இலங்கையில் அர்த்தமுள்ள வகையிலான பொறுப்புக்கூறல் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டுமென கனடா வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டு பத்து ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு வெளியிட்டுள்ள காணொளி ஒன்றிலேயே கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
வெளியிடப்பட்டுள்ள காணொளியில், ’26 ஆண்டுகளாக நீடித்து வந்த யுத்தம் பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போதும் அதற்கு முன்னரும் பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன், பல்லாயிரக் கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளார்கள். யுத்தம் நாடு முழுவதிலும் ஆறாத வடுக்களை ஏற்படுத்திச் சென்றுள்ளது.
கடந்த ஒரு தசாப்த காலமாக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் கனேடியர்கள் பலரை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து, அவர்களின் வலிகள் வேதனைகளை கேட்டறிந்துகொண்டுள்ளேன்.
தமிழ்க் கனேடியர்களுடான சந்திப்புக்களின் ஊடாக இலங்கையில் சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் நிலைநாட்டுவது மிக நீண்ட பயணம் என்பதனை புரிந்து கொண்டேன்.
பாதிக்கப்பட்டவர்களினால் நம்பக்கூடிய வகையிலான பொறுப்புக் கூறல் பொறிமுறைமை ஒன்றை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றேன்.
சர்வதேச மற்றும் உள்நாட்டு ரீதியில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இந்த பொறுப்புக்கூறல் பொறிமுறைமை அமைய வேண்டும்.
யுத்தம் காரணமாக சொந்தங்களை இழந்த, பல்வேறு வழிகளில் இழப்புக்களை எதிர்நோக்கிய மற்றும் பாதிப்புக்குள்ளான அனைவருக்கும் கனேடிய அரசாங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தத்தையும் வெளியிட்டுக் கொள்கின்றேன்.
அண்மையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அனைத்து மக்களும் தங்களது நம்பிக்கைகளின் ஊடாக வழிபாடுகளில் ஈடுபடக்கூடிய சுதந்திரம் இருக்க வேண்டும்.
கனடாவின் வளர்ச்சிக்கு தமிழ் கனேடியர்கள் வழங்கி வரும் பங்களிப்புக்களை அனைத்து கனேடியர்களும் அங்கீகரிக்க வேண்டுமென இந்த சந்தர்ப்பத்தில் கோருகின்றேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்திதொடர்பில் கருத்து வெளியிட்ட மனிதஉரிமைச் செயற்பாட்டாளர் ஒருவர்
கருத்துத் தெரிவிக்கையில் ‘தமிழ் மக்கள் சிறிலங்கா அரசை முற்றாக நம்பிக்கை அற்ற நிலையிலேயே அனைத்துலக விசாரணையொன்றை கோரிவருகின்றனர். இது கனடாப் பிரதமர் அறியாததல்ல. இந்நிலையில் அனைத்துல விசாரணையொன்றை அவர் வலியுறுத்தியிருக்கவேண்ம். அதைவிடுத்து பொறுப்புக்கு கூறல் பொறிமுறையொன்றை சிறிலங்காவே உருவாக்கவேண்டு எனக் கூறுவது அவர் அனைத்துலக விசாரணையை நிராகரிப்பதற்கு ஒப்பானது’ என்கிறார்.
தமிழீழ தேசத்தில் மட்டுமல்லாது தமிழர்கள் பரவிவாழும் தேசங்கள் எங்கும் இனவழிப்பு நினைவுநாள் மே 18 அன்று உணர்வுடன் கடைப்பிடிக்கப்பட்டது.
நிகழ்வுகளில் இனவழிப்பை வெளிப்படுத்தும்,அதற்கான நீதிகோரும் பதாகைகள்,ஒளிப்படங்கள் என்பவற்றைத் தங்கி மக்கள்
பேரணிகளை நடத்தினர். கலைநிகழ்வுகள் ஊடாகவும் இனவழிப்பின்
கொடூரங்கள் வெளிக்கொணரப்பட்டன.
