உலகெங்கும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் வேளையில், உலக மக்கள் பலரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். இதனால் இயற்கையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் சுற்றுச் சூழல் மாசு கணிசமானளவு குறைந்து வருவதாக கூறப்படுகின்றது.
வாகன பயன்பாடுகளின் குறைவு மற்றும் தொழிற்சாலைகள் மூடல் ஆகியவற்றின் காரணமாக காற்று மாசுபாடு கணிசமாக குறைந்துள்ளதாக சமீபத்திய செயற்கைக்கோள் தரவுகள் குறிப்பிடுகின்றது.
வடகிழக்கு அமெரிக்கா முழுவதும் காற்று மாசுபாடு கடந்த சில வாரங்களில் சுமார் 30 வீதம் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் உலகின் ஏனைய பகுதிகளையும் நாசா விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 2015 முதல் 2019 மார்ச் வரையிலான காலகட்டத்தில் காற்று மாசுபாட்டை இந்தப் படம் காட்டுகின்றது.
எவ்வாறாயினும் இந்த செயற்கைக் கோள் படம் உலகளவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக எவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகின்றது.
2020ஆம் ஆண்டிற்கான இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் எதிர்வரும் மே 11ஆம் திகதி ஆரம்பமாகும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே ஏப்ரல் 20ஆம் திகதி பாடசாலைக்கான 2ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக ஏற்கனவே திட்டமிடடதைப் போன்று ஏப்ரல் 20ஆம் திகதி ஆரம்பிக்க முடியாத காரணத்தினால் மே மாதம் 11ஆம் திகதி பாடசாலைகளுக்கான 2ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத் தேர்தலை ஜுன் மாதத்தின் இறுதிப் பகுதியில் நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு பரிசீலித்து வருகின்றது என அரசியல் கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
தேர்தல் தொடர்பான புதிய அறிவிப்பு மே மாதம் ஆரம்பத்தில் அறிவிக்கப்படின் தேர்தல் பரப்புரைக்கு 45 நாட்கள் வழங்கப்பட வேண்டும். அந்த நாட்களைக் கருத்தில்கொண்டு தேர்தல் திகதி தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பகிரங்கமாக அறிவிப்பார் எனவும் கூறப்படுகின்றது.
மலரும் மங்களகரமான சார்வரி என்ற புதிய ஆண்டு (13.04.2020) திங்கட்கிழமை முன்னிரவு நாடி 33 விநாடி 20 அபரபக்க ஷஷ்டி திதியில் மூல நட்சத்திரத்தின் நான்காம் பாகத்தில் துலா லக்கினத்தில் வருடம் பிறக்கிறது.
விஷூ புண்ணிய காலம்
பிற்பகல் நாடி 23 விநாடி 20 (3.26 மணி) முதல் அன்று முன்னிரவு நாடி 43 விநாடி 20 (11.26 மணி) வரை விஷூ புண்ணிய காலமாகும்.
மருத்து நீர், ஆடை
இந்நேரத்தில் மருத்து நீர் வைத்து நீராடி வௌ்ளை நிறமுள்ள பட்டாடை ஆயினும் வௌ்ளைக் கரை அமைந்த புதிய பட்டாடை ஆயினும் அணிய வேண்டும்.
கைவிசேஷம்
16.04.2020 இரவு 10.37 – 12.23 வரை 17.04.2020 அதிகாலை 3.08 – 4.04 வரை 17.04.2020 அதிகாலை 4.16 – 5.47 வரை 20.04.2020 நண்பகல் 12.06 – 1.46 வரை
அனைவருக்கும் அத தெரண செய்திப்பிரிவு சார்ப்பில் மகிழ்ச்சி நிறைந்த சௌபாக்கியமான சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்…
கோவிட்-19 வைரஸ் இற்கான தடுப்பு மருந்து பொதுமக்களின் பாவனைக்கு எதிர்வரும் செப்ரம்பர் மாதம் வந்துவிடும் என ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தின் வைரஸ் தொடர்பான ஆய்வுப் பேராசிரியர் சார கில்பேட் பி.பி.சி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
இந்த மருந்தின் உற்பத்தி வடிவமைப்பு நிறைவடைந்துவிட்டது, அதனை மனிதர்களில் பரிசோதனை செய்யும் நடவடிக்கைகளை நாம் விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம்.
