தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் 15 க்கு மேற்பட்ட நாடுகளில் இயங்கும் பெரும்பகுதித் தமிழ்ப் பள்ளிகளின் ஒருங்கிணைப்பு நடுவமாகிய தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை இவ்வாண்டுக்கான தமிழ்மொழிப் பொதுத்தேர்வை பன்னாட்டளவில் சென்ற 01.06.2019 சனிக்கிழமை 11:00 மணிக்குச் சிறப்பாக நடாத்தியுள்ளது.
அந்த வகையில் யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பின்கீழ் இயங்கும் 120 க்கு மேற்பட்ட தமிழாலங்களில் பயிலும் பல்லாயிரம் மாணவர்களில் தேர்வுநிலைக்குத் தகைமையுள்ள ஆண்டு 1 தொடக்கம் ஆண்டு 12 வரையிலான 4800 மாணவர்களும் அத் தேர்வில் இணைந்துள்ளனர்.
தமிழ்க் கல்விக் கழகத்தின் தேர்வுப் பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட 65 விசேடமான தேர்வு நிலையங்களில் முதற்கட்டமான 70 புள்ளிகளுக்கான அறிமுறைத் தேர்வை மாணவர்கள் ஆர்வத்துடன் எழுதியுள்ளனர். அத் தேர்வை மேற்பார்வை செய்வதற்குத் தமிழாலங்களில் கற்பிக்கும் ஆற்றல் மிக்க 650 ஆசிரியர்கள் தேர்வு மேற்பார்வையாளர்களாகப் பணியாற்றினார்கள்.
65 தேர்வு நிலையங்களில் 30 தேர்வு நிலையங்களுக்கான பிரதம மேற்பார்வையாளர்களாக இளைய ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். அவர்கள் யேர்மனியில் பிறந்து தமிழாலயங்களில் தமிழ்மொழியைப் பயின்று பல ஆண்டுகளாகத் தமிழாலயங்களில் ஆசிரியர்களாகப் பணியாற்றிவருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அடுத்த நிலையான 30 புள்ளிகளுக்கான செய்முறைத் தேர்வு (புலன்மொழி வளம்) எதிர்வரும் சனிக்கிழமைகளிலும் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆகிய நான்கு நாள்களும் தமிழாலயங்களில் நடைபெறவுள்ளது.
தேர்வெழுதிய 4800 மாணவர்களின் விடைத்தாள்கள் மறுநாளே பிரான்ஸ் – பாரீஸ் நகரில் அமைந்துள்ள தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் நடுவச் செயலகத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவர்களின் மேற்பார்வையில் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு மாணவர்களுக்கான பெறுபேறுகள் ஓகஸ்ட் மாத இறுதியில் தமிழாலயங்கள் ஊடாக வழங்கப்படவுள்ளன.
யேர்மனியத் தமிழாலயங்களிலிருந்து ஆண்டு 12 இல் தேர்வெழுதிய 310 மாணவர்களில் சித்தியடையும் மாணவர்களை 2020 ஏப்பிரல் மாதம் நடைபெறவுள்ள தமிழ்க் கல்விக் கழகத்தின் 30 வது அகவை நிறைவு விழாவில் சிறப்பாக மதிப்பளிக்கப்படவுள்ளனர்.
தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமை பணியகத்தினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் அனைத்துலகத் தமிழ் மொழிப் பொதுத்தேர்வு பிரான்சில் நேற்று 0106.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்று முடிந்துள்ளது.
பாரிசையும் பாரிசைச் சுற்றியுள்ள (Ile de france) ) மாணவர்களுக்கான தேர்வு வழமைபோன்று Maison des examens 7 Rue Ernest Renan 94110 Arcueil என்ற முகவரியில் அமைந்துள்ள பிரமாண்டமான மண்டபத்தில் இடம்பெற்றது.
