Home Blog Page 2270

மைத்திரி கூறியும் யாழில் இராணுவ கெடுபிடிகள் குறையவில்லை

வடக்கில் இராணுவ கெடுபிடிகளைக் குறைக்குமாறு, இராணுவத் தளபதிக்கு சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்ட போதிலும், அதில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என மக்கள் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், சோதனைகள் இடம்பெற்றிருந்தது.

எனினும் நாட்டின் பிற இடங்களைவிட வடக்கில் இராணுவத்தினரின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளது. பல இடங்களில் சோதனைச் சாவடிகள் போடப்பட்டிருப்பதுடன், பயணிகளின் அனைத்து வாகனங்களும் சோதனையிடப்படுவதுடன், பதிவு செய்யப்பட்டே அனுமதிக்கப்படுகின்றது.

இதை தமிழ் அரசியல்வாதிகள் கடுமையாக கண்டித்தனர். பாராளுமன்றிலும் சுட்டிக்காட்டியிருந்தனர்.  அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவும் வடக்கில் இராணுவத்தினரின் கெடுபிடிகளைக் குறைக்குமாறு சிறிலங்கா ஜனாதிபதியிடம் கோரியிருந்தார். இதனை ஏற்ற ஜனாதிபதி இராணுவத் தளபதியிடம் உத்தரவிட்டிருந்தார்.

எனினும் வடக்கில் குறிப்பாக பூநகரி, ஆனையிறவு, நாவற்குழி போன்ற இடங்களில் இராணுவத்தினர் பயணத் தடைகளை விதித்து, சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மக்கள் இராணுவத்தின் கெடுபிடியில் சிக்குண்டு பயணிக்கின்றமையை காணமுடிகின்றது.

தமிழீழ மக்களுக்குச் சார்பான வெளியுறவுக் கொள்கை தொடர்பில் இந்தியாவிடம் பேசத் தயார் : பிரதமர் வி.உருத்திரகுமாரன்

இலங்கைத்தீவு தொடர்பான இந்திய வெளிநாட்டுக் கொள்கையில், தமிழீழ மக்களுக்குச் சார்பான மாற்றம் அடுத்து அமையும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சிக்காலத்தில் ஏற்படுமென நம்பிக்கை தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், இவ்விடயத்தையொட்டி எம்முடன் உரையாடும் விருப்பம் கொண்டால் அதற்கான ஒரு சிறப்பு தூதுக்குழுவை அனுப்பி தங்களது அரசாங்கத்துடன் பேசுவதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பிரதமரமாக மீண்டும் பதவியேற்க்கவுள்ள நநேரந்திர மோடிக்கு எழுதியுள்ள வாழ்த்துக் கடிதத்திலேயே இதனை பிரதமர் வி.உருத்திரகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அக்கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பெருவெற்றியடைந்து தனிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் தங்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்வடைகிறோம்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது, இனவழிப்பில் இருந்து தமிழீழ மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, தமது சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமக்கெனத் தனியரசொன்றினை அமைக்கும் முயற்சியினை வலுப்படுத்தும் நோக்குடன் செயற்பட்டு வருவதனைத் தாங்கள் அறிந்திருக்கக் கூடும்.

தமிழீழ மக்கள் இந்திய மக்களுடன் வரலாற்றுபூர்வமாக நட்புறவைக் கொண்டவர்கள். எமது மக்கள் இந்த நட்புறவு தொடர வேண்டும் என்பதில் பெருவிருப்பு கொண்டுள்ளார்கள் என்பதனையும் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இத் தருணத்தில், இலங்கைத்தீவில் இரு அரசுகள் என்ற தீர்வுத்திட்டம் தமிழீழ மக்களுக்கும் இந்திய நாட்டுக்கும் ஒரு சேரப் பயன்தரக்கூடியது என்பதனை தங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறோம். தமிழீழ தேசம் என்றும் இந்தியாவின் நட்புசக்தியாகவும் இந்தியாவின் பாதுகாப்புக்கு உறுதுணையாகவும் இருக்கும் என்பதனையும் வெளிப்படுத்திக் கொள்கிறோம்.