அதன் பின்னர் அதனை மிக அதிக அளவில் உற்பத்தி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்படும். பரிசோதனைகளை மேற்கொள்ளாது உற்பத்தியை ஆரம்பிக்க முடியாது. அது மனிதர்களுக்கு விசத்தை கொடுப்பது போல ஆகிவிடும்.
எனினும் நாம் உற்பத்தியை ஆரம்பிக்கும் போது பில்லியன் கணக்கான மருந்துகளை விரைவாக உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா நிலவுக்குப் போய் தாதுப் பொருகள்களை சுரங்கம் தோண்டி எடுக்கவேண்டும் என்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.
தொலைதூர விசும்பில் (அதாவது விண்வெளியில்) தாதுப் பொருள்களைத் தேடியெடுத்துப் பயன்படுத்த அமெரிக்காவுக்கு உரிமை உண்டு என்று தெரிவித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் ஒரு நிர்வாக ஆணை பிறப்பித்தார்.
விண்வெளியினை வளங்களைப் பெறுவதற்கான பொதுப் பரப்பாக அமெரிக்கா பார்க்கவில்லை என்றும், எனவே விண்வெளியில் தாதுப் பொருள்களை சுரங்கம் தோண்டி எடுக்க சர்வதேச ஒப்பந்தங்களின் அனுமதி தேவையில்லை என்றும் அந்த ஆணை தெரிவிக்கிறது.
ஆனால் எதற்காக விண்வெளியில் சுரங்கம் தோண்ட விரும்புகிறார் டிரம்ப்? அதனால் என்ன பலன் கிடைக்கும்?
ரேடியோ1 நியூஸ்பீட் சார்பில் சில வல்லுநர்களிடம் இது குறித்துப் பேசினோம்.
‘உயிர்வாழ்வை புவியைக் கடந்து கொண்டு செல்லுதல்’
நிலவில் சுரங்கம் தோண்டி தாதுப் பொருகள்களை எடுப்பது, மனிதர்கள் விண்வெளியில், செவ்வாய் போன்ற இடங்களை நோக்கி மேலதிக தூரம் பயணம் செல்வதற்கு உதவியாக இருக்கும் என்கிறார் சாரா குருடாஸ். இவர் ஒரு விண்வெளித்துறை இதழியலாளர். பால்வழிப் பயணத்துக்கான பெட்ரோல் நிலையமாக நிலவு ஆகும் வாய்ப்பிருக்கிறது என்கிறார் இவர். ஏனெனில் நிலவில் ராக்கெட் எரிபொருளுக்குத் தேவையான ஹைட்ரஜன், ஆக்சிஜன் முதலியவை நிலவில் கிடைக்கும் என்கிறார் சாரா.
விண்வெளியில் ஒரு பெட்ரோல் நிலையம் இருந்தால், எரிபொருள் தீர்ந்துவிடும் என்று கவலை இன்றி, மேலதிக தூரம் பயணிக்க முடியும் என்பது இவர் கூற்று. புவிக்குப் பயன்தரக்கூடிய ஏராளமான வளங்கள் விண்வெளியில் இருப்பதால், அதைத் தேடுவது முக்கியம் என்கிறார் அவர்.
பருவநிலை மாற்றத்தை கருத்தில்கொண்டு உலகமே புதுப்பிக்கவல்ல ஆற்றல் மூலங்களை நோக்கி நகர்கிறது. எனவே இத்தகைய விண் வளங்கள் தேவை என்கிறார் பேராசிரியர் பெஞ்சமின் சொவாகூல்.