மதியம் 13.00 மணியளவில், அகவணக்கத்தைத் தொடர்ந்து தமிழர் கல்விமேம்பாட்டுப்பேரவை மேலாளர் திருமதி அரியரட்ணம் நகுலேஸ்வரி, தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகப் பொறுப்பாளர் திரு.ஜெயக்குமார், தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத் தேர்வுப்பொறுப்பாளர் திரு.அகிலன், பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பொறுப்பாளர் திரு. மகேஸ் மற்றும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியக உறுப்பினர்கள், தமிழ்ச்சோலை ஆசிரியர்கள், மாணவர்களின் முன்னிலையில் ஒப்பமிடப்பட்டு தேர்வுத்தாள் பொதி திறக்கப்பட்டது. தேர்வு தொடர்பான அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து தேர்வு ஆரம்பமானது.
பிரான்சில் இம்முறை மொத்தம் 6085 மாணவர்கள் தமிழ் மொழிப் பொதுத்தேர்வு எழுதியுள்ளனர். சுமார் 350 இற்கு மேற்பட்ட ஆசிரியர்கள், 500 இற்கு மேற்பட்ட செயற்பாட்டாளர்கள் தேர்வுக்கடமையைத் திறம்பட நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தேர்வுக் கடமையில் ஈடுபட்டவர்களுக்கு சிற்றுண்டி, தேநீர், தண்ணீர், மதிய உணவு என்பனவும் வழங்கப்பட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.
பிரான்சின் ஏனைய பிற மாவட்டங்களிலும் தமிழ்ச்சோலைத் தலைமை பணியகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட தேர்வு நிலையங்களில் தமிழ் மொழிப் பொதுத்தேர்வு நடைபெற்றது. ஸ்ராஸ்பேர்க், நீஸ், துலுஸ், தூர், மூல்கவுஸ், றென், போ, நெவர் ஆகிய பிற மாவட்டங்களிலே தமிழ் மொழிப் பொதுத்தேர்வு இடம்பெற்றுள்ளது.
இம்முறை பிரான்சில் கடும் வெப்பமான காலநிலை நிலவிய போதும், மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் தேர்வில் கலந்துகொண்டதைக் காணமுடிந்தது. பெற்றோர்கள் கடும் வெய்யிலுக்கு மத்தியில் காத்திருந்த காட்சி வெள்ளை இனத்தவர்களையும் ஆச்சரியப்படவைத்தது. வெளிநாட்டவர்கள் பலரும் குறித்த தேர்வுதொடர்பான விடயங்களைக் கேட்டுத் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்ததையும் காணமுடிந்தது.
இலங்கையில் இனிவரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் தமிழர்கள் எதிர்காலம் தொடர்பாக நிதானமாக சிந்தித்து பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. போரின் பின்னர் நடைபெற்ற ஒடுக்குமுறையான ஆட்சியை வீழ்த்தி மைத்திரி – ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசினை கொண்டு வந்தோம். இந்த அரசில் அங்கம் வகிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொடுத்த வாக்குறுதிகளை மறந்து தமிழர்களுக்கு துரோகம் செய்து வருகின்றார். எங்களை அவர் ஏமாற்றி விட்டார் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவைசேனாதிராஜா தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாநகரசபை மைதானத்தில் நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற சமுர்த்தி நிவாரண உரித்து பத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்:
நாட்டில் போர் முடிவடைந்து பல வருடங்கள் கடந்துள்ள போதும் தமிழ் மக்களின் வாழ்வாதாரம் முழுமையாக கட்டிஎழுப்பப்படவில்லை.தமிழர்கள் விடயத்திலும் இனப்பிரச்சினை விடயத்திலும் ஆரம்ப காலத்தில் இருந்து இன்றுவரை அரசு எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.தமிழின வரலாற்றில் 60 ஆண்டுகளாக இனப்பிரச்சினை விடயத்தில் ஏமாந்து வருகின்றோம்.தென்னிலங்கை அரசினால் தொடர்ச்சியாக வஞ்சிக்கப்பட்டு வருகின்றோம்.