தங்கள் தலைமையிலான அடுத்த 5 ஆண்டு ஆட்சிக்காலத்தில் இலங்கைத்தீவு தொடர்பாக இந்திய வெளிநாட்டுக் கொள்கையில் தமிழீழ மக்களுக்குச் சார்பான மாற்றம் ஏற்படும் என நாம் எதிர்பார்க்கிறோம். தாங்கள் அமைக்கவிருக்கும் ஆட்சியானது இவ்விடயத்தையொட்டி எம்முடன் உரையாடும் விருப்பம் கொண்டால் அதற்கான ஒரு சிறப்பு தூதுக்குழுவை அனுப்பி தங்களது அரசாங்கத்துடன் பேசுவதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம் என்பதை இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகிறேன் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா விமானப்படையின் புதிய தளபதி சுமங்கல டயஸ்

சிறிலங்கா விமானப்படையின் தளபதி எயார் மார்ஸல் கபில ஜயம்பதி நாளை மறுதினம் ஓய்வுபெறவிருப்பதால், புதிய தளபதியாக விமானப்படை அதிகாரி எயார் வைஸ் மார்ஸல் சுமங்கல டயஸ் நியமிக்கப்படவுள்ளார்.

நியமனத்திற்கான உத்தியோகéர்வ அறிவித்தல் இன்று அல்லது நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, ஓய்வுபெறவுள்ள எயார் மார்ஸல் கபில ஜயம்பதி 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் விமானப்படைத் தளபதியாக செயலாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, வடமாகாண புதிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக, ரவி விஜயகுணவர்த்தன, யாழ். காங்கேசன்துறையிலுள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

TRO வின் ஆவணங்கள் வவுனியாவில் சிக்கின

இன்று (27.05) காலை, வவுனியா மரக்காரம்பளை பகுதியிலுள்ள, பாவனையற்ற வீடொன்றிலிருந்து தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு (TRO) சொந்தமான ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

படையினர், புலனாய்வு அமைப்பினர் நீதிமன்ற அனுமதியுடன் குறித்த வீட்டை சோதனையிட்ட போது, மேற்படி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

அங்கு விடுதலைப் புலிகள் ஆட்சியிலிருந்த போது செயற்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினருக்குச் சொந்தமான அங்கிகள், ஆவணங்கள், மோட்டார் சைக்கிள் இலக்கத்தகடு என்பனவே மீட்கப்பட்ட பொருட்களாகும்.

ஆட்சி மாற்றம் ஏற்படும் நேரம் வந்துவிட்டது – நாமல் ராஜபக்ஷ

அரசாங்கத்திற்கு எதிராகக் கொண்டுவரப்படும் அனைத்து பிரேரணைகளுக்கும் ஆதரவு வழங்கத் தயாராக உள்ளதாகவும், ஆட்சி மாற்றத்திற்கான  நேரம் இப்போது வந்து விட்டது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு பிரேரணைகளும் வெற்றியடையுமா, தோல்வியடையுமா என்பது பற்றி சொல்ல முடியாது.

தவறென்று தெரிந்தும், பல அரசியல் காரணங்களை சுட்டிக்காட்டி, நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பவர்களுக்கும் எதிராக மக்கள் செயற்படுவார்கள் என மேலும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, தென்னிலங்கை அரசியலில் மிகப் பெரும் மாற்றம் ஒன்று நிகழ்வதற்குரிய சாத்தியங்கள் தென்படுவதாகவும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா தலைமையிலான குழுவினர் ஆட்சியை கைப்பற்றும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அதனைத் தடுப்பதற்கு மேற்குலகம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. கோத்தபாயா மீது அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் பின்னியும் அதுவே என தெரிவிக்கப்படுகின்றது.

அதேசமயம், அண்மையில் இடம்பெற்ற வன்முறைகளைத் தொடர்ந்து கடும்போக்கு பௌத்த சிங்களவர்களுக்கு ஆதரவுகளை வழங்கவேண்டிய நிலைக்கு முஸ்லீம் சமூகம் தள்ளப்பட்டுள்ளதும், கோத்தபாயாவுக்கு சதகமானது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆக்கிரமிப்புத் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது சிறிலங்கா காவல் துறை தாக்குதல்

