என்ன என்பதை விளக்கி எதிா்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின் விபரம் வருமாறு –
ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி அவர்களுக்காக நடைபெற்ற இராப்போசன விருந்தில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்காதது குறித்து தவறான தகவல்களைப் பரப்பும் அரச சார்பு ஊடகங்களின் அரசியல் முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இலங்கைக்கான விஜயத்தின் போது ஈரான் ஜனாதிபதியை சந்திக்க எதிர்க்கட்சித் தலைவர் விருப்பம் கொண்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் ஈரான் தூதரகத்திற்கும் அறிவித்துள்ளது.
அவ்வாறு இருக்கும் போது சில ஊடகங்கள் மேற்கொள்ளும் ஊடக நடவடிக்கைகள் மூலம் ஈரான் ஜனாதிபதிக்கு எதிர்ப்புத் தெரிவுக்கும் முகமாக இராப்போசன விருந்தில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்க முயற்சிப்பது அடிப்படையற்ற விடயமாகும்.
இந்த இராப்போசன விருந்தில் எதிர்க்கட்சித் தலைவர் கலந்து கொண்டிருந்தால் “ரணில் – சஜித் அரசியல் டீலுக்குத் தயார்” என்று அவதூறு ஒன்றை உருவாக்கி பரப்பவும் இந்த ஊடகவியலாளர்கள் தயாராக இருந்தமை தெரிய வந்தமை இந்த தீர்மானத்துக்கு வருவதற்கான மற்றுமொரு காரணம் என குறிப்பிட விரும்புகின்றோம்.
ஐக்கிய மக்கள் சக்தி என்ற வகையில், கௌரவ ஈரான் ஜனாதிபதி அவர்களும், ஈரான் மக்களும் இலங்கையுடன் தொடர்ந்தும் மேற்கொள்ளும் நட்புறவை நாம் எப்போதும் மெச்சுகின்றோம்.”
உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலில் ஈடுபட்ட சஹரான் ஹாசிமை வளர்த்தவர் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சாலே என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவ தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சுரேஸ் சாலே தற்போது தனக்கும் இந்த விடயத்திற்கும் தொடர்பில்லை என காண்பிக்க முயன்றாலும் அவர் இதிலிருந்து தப்ப முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் பதவியிலிருந்த வேளை அவரை அரச புலனாய்வு பிரிவிலிருந்து நீக்கினேன். ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ அவரை மீண்டும் அந்த பதவிக்கு நியமித்தார் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சுரேஸ் சாலேயின் வலதுகரமான பொனிபேஸ் பெரேரா கிழக்கிற்கு பொறுப்பான இராணுவஅதிகாரியாக நியமிக்கப்பட்டார் எனவும் தெரிவித்துள்ள சரத் பொன்சேகா, சுரேஸ் சாலே என்மீது அவறுதூறு தெரிவித்தால் நான் இந்த ஆவணத்தை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன். அது அவர் எப்படிப்பட்டவர் என்பதை வெளிப்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார்
சஹரான் ஹாசிமுடன் தொடர்பிலிருந்த இவ்வாறான நபர்களே கௌரவம் மிக்க வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க நேற்று வியாழக்கிழமை இரவு சுவீடனுக்கு பயணமானார்.
சுவீடனில் இடம்பெறவுள்ள மக்கள் சந்திப்பு மற்றும் சினேகபூர்வமான சில ஒன்றுகூடல்களிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.
ஏப்ரல் 27 சனிக்கிழமை சுவீடனில் NACKA AULAஇல் அந்நாட்டின் நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு STOCKHOLM மக்கள் சந்திப்பை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் சுவீடன் குழுவினால் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மத்தள சர்வதேச விமானத்தின் நிர்வாகத்தை இந்தியா மற்றும் ரஷ்ய நிறுவனங்களிடம் ஒப்படைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது
அதன்படி மத்தள சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை 30 வருட காலத்திற்கு இந்தியாவின் ஷௌரியா ஏரோநாட்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் (Shaurya Aeronautics pvt ltd) மற்றும் ரஷ்யாவின் ஏர்போர்ட்ஸ் ஆஃப் ரீஜியன்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனத்திடம் (airports of Regions Management company)ஒப்படைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
போர் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்தும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 1512 குடும்பங்கள் அகதி நிலையிலேயே வாழ்கின்றனர் என்று யாழ். மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நிரந்தர வதிவிடமின்றி, 1,512 குடும்பங்களைச் சேர்ந்த 4,567 பேர் இருக்கின்றனர். இவர்களில் 10 குடும்பங்கள் நலன்புரி நிலையங்களிலும் 1,502 குடும்பங்கள் உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.
இவர்களுக்கு அரசாங்கம் எதுவுமே செய்யவில்லை. இவர்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட வேண்டியவர்கள்என்றும் அவர் கூறியுள்ளார்.