போரின் பின்னர் நடைபெற்ற ஒடுக்குமுறையான ஆட்சியை வீழ்த்தி மைத்திரி – ரணில் தலைமையலான நல்லாட்சி அரசினை கொண்டு வந்தோம்.இந்த அரசில் அங்கம் வகிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொடுத்த வாக்குறுதிகளை மறந்து தமிழர்களுக்கு துரோகம் செய்து வருகின்றார். எங்களை அவர் ஏமாற்றி விட்டார்.
நல்லாட்சி அரசில் நீண்டகால பிரச்சினையான இனப் பிரச்சனைக்கு தீர்வாக கொண்டுவரப்பட்ட புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் இடைக்கால அறிக்கை வெளியாகியிருக்கிறது.பின்னர் பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக கூடவிருந்தது அத்துடன் வடக்கு, கிழக்கு மாகாணத்துக்கு வரவு செலவுத் திட்டத்தில் அதிக நிதி ஒத்துக்கீடு செய்யப்பட இருந்தது.அனால் அதற்கிடையில் எந்தக் கட்சிகளுடனும் கலந்துரையாடலில் ஈடுபடாது திருட்டுத்தனமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை பிரதமாராக கொண்டு வந்தார்.இதனால் வரவு செலவுத்திட்டம் உட்பட அனைத்து விடயங்களும் இழுத்தடிக்கப்பட்டன.
தற்போது ஜனாதிபதி இந்தியாவிற்கு சென்றிருந்த சமயம் டெல்லியில் ஊடகவியாளர்கள் மத்தியில் ஆற்றிய உரை எமக்கு வருத்தம் அளிக்கின்றது.தமிழின வரலாற்றில் நாம் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை வஞ்சிக்கப்பட்டு வருகின்றோம்.அண்மையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் கூட அதிகமாக தமிழர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.போரிலும் தமிழர்களே அதிகமாக கொன்று அழிக்கப்பட்டனர்.
நாட்டில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களை அடுத்து சர்வதேச உளவுத்துறை மற்றும் சர்வதேச கண்காணிப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலும் கூட அரசு தமிழர்களின் அடிப்படை பிரச்சனையான இனப்பிரச்சினை தீர்வில் அக்கறை அரசு செலுத்தவில்லை.இது எமக்கு மிகவும் ஏமாற்றம் அளிக்கின்றது.எனவே எதிர்வரும் காலங்களில் எந்த தேர்தல்களிலும் நாம் தமிழர்கள் விடயத்தில் நிதானமாக சிந்தித்து செயற்பட வேண்டிய கட்டாய காலத்தில் உள்ளோம் என்றார்.
சிறிலங்காவில் இயல்பு நிலைமை இன்னும் திரும்பவில்லை என கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் சிறிலங்கா வரும் தனது நாட்டு பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ”முன்னெச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும்” என்று சீனர்களை அது கேட்டுள்ளது.
ஏப்ரல் 21 தாக்குதலைத் தொடர்ந்து, தீவிரவாத சக்திகளுக்கு எதிராக கடுமையான, தீவிரமான நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மலையக மக்கள் முன்னணிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பங்களையடுத்து, கூட்டத்தை புறக்கணித்து, வெளியேறினார் அனுஷா சந்திரசேகரன். மலையக மக்கள் முன்னணியில் அதிருப்தியில் இருக்கும் அதன் செயலாளர் அனுஷா சந்திரசேகரன் நேற்று நடைபெற்ற கட்சிப் பொதுக்குழுக் கூட்டத்தப் புறக்கணித்து வெளியேறியதாகக் கூறப்படுகின்றது.
இவர் மலையக மக்கள் முன்னணியில் பிரதியமைச்சராக கடமையாற்றிய பி.சந்திரசேகரன் அவர்களின் மகள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கண்டியில் உண்ணா நோன்பிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்னதேரருக்கு ஆதரவாக பெருமளவு சிங்கள மக்கள் கண்டியில் அணிதிரண்டுள்ளதாக அறிய முடிகின்றது.