இவர் சஸ்ஸெக்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆற்றல் கொள்கை தொடர்பான பேராசிரியராக இருக்கிறார். விண்வெளியில் தாதுப்பொருள்களை தோண்டி எடுத்தால் அது மின்சார கார் போன்ற சாதனங்களைத் தயாரிக்க உதவியாக இருக்கும். இது நீண்டகால நோக்கில் சுற்றுச்சூழலுக்கு நல்லதாக இருக்கும் என்கிறார் அவர்.
அவசியமானதாக இருக்கிற லித்தியம், கோபால்ட் போன்ற தாதுக்கள் சீனா, ரஷ்யா, காங்கோ போன்ற இடங்களில் முக்கியமாக கிடைக்கின்றன. அவற்றைப் பெறுவது மிக கடினமானது. உலகெங்கும் உள்ள பல்வேறு சப்ளையர்களிடம் இருந்து இத்தகைய தாதுக்களைப் பெறுவது சிக்கலானது. ஏனெனில் ஒவ்வோர் இடத்துக்கும் ஒரு சட்டம், விதிமுறை உள்ளது. இந்த வகையில் பார்த்தால் நிலவில் சுரங்கம் தோண்டி இவற்றைப் பெறுவதுதான் சிக்கல் இல்லாதது என்கிறார் பெஞ்சமின்.
காங்கோ போன்ற இடங்களில் இத்தகைய பொருள்களை சுரங்கம் தோண்டி எடுக்கும்பணி பயங்கரமான சூழ்நிலைகளில் நடக்கிறது.
ஆனால் நிலவில் சுரங்கம் தோண்டுவது என்ற திட்டம், குறுகிய காலத்தில் புவியில் பருவநிலை மாற்றத்துக்குத் தீர்வு ஏதும் தராது என்றும் எச்சரிக்கிறார் பெஞ்சமின்.
அமெரிக்க – சீன நெருக்கடி
உலகின் பிற பகுதிகளோடு ஒப்பிடுகையில் தாதுக்களைப் பெறுவதற்கான வாய்ப்பு அமெரிக்காவுக்கு குறைவாக இருப்பதே நிலவில் சுரங்கம் தோண்டவேண்டும் என்ற அமெரிக்க அதிபர் டிரம்பின் திட்டத்தின் பின்னணி காரணமாக இருக்கலாம்.
தாதுக்களைப் பெறுவதற்கான பந்தயத்தில் அமெரிக்கா தோற்றுவிட்டது. சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் முந்திச் செல்கின்றன என்கிறார் பெஞ்சமின். சீனா தோண்டி எடுக்கும் தாதுக்கள் உலகம் முழுவதும் கிடைக்கின்றன.
சீனர்கள் இல்லாத இடத்தில் உலோகங்களைப் பெற முடியுமானால் அது அதிபர் டிரம்ப் போன்ற ஆட்களை உண்மையில் கவரும். அத்தகைய ஓர் இடம்தான் விண்வெளி என்று கூறுகிறார் பெஞ்சமின்.
டிரம்ப் அதிபரானதில் இருந்து சீனாவுக்கும் – அமெரிக்காவுக்கும் இடையே பதற்றம் இருந்து வருகிறது. இந்நிலையில், நிலவில் சுரங்கம் தோண்டுவது போன்ற திட்டம் தனது ஆதிக்கத்தையும், தலைமைத்துவத்தையும் நிலைநாட்டிக் கொள்ள டிரம்ப்புக்கு கிடைத்த வாய்ப்பு என்கிறார் இவர்.
சட்டம் என்ன சொல்கிறது?
விண்வெளியில் அமெரிக்க முயற்சிகளை சர்வதேச சட்டங்கள் கட்டுப்படுத்தாது என்று டிரம்ப் பிறப்பித்த ஆணை திட்டவட்டமாக கூறுகிறது. ஆனால், புவிக்கு வெளியே மனிதர்கள் என்னவெல்லாம் செய்யலாம் என்பதைப் பற்றிய சட்டங்கள் அவ்வளவு திட்டவட்டமாக வரையறுக்கப்படவில்லை.
விண்வெளி சட்டங்கள் என்பது வளர்ந்து வருகிறது. காலப்போக்கில் இதில் மாற்றங்கள் வரும் என்கிறார் சாரா.