சில இடங்களில் வாசகங்கள் பொறிக்கப்பட்ட கருப்புநிற பலூன்கள் வானில் விடப்பட்டதையும் காணக்கூடியதாக இருந்தது. தேசத்துக்காக போராடி உயிரீந்த மறவர்கள், மற்றும் கொன்றொழிக்கப்பட்ட மக்கள் ஆகியோரை நினைவிருத்தி மலர்வணக்கமும் இடம்பெற்றது.
திருகோணமலைப் பகுதியில் உள்ள அலஸ்ட்தோட்டத்தில் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வு நேற்று (18) இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் அருட்தந்தை மதுரங்கன் குரூஸ் நினைவுச்சுடரை ஏற்றிவைத்தார். குறிந்த நிகழ்வில் தமிழ் உறவுகளும், வெளிநாட்டுப் பிரஜைகளும் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இலங்கை உள்நாட்டுப் போரின் போது உயிர் தப்பி வந்து ஜேர்மனியில் கல்வி கற்று இன்று அந்நாட்டின் புகழ்மிக்க ஒரு மருத்துவராக விளங்கும் இதயமாற்று அறுவைச் சிகிச்சை நிபுணர் வைத்தியர் அருணகிரிநாதன் உமேஸ்வரனின் வாழ்க்கைப் பயணத்தை சற்று நோக்குவோம்.
ஐந்து பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இரண்டாவது குழந்தையான இவர், குடும்பத்தின் முதல் ஆண்குழந்தையாவார். இவருக்கு ஒரு அக்கா, இரண்டு தங்கைகள் மற்றும் ஒரு தம்பி என பெரிய குடும்பமாக யாழ்ப்பாணம் அருகிலுள்ள புத்தூரில் வாழ்ந்து வந்தார்.
இறுதி யுத்த காலத்தில் இவருக்கு எட்டு வயதிருக்கும். அப்போது அவருக்கு உள்நாட்டுப் போரின் தீவிரம் பற்றி தெரிந்திருக்கவில்லை. அப்போது இவர் இறந்த ஒருவரின் உடலை முதன்முதலாக பார்த்திருந்தார்.
அவரது வீட்டருகே நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவரை பார்ப்பதற்காக சென்றிருந்தபோது, அவரின் கண்களை அம்மா கையால் மூடிக்கொண்டார். ஆனால், எப்படியோ கண்ணை கொஞ்சம் திறந்து படுகாயங்களுடன் உயிரிழந்திருந்த அந்த நபரை பார்த்து விட்டார்.
அன்றைய தினம் முதல் இன்றுவரை அந்த காட்சிகள் மனதில் ஓடும் போதெல்லாம் உடல் முழுவதும் வியர்த்து, பயம் ஏற்படுவதாக, உள்நாட்டுப் போர் பற்றி உமேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
போரின்போது சிறிலங்கா ராணுவத்தினால் பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர்களை தாங்கள் முதலை என்று அழைத்ததாக கூறும் உமேஸ்வரன், தனக்கு சுமார் பத்து வயதிருக்கும்போது, தங்களது குடியிருப்பு பகுதிகளை சுற்றி வளைத்த ராணுவம் முதலைகளை (ஹெலிகாப்டர்களை) கொண்டு குண்டு மழை பொழிந்ததாக கூறுகிறார்.
அந்த வேளையில் தனது தாயார், தங்களை வீட்டின் முன் இருந்த மரத்தின் கீழ் தனித்தனியாக உட்கார வைத்ததாக தெரிவித்த அவர் . அப்போது அந்த செயல் தனக்கு கோபத்தை மூட்டியதாகவும் ஆனால் தற்போது அதன் காரணத்தை தான் உணர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
போர் தீவிரமாக நடைபெற்ற போது தனது மூத்த சகோதரி சிறுநீரகம் செயலிழந்ததால், சிகிச்சை அளிக்க வசதியில்லாத காரணத்தினால் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தார். அப்போது தனது தாயார் தங்கள் வீட்டில் ஒரு மருத்துவர் இருந்திருந்தால் தனது சகோதரி உயிரிழந்திருக்க மாட்டார் என்று கூறியதே தனது இந்த மருத்துவர் பதவியில் தான் இருப்பதற்கு அடிப்படைக் காரணம் என்றும் கூறுகிறார்.