ஆண்கள், பெண்கள் என பலரும் அவரைச் சந்தித்து, அவரின் போராட்டத்திற்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா, மேற்கு ஆளுநர் அசாத் சாலி ஆகியோரை ஜனாதிபதி தலையிட்டு பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி ரத்ன தேரர் உண்ணாவிரதத்தில் குதித்துள்ள நிலையில் அவருக்கு சிங்களத் தரப்பினர் பலர் தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை காலையில் பொதுபலசேனாவின் தலைவர் ஞானசார தேரர், அத்துரலியே ரத்னதேரரை சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்ததோடு, அரசாங்கத்திற்கு 24 மணி நேர காலக்கெடு விதித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ரத்ன தேரரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத விடத்து, நாடு தழுவிய அளவில் எங்கள் ”திருவிழாவை” சந்திக்க நேரும் என ஞானசார தேரர் மிரட்டியுள்ளார்.
நாளை ஒரு பெரும் கலவரத்தை சந்திக்க வேண்டி வரலாம். இந்த பகிரங்க எச்சரிக்கை தொடர்பில் அரசோ, பாதுகாப்பு பிரிவினரோ எந்த தகவல்களையும் இதுவரை வெளியிடவில்லை.
நாடு தழுவியரீதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் கடமை. இன்னும் மூன்று நாட்களில் முஸ்லிம்களின் பெருநாள் வர இருக்கிறது. சில வேளை அவர்களுக்கான பெருநாள் பரிசாகக்கூட ஞானசார தேரர் பகிரங்கமாக சொல்லும் ”திருவிழா” என்பது இருக்கலாம் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சங்கிலிய மன்னனின் 400வது ஆண்டு விழாவின் வாயிலாக ஈழத் தமிழர்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் சதியில் இந்தியாவைச் சேர்ந்த இந்துத்துவ அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. போர் முடிந்து விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு பின்னரான காலக்கட்டத்தில், ஈழத்தமிழர்களின் ஒற்றுமையை சீர்குலைக்க இந்தியாவிலிருந்து விஷ்வ ஹிந்து பரிஷத், சிவசேனா போன்ற அமைப்புகள் ஈழத்தில் களமிறங்க ஆரம்பித்தன.
இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த அர்ஜூன் சம்பத் சிவசேனாவின் வழியாக ஈழத்தில் இந்துத்துவ மதவெறிக் கோட்பாடுகளை பரப்பும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்த பலரும், இந்திய தூதரக அதிகாரிகளும் இணைந்து இந்த சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தினூடாக தமிழர்கள் மத்தியில் களைந்தெறியப்பட்ட சாதி, மத வேறுபாடுகளை மீள் உருவாக்கம் செய்யும் பணிகளில் இந்துத்துவ அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.
70 ஆண்டுகாலமாக நீண்ட நெடிய விடுதலைப் போராட்டத்தினை நடத்தி வரும் தேசிய இனமாகிய (Ethnic Nationalities) தமிழர்களை மதச் சிறுபான்மையினர்களாக (Religious Minorities) சுருக்கி அடையாளப்படுத்தும் வேலையினை இந்த கும்பல் செய்து வருகிறது.
தமிழர்கள் ஒரு தேசிய இனமல்ல என்று சொல்வதும், அதன் மூலமாக அங்கு நடைபெற்றது இனப்படுகொலை அல்ல என்று சொல்வதும் அமெரிக்கா-இந்தியா கூட்டணியின் திட்டமாக இருக்கிறது.
இதன் காரணமாகத் தான் ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானங்கள் தொடர்ச்சியாக தமிழர்களை மதச் சிறுபான்மையினர் என்று குறிப்பிட்டது.
அதனை எதிர்த்து உலகத் தமிழர்கள் பலரும் குரல் எழுப்பி வரும் நிலையில், அமெரிக்கா-இந்தியக் கூட்டணியின் இனப்படுகொலையை மறைக்கும் சதி வேலையினைத் தான் அர்ஜூன் சம்பத் போன்றவர்கள் செய்து வருகிறார்கள். தமிழர்களின் இனப்படுகொலைக்கு நீதி பெறுவதினை தடுப்பது இவர்களின் நோக்கமாக இருக்கிறது. இந்துத்துவ கும்பல்கள், அடிப்படையிலேயே தமிழின விரோத சக்திகளாகவே இருக்கின்றன.