எந்த ஒரு நாடும் நிலவுக்கு சொந்தம் கொண்டாட முடியாது. ஆனால் இது கடல்வழிச் சட்டம் போன்றது. நீங்கள் முதலில் சென்று, கண்டுபிடித்து, சுரங்கம் தோண்டினால், அதற்கு நீங்கள் உரிமையாளர் அவ்வளவே.
புவியில் பருவநிலை மாற்றம் நிகழ்ந்துகொண்டிருப்பதால் தொலைதூர விண்வெளியில் நம் பார்வையைப் பதிப்பது தவிர்க்கமுடியாதது என்கிறார் பெஞ்சமின். “இப்படியே போனால் புவியைக் குட்டிச்சுவராக்கிவிடுவோம் என்பதால், நமக்குப் போவதற்கு உள்ள ஒரே இடம் விண்வெளிதான் என்று சிலர் வாதிடுகின்றனர். விண்வெளியில் வளங்களைத் தேடுவது மட்டுமே மனித குலத்துக்கு உள்ள ஒரே மாற்றுவழி என்பது இந்தப் பார்வை உள்ளவர்களின் கூற்று” என்கிறார் அவர்.
நம் வாழ்நாளிலேயே இது நடக்குமா?
“இதற்கான தொழில்நுட்பம் உள்ளது. அது வேகமாகவும் வளர்ந்துவருகிறது. ஏனெனில், தனியார் நிறுவனங்களும் இதில் ஈடுபட்டுள்ளன என்கிறார் சாரா. முன்பெல்லாம் அரசாங்கம் மட்டுமே இது போன்ற திட்டங்களுக்கு நிதியளித்து செயல்படுத்தும். ஆனால், தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள் தற்போது ஈடுபாடு காட்டுவதால், நிறைய நிதியும், உத்வேகமும் கிடைத்துள்ளது என்று கூறுகிறார் அவர்.
நிலவில், விண் கற்களில், கடலில் சுரங்கம் தோண்டுவது, மனிதர்கள் செவ்வாய்க்குப் போவது போன்ற விவகாரங்களில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படுவதை நாம் பார்க்கப்போகிறோம். நம் வாழ்நாளிலேயே இவையெல்லாம் சாத்தியமாகும்” என்பது சாராவின் கூற்று. ஆனால், ஏற்கெனவே புவியில் உள்ள சுரங்கத் திட்டங்களில் தொழில்நுட்ப மேம்பாட்டைப் பயன்படுத்துவதும் முக்கியம் என்கிறார் பெஞ்சமின்.
நிலவில் சுரங்கம் தோண்டுவது என்பது கடினமானது, அது கடைசி வாய்ப்பாகத்தான் இருக்கும் என்கிறார் அவர். “எனவே, வாயு, நீரடி சுரங்கம் போன்ற ஏற்கெனவே இருக்கும் சுரங்கங்களை முதலில் மேம்படுத்துங்கள். பிறகு அடுத்தக் கட்டத்துக்குப் போகலாம்” என்பது அவரது வாதம்.
நிலவில் சுரங்கம் தோண்டுவது போன்றவை நடக்க குறைந்தது 10-15 ஆண்டுகள் ஆகும் என்று கூறும் அவர் அதன்பிறகும்கூட இத்திட்டத்தின் எதிர்காலம், பணம், வளங்கள் போன்ற பல காரணிகளைப் பொறுத்தே அமையும் என்கிறார் பெஞ்சமின்.
ஆனால், இதனிலும் பெரிய விஷயத்தின் அங்கமே இதெல்லாம் என்கிறார் சாரா. “நீங்கள் நிலவைப் பார்க்கிறீர்கள். நாங்கள் வானத்தைப் பார்க்கிறோம். மனித குலத்தை புவியைத் தாண்டியும் கொண்டு செல்வதற்கான திட்டத்தின் ஒரு பகுதியே இது” என்பது சாராவின் கூற்று.