போரின் காரணமாக பாடசாலைக் கல்வியை சீராக பெற முடியாத நிலையில் ஆறாம் வகுப்புடன் தனது கல்வியை நிறுத்தி, மண்ணெண்ணை விற்று தனது குடும்பத்தினருக்கு உதவியதாக கூறும் அவர், மேலும் கூறுகையில், இந்த வேளையில் தான் தன்னை ஜேர்மனிக்கு அனுப்புவதற்கு தனது குடும்பத்தினர் திட்டமிட்டதாகக் கூறுகின்றார்.
ஜேர்மனி செல்வதற்காக, யாழ்ப்பாணத்திலிருந்து தானும் தனது தாயாரும் மிகவும் கடினமான பயணத்தினை மேற்கொண்டு, எட்டு நாட்களின் பின்னர் கொழும்பிற்கு வந்து சேர்ந்ததாகவும், அங்கு தங்குவதற்கு வீடு எதுவும் இல்லாததால் வாகனத் தரிப்பிடத்தில் தங்கி தனது கடவுச்சீட்டு ஒழுங்குகளை மேற்கொண்டதாகவும், இது பற்றி ஜேர்மனியில் இருக்கும் தனது தாய் மாமனிடம் பேசி முழு வேலைகளையும் முடிப்பதற்கு ஆறு மாதங்களாகியதாகவும் தெரிவித்தார்.
குறித்த நாள் அன்று காலையில் தன்னை எழுப்பிய தனது தாயார், தான் தனியாகவே ஜேர்மனி செல்வதாக தனக்கு தெரிவித்த போது, தான் அழுது விட்டதாகக் கூறினார். அப்போது ”நீ நன்றாகப் படித்து, ஒரு டாக்டராக வேண்டும் என்றும், இரகசியங்களை வெளியிடக் கூடாது, குடிப்பழக்கத்தை மேற்கொள்ளக் கூடாது என்றும் கூறியவை தற்போதும் தனது நினைவில் உள்ளதாக தெரிவிக்கின்றார்.
புறப்பட்ட நாளிலிருந்து ஜேர்மனி வந்து சேர்வதற்கு தனக்கு ஆறு மாதங்கள் சென்றதாக தெரிவித்த அவர், பல நாடுகளில் தங்கியிருந்து பல கஸ்டங்களை அனுபவித்ததாகவும், இருவேளைகளில் மட்டுமே உணவு உண்ண முடிந்ததாகவும், இவ்வேளையில் தனது குடும்பத்தினர் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்ற தகவலைக்கூட தன்னால் பெறமுடியவில்லை என்றும், இந்நிலையிலேயே இறுதியில் ஜேர்மனியின் பிராங்பேட் நகரை சென்றடைந்ததாகவும் கூறினார்.
.ஜேர்மனிக்குள் வந்த நேரம் தான் நித்திரையாகி விட்டதாகவும், விழித்த போது ஜேர்மனிய காவல்துறை அதிகாரி ஒருவரும், மொழிபெயர்ப்பாளர் ஒருவரும் தன்னுடன் இருந்ததாகவும், நாட்டிலுள்ள பிரச்சினை காரணமாக அந்தப் படையினரை பார்த்ததும் தனக்கு பயம் ஏற்பட்டதாகவும், அவர்கள் தன்னை நன்றாக கவனித்ததாகவும் தெரிவித்தார். அவர்களிடம் தனது நாட்டில் தான் அனுபவித்த சம்பவங்கள் பற்றி தெரிவித்த போது, அவர்கள் தனக்கு சொக்கிளேற் ஒன்றை கொடுத்ததாகவும் தெரிவித்தார். தனது மாமாவின் தொலைபேசியைப் பெற்று, ஆவணங்களை சரிபார்த்த பின்னர், தன்னை தனது மாமனாருடன் அவர்கள் அனுப்பி வைத்ததாக கூறினார்.
மொழி தெரியாத நாட்டில் ஆறுமாதங்கள் மொழிப் பயிற்சி பெற்ற பின் நேரடியாக தான் 7ஆம் வகுப்பில் சேர்க்கப்பட்டதாக கூறுகின்றார்.