தமிழீழ போராளிகள் இருந்தவரை அம்மண்ணில் நிலைபெற முடியாத மதவெறிக் கருத்துக்களை இப்போது இந்தியாவின் துணையுடன் இந்துத்துவ கும்பல்கள் அம்மண்ணில் விதைக்க நினைக்கின்றன. மாலதி படையணியும், சூசை கடற்படையும், இம்ரான் படையணியும் இணைந்து களமாடிய தேசமது. அங்கே தமிழின விரோத இந்துத்துவ கும்பல்களை அனுமதிப்பது சீரழிவையே கொடுக்கும். தமிழீழ விடுதலைக் கோரிக்கையை அழிப்பதே இவர்களின் நோக்கம்.
ஈழத் தமிழர்களே! எச்சரிக்கை கொள்ளுங்கள். தமிழின விரோத இந்துத்துவ மதவெறி கும்பல்களை தமிழீழ மண்ணிலிருந்து அப்புறப்படுத்துங்கள்.
இலங்கையின் ஜனாதிபதியாக தமிழர் ஒருவர் பதவியேற்றாலும் தமக்கான தீர்வு கிடைக்கப்போவதில்லையென காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் 8 மாவட்டங்களுக்கான தலைவர், செயலாளர் கூட்டம் இன்று (02) வவுனியாவில் இடம்பெற்றது.
இந்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே கிளிநொச்சி மாவட்ட செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையின் ஜனாதிபதியாக யார் வந்தாலும் தமக்கு நீதி கிடைக்கப்போவதில்லை என தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன தமது உறவுகளை கண்டறிந்து தருவாரென தமிழ் தலைமைகள் கூறியதாலும் தமக்கிருந்த நப்பாசையினாலுமே அவருக்கு வாக்களித்ததாக தெரிவித்தார்.
எனினும் ஆட்சிக்கு வந்தததன் பின்னர் அவரும் தம்மை ஏமாற்றிவிட்டதாக தெரிவித்தார்.
அதேபோலவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இந்த விடயத்தை மறப்போம் மன்னிப்போமென தெரிவித்து விட்டதாகவும் இதனால் இனிமேல் சிங்கள தலைவர்கள் மாத்திரமல்ல தமிழர்கள் ஜனாதிபதியாக வந்தாலும் அவர்களை நம்ப தாம் தயாராக இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.
தமிழீழ தேச விடுதலைப் போராட்டம் என்பது சிங்கள பேரினவாதத்திடமிருந்து எமது தேசத்தின் இறைமையை மீட்டெடுத்தல் என்ற ஒரு குறுகிய கோட்பாட்டை இலக்காகக் கொண்டு மட்டுமே முன்னெடுக்கப்படவில்லை. அது சமுதாயத்தில் காணப்படும் அனைத்து ஒடுக்குமுறைகளையும் தகர்த்தெறிந்து ஒரு உன்னத தேசத்தை கட்டியெழுப்பும் ஒரு உயரிய நோக்கையும் கொண்டே பயணித்தது. இந்த உன்னத குறிக்கோளுக்காகவே ஆயிரம் ஆயிரம் உயிர்கள் அர்ப்பணிக்கப்பட்டன.
இத்தகைய ஒரு தேசத்தைக் கட்டியெழுப்பும் முன்னோடிச் செயற்பாடாக அன்று தமிழீழ நடைமுறை அரசொன்று கட்டியமைக்கப்பட்டு செயற்பட்டு வந்தது. அங்கு தேச விடுதலையை முன்னெடுத்துச் செல்லும் அதேவேளை சமுதாய ஒடுக்குமுறைகளை இல்லாதொழிப்பதற்கான உறுதியான செயற்பாடுகளும் சமாந்தரமாக மேற்கொள்ளப்பட்டுவந்தன. இதனை வேறெந்த தேசவிடுதலைப் போராட்டத்திலும் காணமுடியாத ஒரு சிறப்பியல்பென்றே கூறவேண்டும்.