சிறீலங்கா அரசின் பொறுப்பற்ற நடவடிக்கை வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. அரசின் உதவித் திட்டங்கள் கூட மக்களை முழுமையாக சென்றடையவில்லை என வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழத் தேசிய முன்னனியின் நாடாளுமன்ற வேட்பாளருமான அனந்தி சசிதரன் எமக்கு வழங்கிய பிரத்தியோக நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
அதன் முழு விபரம் வருமாறு:
கேள்வி-நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கு மாவட்டங்களிலுள்ள தமிழ் மக்கள் எவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்?
வடக்கு கிழக்குடன் மலையகத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். இங்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தி மீண்டும் போடப்படுகின்றது. இந்நிலையில் அன்றாட கூலித் தொழிலாளிகள், வறுமைக்கோட்டிற்குக் கீழே இருக்கின்ற மக்களிடம் காசும் இல்லை. அவர்களின் கைகளில் பொருட்களும் இல்லை.
எங்கோ கோரோனா தொடங்கும் போது,இங்கு இவ்வாறான அச்சுறுத்தல்கள் வரும் என அரசிற்கு தெரிந்திருந்தால் மக்களுக்கான நிவாரணப் பொருட்களை ஒழுங்குபடுத்திய பின்னர் இந்த ஊரடங்குச் சட்டத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் மிகக் குறுகிய காலத்தில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்ப் படுத்தியிருக்கின்றனர்.
யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் இருபத்தியொரு நாட்களாக இந்த ஊரடங்குச் சட்டம் தொடர்ச்சியாக இருக்கின்றது.
கொரோனா அல்லாது ஏனைய நோயால் பாதிக்கப்பட்டு கிளினிக் செல்ல முடியாது மருந்துகளை பாவித்துக் கொண்டிருக்கும் நிலை மக்களிடம் இருக்கின்றது. கொரோனா நோய்க்கு வெளிநாட்டினரது வருகையும் ஒரு காரணமாக இருக்கலாம். யாழ்ப்பாணத்தில் கொரோனா நோய்த் தொற்றால் ஒருவரும் இனங்காணப்படவில்லை. வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு பிரஜையால் பரப்பப்பட்டது எனப் பார்க்கின்றோம்.
அரசாங்கத்தில் வறுமையானவர்களுக்கு வழங்கப்படும் சமுர்த்தி உதவிகூட சீராக மக்களுக்கு சென்றடையவில்லை என்பது ஒரு வருத்தம். வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள், அன்றாடம் உழைத்து வாழும் மக்கள், மாற்றுத் திறனாளிகள், காணாமல் போனோர் குடும்பம், அரசியல் கைதிகள் குடும்பம் உட்பட மொத்தக் குடும்பமும் போரிலிருந்து மீளாத வறுமையிலேயே உள்ளனர்.
ஏனெனில் நிலையான வாழ்வாதார உதவித் திட்டங்களை அரசாங்கம் அங்கு மேற்கொள்ளவில்லை. அன்றாடப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசு திட்டங்களை முன்னெடுத்ததே அன்றி கடந்த பத்து வருடங்களாகியும் நிலையான ஒரு திட்டத்தை அரசு முன்னெடுக்கவில்லை.
சில விவசாயிகள் இருக்கும் நெல்லை வைத்து கஞ்சி குடிக்கக்கூடிய வசதியுடன் இருந்தாலும்,ஏனைய மக்களுக்கு கடினமாகவே உள்ளது. புலம்பெயர் மக்களும் குறுகிய ஒரு கொடுப்பனவுடன் வாழும் நிலையில் இருப்பதால்,அவர்கள்கூட இங்கு இருக்கும் மக்களுக்கு உதவி செய்யும் சூழல் இல்லை. காசு அனுப்புவதற்கான வழிமுறைகளும் அங்கு இல்லை. இன்று கூடுதலான மக்களின் வாழ்வாதாரம் புலம்பெயர் மக்களின் நிதிப்பங்களிப்பிலேயே பெரிதும் தங்கியுள்ளது .