. ஏழாம் வகுப்பு முதல் ஜெர்மன் மொழி மட்டுமின்றி, அதன் மக்கள், வாழ்க்கைமுறை, பழக்க வழக்கங்கள், உணவு முறை போன்றவற்றை படிப்படியாக கற்றுக்கொண்டு வந்த உமேஸ்வரனுக்கு 9ஆம் வகுப்பு படிக்கும்போது அவரது வாழ்வின் குறிப்பிடத்தக்க சம்பவம் ஒன்று நடந்ததாக கூறுகிறார்.
9ஆம் வகுப்பு படிக்கும்போது ஜெர்மன் மொழியில் குறிப்பிடத்தக்க அளவுக்கு உரையாட கற்றுக்கொண்ட சமயத்தில், இலங்கையில் ஆறாம் வகுப்பு வரை படித்த போது, மாணவ தலைவனாக செயல்பட்டதை போன்று, இங்கேயும் இருக்க விரும்புவதாக தெரிவித்த போது, வகுப்பின் தலைவனாக தேர்ந்தெடுக்கப்பட்டது மட்டுமின்றி, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு தனது ஒட்டுமொத்த பள்ளியின் தலைவனாகவும் விளங்கியதாக கூறுகின்றார்.
இந்நிலையில் பத்தாம் வகுப்பில் கல்வி கற்கும் போது, ஜேர்மனியை விட்டு வெளியேற வேண்டும் என்ற தகவல் தனக்கு தரப்பட்டதாகவும், இதனை தாங்க முடியாது தான் ஒருதடவை தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவிக்கும் இவர், தனது தாயார் பட்ட கஸ்டத்தை நினைத்து, தன்னை தேற்றிக் கொண்டு மறுநாள் பாடசாலை சென்று விபரத்தினை தன் ஆசிரியர், தனது நண்பர்களுக்கு தெரிவிக்க, அவர்கள் பணம் திரட்டி அரசின் இந்த முடிவை எதிர்த்து வழக்குத் தொடர்ந்த போது, இறுதியில் கல்வி முடியும் வரை தான் ஜேர்மனியில் தங்கியிருக்க தனக்கு அனுமதியளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து, ஹம்பர்க் நகர மாணவ தலைவர்கள் குழுவில் ஒருவனான தன்னை, அம்மாகாணத்தின் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு அழைப்பு விடுத்தனர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு, தன் வாழ்க்கை பயணத்தை விளக்கியதுடன்,தான் ஜெர்மனிலேயே இருப்பதற்கான அனுமதியை அளிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியதாகவும், தனது பள்ளி வாழ்க்கையின் முக்கிய தருணங்களை உமேஸ்வரன் விளக்கினார்
ஹம்பர்க் மாகாண நாடாளுமன்றத்தில் உமேஸ்வரனது உரையை கேட்டவர்கள், அவரை தொடர்ந்து ஜெர்மனிலேயே தக்க வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தனர். அதன் ஒருபகுதியாக, பள்ளிப்படிப்பை முடித்த அவரது கனவான மருத்துவத்தில் சேர்ப்பதற்கு உதவியது மட்டுமின்றி, அவரை தற்காலிகமாக டென்மார்க் அனுப்பி, அங்கிருந்து பல்கலைக்கழக படிப்பை படிப்பதற்காக மாணவர் விசாவுக்கு விண்ணப்பிக்க வைத்து, அவரை மீண்டும் ஜெர்மனிக்கு வரவழைப்பது வரையிலான பல்வேறு உதவிகளை அவரின் ஆசிரியர் ஒருவர் தானே முன்னின்று செய்ததாகவும் அவர் கூறுகிறார்.
1999ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக்கொண்டு, பகுதி நேரமாக வேலை செய்ததாகவும், இதனால் ஆறாண்டுகளில் முடிக்க வேண்டிய படிப்பை தான் எட்டாண்டுகளில் முடித்ததாகவும், அதன் பிறகு, இருதய அறுவை சிகிச்சை நிபுணருக்கான பயிற்சியை கடந்த பதினோரு ஆண்டுகளாக மேற்கொண்டு வந்ததாகவும்,
ஜெர்மனி அதிபரின் பாராட்டு
இலங்கை உள்நாட்டுப் போர் முதல் ஜெர்மனியின் புலம்பெயர்ந்தவர்கள் சமுதாயத்தின் குறிப்பிடத்தக்க சாதனையாளராக உயர்ந்தது வரையிலான தனது வாழ்க்கை பயணத்தை அடிப்படையாக வைத்து, உமேஸ்வரன் இதுவரை இரண்டு புத்தகங்களை ஜெர்மானிய மொழியில் எழுதியுள்ளார்.
“மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற எனது புத்தகங்கள் குறித்து தொலைக்காட்சி ஒன்றில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் தான் பேசியதை கேட்ட ஜெர்மன் நாட்டின் உள்துறை அமைச்சர், அந்நாட்டு அதிபர் தலைமையில் நடைபெறும் அகதிகள் தொடர்பான நிகழ்ச்சியில் தன்னை சிறப்புரை வழங்குமாறு கேட்டுக்கொண்டதாகவும், அதன்படி, சென்ற ஆண்டு நடைபெற்ற தேசிய அளவிலான விழாவில், ”நான் பார்ப்பதற்குதான் வேறொரு நாட்டை சேர்ந்தனாக தெரிகிறேன்; ஆனால், உள்ளுக்குள்ளே நான் ஜெர்மானியன்; அது என்னுடன் பழகினால்தான் தெரியும்” என்ற பொருளை உதாரணத்துடன் விளக்கிய போது, அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் தன்னிடம் பேசிய ஜெர்மன் அதிபர் ஏங்கலா மெர்கல், தன்னை வெகுவாக பாராட்டியதாகவும் கூறினார்.
தனது குடும்பத்தினரை நல்ல நிலைக்குக் கொண்டு வந்து, அவர்கள் இப்போது அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் பிரஜாவுரிமை பெற்று வசிப்பதாகவும் தெரிவித்தார். தான் வெளிநாடு வந்து 15 ஆண்டுகளின் பின்னர் குடும்ப உறவினர்களை 2005இல் தான் லண்டனில் சந்தித்ததாகக் கூறினார்.
தந்தையார் காலமாகி விட்டதாகவும், தங்கள் சகோதரர்கள் வெவ்வேறு நாடுகளில் வசித்த போதும், தனது தாயார் இப்போதும் சொந்த மண்ணில் இருப்பதாகவும் கூறுகின்றார்.
கடைசியாக, தனது குடும்பம் சிதறுண்டு, பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து, உறுப்புகளை இழந்து, லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் நீங்கா வடுவை ஏற்படுத்திய இலங்கை உள்நாட்டுப் போருக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்றும், அதுவே மக்களுக்கு நீதியை பெற்றுத்தரும் ஒரே வழியென்றும் உமேஸ்வரன் கூறுகிறார்.
கடந்த மாதம் சிறீலங்காவின் தென்னிலங்கையிலும், கிழக்குமாகாண தமிழர் பூமியிலும் இடம்பெற்ற முஸ்லீம் தீவிரவாதிகளின் தற்கொலைத் தாக்குதல்களைத் காரணம் காட்டி வடக்கில் தமிழ் மக்களை அச்சுறுத்தி முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை சிறீலங்கா படையினர் கடந்த வாரங்களில் மேற்கொண்டிருந்தனர்.
மாணவ சமூகத்தின் செயற்பாடுகளை மழுங்கடிக்கும் நோக்கத்துடன் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர்களை கைது செய்தும் இருந்தனர்.
எனினும் சிறீலங்கா அரசின் இனஅழிப்பின் உச்சக்கட்டமான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மிகவும் உணர்வுபூர்வமாக நேற்று (18) நினைவுகூர்ந்ததாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிகழ்வில் சிறீலங்கா அரநின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் பெருமளவான மாணவர்கள் கலந்து கொண்டிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஈரானின் குறுந்தூர ஏவுகணைகள் வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்காவின் கப்பல்களை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டவை எனவே அது உலகத்தின் எரிபொருள் வழங்கல்களில் அதிக தாக்கங்களை ஏற்படுத்தலாம் என ஈரானின் மூத்த படைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என த கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
தமது பிராந்தியத்தில் அமெரிக்காவே பதற்றத்தை தோற்றுவித்து வருவதாக கடந்த வெள்ளிக்கிழமை (17) ஈரான் தெரிவித்த குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து நிலமை மேலும் தீவிரமடைந்துள்ளது.