சாதிய ஒடுக்குமுறை தமிழர் தாயகத்தில் பரவலாக காணப்பட்ட ஒரு கொடிய ஒடுக்குமுறை வடிவமாகும். குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்தில் அது மிகவும் இறுக்கமானதொன்றாக காணப்பட்டது. ‘மேல்சாதியினர்’ என்றுதம்மைத் தாமே அழைத்துக் கொள்பவர்களால் அங்கு மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகளும் இழைக்கப்பட்ட கொடுமைகளும் எண்ணிப்பார்க்க முடியாதவை. தற்போதைய இளையதலைமுறை அறியாதவை. இத்தகைய செயற்பாடுகள் பலருக்கு நம்ப முடியாதவையாய் கூட இருக்கலாம்.
பொதுக் கிணறுகளில் தண்ணீர் பாவணையத் தடுத்தல், தேநீர் கடைகளில் தனியான குவளைகளைப் பயன்படுத்தல், அவர்களின் கல்விகற்கும் உரிமையைத் தடுத்தல், ஆடை அணிவதில் கட்டுப்பாடுகளை விதித்தல், ஆலயங்களுக்குச் செல்வத்தைத் தடுத்தல் போன்றவை அங்கு சாதாரணமாக காணப்பட்டன.
ஒடுக்கப்பட்ட மக்கள் தமது உரிமைக்கான குரல்களை எழுப்பமுயன்ற போதெல்லாம் அவை மிக கொடுமையாக ஒடுக்கப்பட்டன. குடிசைகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. மக்கள் கொல்லப்பட்டனர். குடிநீர் கிணற்றில் நஞ்சு கலந்து கூட மக்கள் கொல்லப்பட்ட கேவலமான கொடூரங்களும் நடந்தேறின. சிறிலங்கா காவல்துறையின் உதவியுடன் துப்பாக்கிச் சூடு நடத்தியும் மக்களும் செயற்பாட்டாளர்களும் கொல்லப்பட்டனர். முற்போக்கு சக்திகளால் இந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அவ்வப்போது போராட்டங்கள் நடத்தப்பட்டபோதும் அவை பெரியளவில் பயன்விளைவுகளைத் தரவில்லை.
1980களில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் பிரதேசங்கள் வரஆரம்பித்த போது இத்தகைய கொடுமைகளுக்கு எதிரான செயற்பாடுகள் ஆரம்பிக்கப் பட்டன. தமிழீழ விடுதலைப்புலிககள் தமது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங் களில் இத்தகைய சாதிய ஒடுக்குமுறைகளை தடைசெய்தனர். தமிழீழ நடைமுறை அரசு தாக்கமாகச் செயற்பட ஆரம்பித்த நாட்களில் சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிரான சட்டம் தமிழீழ சட்டக்கோவையில் ஒரு அங்கமாகியது. (The Tamil Eelam Penal Code and the Tamil Eelam civil code 1994 ) இதன் மூலம் சாதி ஒடுக்குமுறை சட்டரீதியாக குற்றமாக்கப்பட்டது.
தமிழீழ நடைமுறை அரசில் சாதியத்தால் சமூகத்தில் எந்த வித செல்வாக்கையும் செலுத்தமுடியவில்லை. இங்கு சாதியம் முற்றாக ஒழிக்கப்பட்டது என்று கூறிவிட முடியாவிடினும் சாதியம் அங்கு நாளுக்குநாள் வலுவிழந்து சென்றுகொண்டிருந்தது. சமதத்துவ சமூதாயம் நோக்கி எமது சமூகம் நடைபோட்டுக்கொண்டிருந்தது.