இன்று வடக்கு நிலைமையைப் பார்த்தால், தொண்டு நிறுவனங்கள், தனவந்தர்கள், இளைஞர் அமைப்புகள்,நிறுவனங்கள்,சில அரசியல்வாதிகள் ஆகியோரே உதவி செய்து வருகின்றனர். இது அவர்களுக்கு போதுமானதாக இல்லை. ஒரு நெருக்கடி நிலை வரும் போது அரசாங்கமே அந்த நிலையை மாற்றி அமைக்கலாம்.
எந்தெந்த பிரதேசங்களுக்கு உதவித் திட்டங்கள் செல்லவில்லை என்று நாங்கள் சொல்லலாம். ஆனால் அரசாங்கமே கிராம மட்ட பொறிமுறை ஊடாக இந்த உதவிகளை மேற்கொள்ள வேண்டும். ஜனநாயக நாடு என்று சொல்லும் போது தொடர்ச்சியான ஊரடங்கை மேற்கொள்வதும் விமர்சிக்கப்படக்கூடிய விடயமாகும்.
கேள்வி-தற்போது தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்த பல தமிழ்க் கட்சியினர் இருக்கின்றனர். இப்படி பல கட்சியினர் இருப்பதால், தமிழ் மக்களுக்கு அல்லது தமிழ் வேட்பாளர்களுக்கு எவ்வாறான பாதிப்பு ஏற்படுகின்றது?
பல கட்சிகள் வந்தாலும்,எந்தக் கட்சிகள் எந்த செயற்பாட்டை முன்னெடுக்கப் போகின்றனர் என்று மக்களுக்குத் தெரியும். மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு வந்து விட்டது. எமது மக்களை தொடர்ச்சியாக ஏமாற்ற முடியாது. தமது வாக்குகள் சிதறடிக்கப்படாத ஒரு தெரிவை மக்கள் எடுப்பார்கள்.
கடந்த காலங்களில் என்ன செய்வதென்று அறியாமல் கண்மூடித்தனமாக கூட்டமைப்பை ஆதரித்துச் சென்ற நிலைமை தற்போது இல்லை. தற்போது புதிதாக வாக்காளர்களாக இருக்கும் இளைஞர்கள், யுவதிகள் மத்தியில் மிகவும் தெளிவான சிந்தனை உள்ளது. எனவே வெற்றி பெறுபவர்களுக்கு வாக்குகளை அவர்கள் வழங்குவார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம்.
செல்லுபடியற்ற வாக்குகள் எங்களின் ஓரிரு ஆசனங்களை இல்லாது செய்து விடுமோ என்ற அச்சம் உள்ளது. ஆனால் மக்கள் எந்த வேட்பாளர் மக்களுக்கு ஆதரவாக, விலைபோகாது நிற்பார்கள் என்று தெரிவு செய்து அவர்களை ஆதரிப்பார்கள்.
கேள்வி-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலங்களில் எவ்வாறான தவறுவளை விட்டிருக்கின்றது. அதனை உங்களின் கட்சி எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றது? புதிதாக ஏதாவது தீர்மானங்கள், திட்டங்கள் உங்களிடம் உள்ளதா?
நாங்கள் வடக்கில் இன அழிப்பு பிரேரணையை கொண்டு வரும் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சம்பந்தன் உட்பட தமிழரசுக் கட்சி முழுமையாக தனது எதிர்ப்பை வெளியிட்டது மட்டுமல்ல, இன அழிப்பு நடந்தது அதற்கு சர்வதேச விசாரணை வேண்டும் என நாங்கள் எழுப்பிய தீர்மானம் தான் விக்னேஸ்வரனுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் முரண்பாட்டைத் தோற்றுவித்தது.
அது நம்பிக்கையில்லாப் பிரேரணை வரை கொண்டு வந்தது. மக்களின் தேவைகளை வடக்கில் நாங்கள் செய்ய முடியாது ஆளும் தரப்பிற்குள்ளேயே எதிர்த்தரப்பு ஒன்றை தமிழரசுக் கட்சி உருவாக்கியது. தங்களின் சொந்த பிரதிநிதிகளுக்கே இவ்வாறான ஒரு செயற்திட்டத்தை முன்னெடுத்தது.