இது ஒரு மோதலுக்கு வழிவகுக்கலாம் என மேற்குலக புலனாய்வு அதிகாரிகள் கருதுகின்றனர். போர் ஏற்பட்டால் அது உலகின் எரிபொருள் வினியோகத்தை பாதிக்கும் என ஈரானின் இராணுவ ஜெனரல் சாலேஷ் ஜேகர் தெரிவித்துள்ளார்.
ஈரானின் பொருளாதாரத்தை முடக்குவதற்கு அமெரிக்கா கடுமையான முயற்சிகளை மேற்கொள்வதுடன், அணு ஒப்பந்தத்தில் இருந்து தன்னிட்சையாக விலகியதும் பல பின் விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளும் போரின் விழிம்பில் உள்ளன என ஈரானின் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் குசேன் சலாமி கடந்த வியாழக்கிழமை தெரிவித்திருந்தார். இஸ்லாமியப் புரட்சியில் இது ஒரு முக்கியமான தருணம் ஏனெனில் எதிரி தனது முழு பலத்துடன் மோதலுக்கு தயாராக வந்துள்ளான்.
ஈரான் மீதான பொருளாதாரத் தடை எமக்கு மிக அதிக பாதிப்புக்களை கொடுத்துள்ளது. பிராந்திய ஆதிக்கத்தில் இருந்து நாம் புறந்தள்ளப்படுகின்றோம். ஈரான் – ஈராக் போருக்கு பின்னர் நாம் மிகப்பெரும் நெருக்கடிகளை சந்தித்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே .அண்மையில் ஈராக்குக்கு பயணம் மேற்கொண்ட ஈரான் படை அதிகாரி அங்குள்ள குழுக்களுக்கு அழைப்பு விடுத்திருந்ததாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட த கார்டியன் நாளேடு கடந்த வாரம் தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து ஈராக்கில் உள்ள தமது படையினரை எச்சரிக்கையாக இருக்குமாறு பிரித்தானியயா தெரிவித்திருந்தது.
கடந்த வாரம் சவுதி அரேபியாவின் இரண்டு எண்ணைத்தாங்கி கப்பல்கள் உட்பட நான்கு கப்பல்கள் ஐக்கிய அரபு இராட்சிய கடற்பகுதியில் தாக்குதலுக்கு உள்ளாகி சேதமடைந்ததைத் தொடர்ந்து மேலும் பதற்றங்கள் அதிகரித்திருந்தது.
இந்த தாக்குதலின் பின்னனியில் ஈரான் உள்ளதாக பிரித்தானியாவும் அமெரிக்காவும் கருதுகின்றன. இந்த தாக்குதலின் பின்னர் யேமன் பகுதியில் உள்ள ஈரான் சார்பு குழு ஒன்று சவுதி அரேபியாவின் இரண்டு என்ணை குழாய்களை ஆளில்லாத விமானங்கள் மூலம் தாக்கியழிக்க முற்பட்டிருந்தது.
தனது எண்ணைக் கப்பல்களை தாக்கியதற்கு பதிலடி கொடுப்பதற்கு சவுதி திட்டமிட்ருந்ததாக புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். அதற்கான அனுமதியை சவுதி அமெரிக்காவிடம் கேட்டிருந்தது.
கடந்த 15 வருடங்களாக அமெரிக்காவும் ஈரானும் ஒரு நேரடியற்ற மோதல்களில் ஈராக்கில் ஈடுபட்டிருந்தன. ஈராக்கில் உள்ள பெரும்பான்மை சியா முஸ்லீம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி வந்த குழுக்களை ஈரானே வழிநடத்தியிருந்தது. அமெரிக்கப் படைகள் சந்தித்த இழப்புக்களில் 25 விகிதமானவை இந்த குழுக்களால் ஏற்பட்டவை.