சட்டத்தால் மட்டுமன்றி, சிந்தனை ரீதியிலும் மாற்றங்களுக்கான நிகழ்ச்சி நிரல்கள் முன்னெடுக்கப்பட்டன. இளந்தலைமுறையில் குறிப்பாக போராளிகள் மட்டத்தில் குறிப்பிடத்தக்க விழிப்புணர்வு ஏற்பட்டது. இது பின்னர் அவர்கள் சார்ந்த குடும்பங்கிளிலும் பரவலானது. தேசத்திற்காக உழைப்பவர்கள் அதற்காக தம்முயிரை ஈகம் செய்தவர்கள் உயர்வானவர்களாக மதிக்கப்படும் உன்னத மாற்றம் நிகழத் தொடங்கியது. குறுகிய சிந்தனைகள் புறந்தள்ளப்பட்டு நாம் அனைவரும் தமிழர்கள் என்ற தமிழ் தேசிய உணர்வு வலுப்பெற்றது.
இப்படித்தான் எங்கள் தேசம் அன்று இருந்தது. அப்படி இருந்த எமது தியாக பூமியில் இன்று நச்சுவிதைகள் மீண்டும் வேர்விட முனைந்து நிற்கும் காட்சிகள் எம்மைக் கவலை கொள்ளச் செய்கின்றன. இன்றைய பத்திரிக்கைச் செய்தியில் நூற்றுக்கு மேற்பட்ட ஆலயங்களில் ஆலய பிரவேசத்தடை நிலவுவதாக புள்ளிவிபரங்களுடன் செய்திகள் வெளிவருகின்றன.
கடந்த வருடம் யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணி பகுதியில் அமைந்துள்ள சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் கடந்த வருடம் திருவிழா இடம் பெற்றிருந்தது. அங்கு தேர் திருவிழாவின்போது, தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் எனக் குறிப்பிட்டு பக்தர்களை, வடம் பிடிக்க அனுமதிக்காது ஜே.சி.பி இயந்திரம் கொண்டு தேர் இழுத்த வெட்கக்கேடான சம்பவம் நிகழ்ந்தேறியது. இந்தப் பின்னணியில் இவ்வருட திருவிழா நடத்தப்படாமல் ஆலய நிர்வாகத்தினர் நிறுத்தி வைத்துள்ளதாக குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது. சேடமிழுத்துக் கிடந்த சாதியப்பேய் இன்று எமது தேசத்தில் மீண்டும் எழுந்து தாண்டவமாடத் துடிக்கிறது.
சாதியம் மட்டுமன்றி மதவாதமும் அந்நிய தேசத்தில் இருந்து இங்கு ஆரவாரத்துடன் கால் பதிக்கிறது. தமிழீழ தேசிய அரசு என்றும் மதச் சார்பற்ற கொள்கையைப் கடைப்பிடிக்கும் ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. தமிழ் தேசிய இனம் எந்த வகையிலும் பிளவுபட்டு நிற்கலாகாது என்ற விடையத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பு மிக அவதானத்துடன் செயட்பட்டு வந்துள்ளது.
“தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மதசார்பற்ற நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கும் அதேவேளை சகல மதங்களையும் சார்ந்த மக்களினதும் அடிப்படை உரிமையான வழிபாட்டுச் சுதந்திரத்திற்கு, எமது இயக்கம் உத்தரவாதமளிக்கும். சகல மதத்தவர்களும் தமது ஆன்மீக அபிலைசைகளைப் பூர்த்தி செய்யவும், மத-கலாசாரப் பண்புகளைப் பேணி வளர்க்கவும் எமது இயக்கம் ஊக்கமளிக்கும்.