இதைவிட ஐ.நா. சபையில் இரண்டு வருடகால நீடிப்பு வழங்க வேண்டும் என்று அரசிற்கு ஆதரவு தெரிவித்ததும் இதே தமிழரசுக் கட்சியும் இந்தக் கூட்டமைப்பும் தான். மக்களின் விருப்பங்கள் ஒன்றாக இருந்த போது தேர்தல் காலத்தில் அவர்களிடம் ஆணையைப் பெற்றது, விஞ்ஞாபனம் ஒன்றாகவும் நடவடிக்கை வேறாகவும் அமைந்தது. குழப்பமான காலகட்டத்தில் இவர்கள் ஐ.தே.க. க்கு ஆதரவு தெரிவித்தனர்.
இது அவர்களின் சுயநல அரசியல் இலாபமாக இருந்தது. ஜனாதிபதி தேர்தலின் போது எந்தவொரு நிபந்தனைகளையும் விதிக்காது, பல்கலைக்கழக மாணவர்களின் 13 அம்சக் கோரிக்கையைக்கூட செல்லுபடியற்றதாக்கி பல்கலைக்கழக மாணவர்களையும் புத்திஜீவிகளையும் உதாசீனப்படுத்தியது.
மேலும் பலவற்றை கூறிக்கொண்டே போகலாம். மேலும் தேர்தல் காலங்களில் விடுதலைப் புலிகளின் பாடல்களை ஒலிக்கவிட்டு, பிரபாகரனின் படத்தை தாங்கி வாக்கு கேட்டுவிட்டு, இப்போது விடுதலைப் புலிகள் தங்களுக்கு குண்டு வைக்க வந்தார்கள் என்று கூறி கைதான அப்பாவி இளைஞர்களையும் நாங்கள் பார்க்கின்றோம்.
இவர்கள் மீண்டும் தேர்தல் வரும் போது இதையே மீண்டும் செய்யும் ஒரு போலி அரசியலை நாங்கள் கண்டிருக்கின்றோம்.இவர்கள் விட்ட குறைகளை நாங்கள் விடக்கூடாது என்ற தெளிவுடன் இருக்கின்றோம். நாங்கள் மக்களுடன் பேசி அவர்களின் கருத்துக்களை கேட்டு அதையே மேற்கொள்ளும் அரசியலை நாங்கள் செய்யவுள்ளோம்.
கேள்விஅண்மையில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரில் நீங்கள் கலந்து கொண்டிருந்தீர்கள். அது தொடர்பாக என்ன கருத்துக்களைக் கூற விரும்புகின்றீரகள்?
ஐ.நா. கூட்டத்தொடருக்கு சென்றிருந்த போது ஐ.நா. சபையில் சில தனிப்பட்ட சந்திப்புகளை நான் ஒழுங்குபடுத்தியிருந்தேன். ஆனால் வழமையாக நாங்கள் பேசும் இடத்தில் மோசமான சக்திகளின் தலையீடு காரணமாக நான் பேச அனுமதிக்கவில்லை. அந்த சக்திகளை நான் மிகவும் ஆபத்தானதாக பார்க்கின்றேன்.
அது தனி நபராக இருக்கலாம் அல்லது அமைப்பாக இருக்கலாம். அதை இனங்காண முடியவில்லை. இதனால் நான் ஐ.நா. சபையில் பேசவில்லை. அரசியல் தளத்தில் மற்றும் மனித உரிமைகள் தளத்திலிருந்து என்னை நீக்க பல சதி வேலைகள் நடைபெறுகின்றது என்பதை நான் பின்னர் அறிந்தேன்.ஆனால் எனது பணி தொடரும். எனது கணவனை என் கையால் கொடுத்து விட்டு தேடும் நான் இந்த எல்லா பணியிலும் தோற்றும் ஒருவராக இருக்கின்றேன். நான் ஒரு உயிர் வாழும் சாட்சியம்.