ஆக்கிரமிக்கப்பட்டு பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய சர்ச்சை தொடர்பில் செய்தி அறிக்கையிட சென்றிருந்த ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ளார்.முல்லைதீவினை சேர்ந்த குமணன் எனும் ஊடகவியலாளரே முல்லைதீவு காவல்நிலைய பொறுப்பதிகாரியால் தாக்கப்பட்டுள்ளார்.
அங்கு விகாரதிபதியால் அத்துமீறி பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராக்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.அங்கு ஆக்கிரமித்து விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்குவால் பிள்ளையார் ஆலயத்துக்ள் மட்டும் பொருத்தப்பட்டுள்ள இரகசிய கண்காணிப்பு கமராக்களை உடனடியாக அகற்றுமாறு முல்லைத்தீவு காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் இன்று உத்தரவிட்டிருந்தார்.
குறித்த விகாரதிபதிக்கு ஆதரவாக காவல்துறை செயற்படுவதான குற்றச்சாட்டின் மத்தியில் இன்று கணதேவி தேவாலயம் என்ற பெயரை ஏற்கனவே இருந்ததை போன்று நீராவியடி பிள்ளையார் ஆலயம் என மாற்றம் செய்யவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இலங்கை காவல்துறையினர் இன்று கண்காணிப்பு கமராவை அகற்றவும் பெயர் பலகையினை பொருத்தவும் முற்பட்டமை தொடர்பாக அறிக்கையிட சென்றிருந்த போதே வீரகேசரி பத்திரிகை செய்தியாளரான குமணன் தாக்கப்பட்டதுடன் அச்சுறுத்தப்பட்டுமுள்ளார்.
அதன் பின்னராக அங்கு வந்திருந்த கொக்கிளாய் காவல்நிலைய பொறுப்பதிகாரி தூசணத்தினால் திட்டி தாக்கியதாக தெரியவருகின்றது.
குமணனால் வீரகேசரி பத்திரிகையில் அறிக்கையிடப்பட்ட செய்தியின் அடிப்படையிலேயே இன்று ஆலய அறங்காவலர் சபையினால் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதுடன் நீதிமன்ற உத்தரவும் பெறப்பட்டிருந்தது.
வடமாகாண ரீதியில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழான அறிக்கையிடலில் குமணன் முதலாமிட பரிசை தட்டிச்சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடபகுதியில் சோதனைகளை அதிகரிக்கும் சிறீலங்கா படையினர் – இன்று கிளிநொச்சியில்

கிளிநொச்சி  மகாவித்தியாலயம் உள்ளிட்ட பிரபல பாடசாலைகளின் இன்று (27) விசேட சோதனைகள் இடம்பெற்றன.

பொலிசாரும் படையினரும் இணைந்து குறித்த சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர். இன்று காலை கிளிநாச்சி மகாவித்தியாலயத்தில் இவ்வாறு சோதனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், பலத்த பாதுகாப்பு கடமைகளிலும் பொலிசார் மற்றம் படையினர் ஈடுபட்டனர்.

பாடசாலை சூழல் பொலிஸ் மோப்ப நாய்கள் கொண்டு தேடுதலும் மேற்கொள்ளப்பட்டது, இதேவேளை வழமைபோன்று பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை சமூகம் அனைவரது பொதிகளும் சோதனையிடப்பட்டன.

21ம்திகதி தாக்குதலின் பின்னர் பாடசாலைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வந்தது. எனினும் கெடுபிடிகள் படிப்படியாக குறைவடைந்து வந்த நிலையில் இன்று திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடதக்கது.

இனிடையே தென்னிலங்கையில் பொருமளவான தாக்குதல்கள் மற்றும் வன்முறைகள் அண்மையில் இடம்பெற்றபோதும் சிறீலங்கா படைத்தரப்பு வடபகுதியில் சோதனைகளையும், படையினரின் பிரசன்னத்தையும் அதிகரித்து வருவது தமிழ் மக்கள் மீது ஒரு இராணுவ அழுத்தத்தை தொடர்ந்து தக்கவைக்கும் முயற்சியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

Kili 27 5 2019 வடபகுதியில் சோதனைகளை அதிகரிக்கும் சிறீலங்கா படையினர் - இன்று கிளிநொச்சியில்

சிவசேனை அமைப்பின் ஏற்பாட்டில் சங்கிலிய மன்னனின் 400ஆம் ஆண்டு நினைவு

யாழ். முத்திரச்சந்தியிலுள்ள சங்கிலிய மன்னனின் சிலைக்கு முன்பாக இன்று இடம்பெற்ற சங்கிலி மன்னனின் 400ஆவது ஆண்டு நினைவு தினத்தை, சிவசேனை அமைப்பு ஒழுங்குபடுத்தியிருந்தது.