தமிழ் இன ஒருமைப்பாட்டையும், தேசிய சுதந்திரத்தையும் இலட்சியமாக வரித்துக் கொண்ட ஒரு விடுதலை இயக்கம், மதசார்பான கொள்கையை கடைபிடிப்பது தவறானதாகும். இந்த குறுகிய மதவாதப்போக்கு தமிழ் இன ஒற்றுமைக்கும் தமிழ்த்தேசிய ஒருமைப்பாட்டிற்கும் பெரும் முட்டுக்கட்டையாக அமையும்.“ – (விடுதலைப் புலிகள் ஆடி – ஆவணி 1992இதழ்)
தமிழீழ நடைமுறையரசு சமய சார்பின்மைக்கு எடுத்துக்கு காட்டாய் விளங்கியது. மதங்கள் சமமாக மதிக்கப்பட்டன. எந்த மதத்திற்கும் முன்னுரிமை கொடுக்கப்படவில்லை. மக்களின் மனங்களிலும் மதநல்லிணக்கம் ஆழப் பதிந்திருந்தது. அங்கு புதுக்குடியிருப்பு சிவன் கோவிலுக்குச் செல்லும் கிறிஸ்தவர்களையும், குழந்தை யேசுவில் குவியும் இந்துக்களையும் காணமுடியும்.
ஆனால் இன்று அந்த நிலைமையை கெடுக்க, தமிழீழ தேசியத்தைச் சிதைக்க இந்தியாவின் இந்துத்துவா ஆசியுடன் களமிறங்குகிறது ஒரு கயவர் கூட்டம். மறவன்புலவு சச்சிதானந்தம் , மட்டக்களப்பு கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் போன்றோர் இன்று இந்து மதவாதம் பேசி தமிழர்களை பிரிக்கும் செயல்களில் ஈடுபாட்டு வருகின்றனர்.
இதன் அண்மைய நிகழ்வுதான் இந்திய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் அவரது குழுவினரின் ஈழவருகை. தமிழீழத்தில் இனவழிப்பு இடம்பெற்றபோது வாய்திறவாது இருந்தவர்கள், இந்துக் கோவில்களில் தஞ்சமடைந்த மக்களை சிறிலங்கா படைகள் கொன்று குவித்தபோது ஏனென்று கேட்காதவர்கள் இன்று முள்ளிவாய்க்காலில் எந்த முகத்தோடு நிற்கிறார்கள். மதவாதத்தை கக்கும் தமிழ் தேசியத்திற்கு என்றும் எதிராக செயற்படும் இந்த கும்பல், இங்கு காலூன்ற முயல்வது பெருத்த சந்தேகத்தை தோற்றுவிக்கிறது.
வீரமும், ஈகமும் விதைக்கப்பட்டிருக்கும் எமது ஈழமண்ணில் இத்தகைய சாதித்துவ, மதவாத செயற்பாடுகள் இடம்பெறுவதை அனுமதிப்பது வெட்கக்கேடானது. இத்தகைய செயற்பாடுகளை முளையிலேயே கிள்ளி எறியவேண்டியது தேசத்தை நேசிக்கும் அனைவரினதும் கடமையாகும். குறிப்பாக எமது இளைய தலைமுறை காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்.
ஒப்பற்ற உயிர் விலைகொடுத்து நாம் இன்று உயர்த்திப் பிடித்திருக்கும் தமிழீழ தேசியம், இந்த அறிவியலுக்கு அப்பாற்பட்ட சாதியத்தாலோ அல்லது மனநிலை பிறழ்வு மதவாதத்தினாலோ சிதைந்து போவதற்கு அனுமதிக்கமாட்டோம் என உறுதிகொள்வோம்.
யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு 38 ஆண்டுகள் நிறைவு நாள் (சனிக்கிழமை) நினைவு கூரப்பட்டது. இந் நினைவு நாள் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் தலைமையில் இடம்பெற்றது.
.
இந் நிகழ்வில் கௌரவ யாழ் மாநகரசபை உறுப்பினர்கள், யாழ் மாநகர ஆணையாளர், யாழ் பொதுநூலக பிரதம நூலகர், நூல்நிலைய உத்தியோகத்தர்கள், வாசகர்கள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
தமிழரின் வரலாற்றுச் சான்றாக, தனிப்பெரும் அடையாளமாக இருந்த யாழ்.நூலகம் 1981ஆம் ஆண்டு ஜூன் முதலாம் திகதி பேரினவாதிகளால் எரியூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது என யாழ் மாநகர முதல்வரின் ஊடகப்பிரிவு அதன் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.