ஆனால் ஐ.எஸ்.ஜ.எஸ் உடனான மோதல்களில் ஈரானுடன் இணைந்தே அமெரிக்கா மோதல்களில் ஈடுபட்டிருந்தது. ஈராக்கில் இருந்து அமெரிக்கப்படைகள் வெளியேறிய பின்னர் ஈரான் அந்த பகுதிகளில் தன்னைப் பலப்படுததியிருந்தது.
சிரியாவில் இடம்பெற்ற போரும் ஈரானின் பலப்படுத்தல்களுக்கு காலத்தை வழங்கியிருந்தது. இது இஸ்ரேலுக்கு நெருக்கடியை தோற்றுவித்துள்ளது. சிரியாவின் மேற்குப் பகுதியில் ஈரான் தனது ஆதிக்கத்தை செலுத்தியதே டொனால் ரம்ப் அரசை சீற்றமடைய வைத்திருந்தது.
ஈரான் பலமடைந்து வருவதை அமெரிக்காவின் நட்பு நாடுகளான அபுதாபி மற்றும் சவுதி ஆகியவை விரும்பவில்லை. அது சுனி மக்களைக் கொண்ட அரபு உலகத்திற்கு அச்சுறுத்தலானது என அவை கருதுகின்றன.
.
.
சிறீலங்கா அரசினால் ஈழத்தில் மேற்கொள்ளப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாவது ஆண்டு நிகழ்வுகள் தமிழகத்தின் பல பகுதிகளில் மக்களாலும், அரசியல் கட்சிகளினாலும் நினைவுகூரப்பட்டன.
நாம் தமிழர் கட்சியின் நினைவேந்தல் நிகழ்வில் அதன் ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் கலந்து கொண்டிருந்தார். சென்னையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் சுடர் வணக்கம், வீரவணக்கம் மற்றும் மலர் வணக்கம் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. இந்த நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அதேசமயம் தமிழர் கடற்கரையான தனுஷ்கோடி கடற்கரைப் பகுதியில் அதிகாலை 6 மணியளவில் ஈழத்தை நோக்கிய திசையில் தீபங்கள் ஏற்றப்பட்டு நினைவு தினம் நடத்தப்பட்டது.
இதனிடையே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளர் திரு வை கோபலசாமி அவர்களின் தலைமையில் எழும்பூரில் உள்ள அதன் தலைமையகத்தில் நினைவுதினம் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, கவிஞர் காசி ஆனந்தன், இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, கழக அமைப்புச் செயலாளர் வந்தியதேவன், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் செங்குட்டுவான், வழக்கறிஞர் ஆவடி அந்திரிதாஸ், கவிஞர் மணிவேந்தன் மற்றும் கழக உறுப்பினர்கள், மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் பேசிய வைகே அவர்கள் தந்தை செல்வாவினால் முன்மொழியப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்தை தமிழிலும் ஆங்கிலத்திலும் உலகம் எங்கும் இளைய தலைமுறையிடம் எடுத்துச் செல்லவேண்டும், அது ஒன்று போதும் தமிழீழம் ஏன் வேண்டும் என்பதற்கான பதிலும் , அடையும் வழிமுறையும் உண்டு என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்திருந்தார்.
மேலும் வட்டுக்கோடடை தீர்மானத்தைப்போல் இந்த உலகத்தில் எந்த சட்ட வரைபும் இல்லை, ஈழத்தமிழர்கள் எவ்வளவுக்கு அறிவானவர்களும் ஆற்றலானவர்கள் என்பதும் புலப்படும். அந்த தீர்மானத்தின் வழியிலேயே வந்தவர்தான் தலைவர் பிரபாகரன் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
தமிழகம் தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் 10ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் திராவிடர் விடுதலை கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் என கலந்துகொண்டு சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தினர்.
முள்ளிவாய்க்கால் தமிழர் அழிப்பு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (18) மட்டக்களப்பு வாகரை மாணிக்க கடற்கரையிலும் இடம்பெற்றது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நிர்வாகிகள் ,உறுப்பினர்கள் தமிழ்மக்கள் நலன் காப்பக நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு , சுடரேற்றி வணக்கம் செலுத்தினர்.