இதில் தமிழ்த தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், இந்தியாவின் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், பா.ஜ.க. பிரமுகர், யாழ். இந்தியத் துணைத்தூதல், யாழ். மாநகரசபை முதல்வர், ஆணையாளர் உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட கடைசி தமிழ் மன்னனான சங்கிலியனின் ஆட்சி நிறைவின் பின்னர் ஈழத் தமிழர் காலனியாதிக்கவாதிகளிடம் தமது இறைமையை இழந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் பிறக்சிற் குழு வெற்றி – ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் வழங்கிய தண்டனை

கடந்த வாரம் பிரித்தானியாவில் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தேர்தலில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்ற கொள்கையுடன் புதிதாக நைஞல் பெராச் தலைமையில் உருவாக்கப்பட்ட பிரக்கிச் குழு பெரும் வெற்றியீட்டியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான கடும்போக்கு கொண்ட பெராச் இன் கட்சியின் இந்த வெற்றி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று (26) இரவு வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளின் படி பிரக்சிற் கட்சி 28 ஆசனங்களையும், லிபரல் டெமோக்கிரட்டிவ் கட்சி 15 ஆசனங்களையும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 10 ஆசனங்களையும், பசுமைக் கட்சி 7 ஆசனங்களையும், ஆளும் கொன்சவேட்டிவ் கட்சி 3 ஆசனங்களையும் பெற்றுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது குறி;த்த விவாதங்களில் ஏற்பட்ட பின்னடைவுகளைத் தொடர்ந்து கடந்த வாரம் பிரித்தானியாப் பிரதமர் தனது பதவியில் இருந்து விலகிய நிலையில் தற்போதைய தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சிக்கு பலத்த பின்னடைவைக் கொடுத்துள்ளது.

பிரித்தானியாவின் வரலாற்றில் கொன்சவேட்டிவ் கட்சி சந்தித்த மிகப்பெரும் தோல்வி இது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தனது கட்சியின் வெற்றியைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது குறித்து பேச்சுக்களில் ஈடுபடும் குழுவில் தனது கட்சிக்கும் இடம் வேண்டும் என பெராச் தெரிவித்துள்ளார்.

10 தொகுதிகளில் 9 தொகுதிகளின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் பெராச் இன் கட்சி 32 விகித வாக்குக்களைப் பெற்றுள்ளது.

இது ஒரு பெரிய வெற்றி, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் நாள் வெளியேறுவதற்கான கால எல்லையை நாம் கொண்டுள்ளோம். அந்த நாள் தான் நாம் வெளியேறும் நாளாக இருக்கும் என தேர்தல் முடிவுகளின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெராச் தெரிவித்துள்ளார்.

எமக்கு மக்கள் ஆணையை வழங்கியுள்ளனர், நாமும் பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெறவேண்டும், எதிர்வரும் ஐந்து மாதங்களில் நாம் ஒரு தீர்மானத்தை எட்டுவோம். அதன் மூலம் எந்த நிலை வந்தாலும் நாம் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, திரேசா மேயின் பிரக்சிற் பேச்சுவார்த்தைக் குழுவில் உள்ள பிரதம உறுப்பினரான ஒலி றொபின்ஸ் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியா சேர்ந்து இருப்பதற்குரிய பணிகளை இரகசியமாக செய்வதாக பிரக்சிற் குழுவின் ஒரு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நேபாளத்தில் தொடர் குண்டுவெடிப்பு நால்வர் பலி எழுவர் காயம்.

நேபாள தலைநகர் காத்மண்டுவில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் பலியாகினர். நேபாள தலைநகரான காத்மண்டுவில், அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டுவெடித்துள்ளது. சுகேதரா, கட்டிகுலோ மற்றும் நாக்துங்கா உள்ளிட்ட இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பை தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

மேலும் காத்மண்டுவின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டதாக 9 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க நேபாள இராணுவம் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு மாவோயிஸ்டுகள் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக உள்ளூர் போலீசார் தெரிவித்தனர். எனினும் எந்த இயக்கமும் தற்போது வரை பொறுப்பேற்கவில்லை.