ஓமன் கடலோர பகுதியில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க போர் விமானம் நடத்திய தாக்குதலில் 3 இந்தியமாலுமிகள் உயிரிழந்தனர். இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
ஓமன் கடலோர பகுதியில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க போர் விமானம் நடத்திய தாக்குதலில் 3 இந்தியமாலுமிகள் உயிரிழந்தனர். இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் நிலவும் தற்போதைய சூழ்நிலைகளுக்கு மத்தியில், பிள்ளைகள் சிறுவர் தொழிலாளர்களாக ஈடுபடுத்தப்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கடந்த 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் சிறுவர் உழைப்பு மற்றும் சுரண்டல் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அதற்கமைய சிறுவர் உழைப்பு தொடர்பான முறைப்பாடுகள் – 173, பிள்ளைகளை யாசகம் பெறுவதில் ஈடுபடுத்தியமை – 287, சிறுவர் கடத்தல் தொடர்பான முறைப்பாடுகள் – 53, பாலியல் நடவடிக்கைகளுக்காக பிள்ளைகளை இடைத்தரகர்களாகப் பயன்படுத்தியமை – 03 என முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் வரையறைக்கு இணங்க, 16 வயதுக்கு குறைந்த அனைத்து பிள்ளைகளும் கட்டாயக் கல்விக்கு உட்படுத்தப்பட வேண்டும். அவர்களை எவ்வித வேலைகளிலும் ஈடுபடுத்தக் கூடாது. 16 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகளை அவர்களின் உயிர், ஆரோக்கியம், கல்வி மற்றும் ஒழுக்க வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வேலைகளில் மாத்திரம் ஈடுபடுத்த முடியும். எனினும், அவர்களை ஆபத்தான பணிகளிலோ அல்லது இரவு நேரப் பணிகளிலோ அமர்த்துவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
பிள்ளைகளை வீட்டுப் பணிப்பெண்களாகவோ அல்லது வீட்டு வேலைகளிலோ அமர்த்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். அதேபோல், பிள்ளைகளை பிச்சை எடுக்க வைக்கும் பெற்றோர்கள் மற்றும் இடைத்தரகர்களுக்கு எதிராக தண்டனைச் சட்டக்கோவையின் 288 ஆவது பிரிவின் கீழ் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்க சட்டத்தில் இடமுண்டு.
மேலும், சிறுவர்களை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்துதல், வீதி வியாபாரத்தில் ஈடுபடுத்துதல், சர்க்கஸ் உள்ளிட்ட வினோதக் காட்சிகளில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்தல், போதைப்பொருள் மற்றும் மதுபான விற்பனைக்கு பயன்படுத்துதல், விபச்சாரத்தில் ஈடுபடுத்துதல் மற்றும் சைபர் (இணையம்) தொழில்நுட்பம் ஊடாக வணிக ரீதியாக சுரண்டுதல் ஆகிய அனைத்தும் குற்றவியல் சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனைக்குரிய குற்றங்களாகும். பிள்ளைகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான 71 ஆபத்தான வேலைவாய்ப்புகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளன.
பிள்ளைகள் பாடசாலைகளை விட்டு விலகுவதைத் தடுத்தல் மற்றும் சிறுவர் உழைப்பை ஒழிப்பதற்காக அதிகாரசபை பல விசேட திட்டங்களை ஆரம்பித்துள்ளது. இதன் கீழ், ஜூன் 12 ஆம் திகதி தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பிரதான காரியாலயத்தில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர் தலைவர்களுக்கான விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. அத்துடன், பாடசாலை சிறுவர் பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர் தூதுவர்கள் மூலமாக நாடு தழுவிய ரீதியில் இந்த வருடம் முழுவதும் விழிப்புணர்வுத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம் சம்பந்தமாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளபோதும் அது தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு துஷ்பிரயோகங்கள் தொடர்வதாக சுட்டிக்காட்டி ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசியப் பிரிவின் தலைவர் சாள்லஸ் வைட்லிக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி கடிதம் அனுப்பியுள்ளது.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் ஊடாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனினால் ‘பயங்கரவாதத் தடைச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் தொடர்ச்சியான துஷ்பிரயோகம்’ எனும் தலைப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த சில வருடங்களாக பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் எனப் பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்ட போதிலும், இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மக்களைத் தொடர்ந்து கைது செய்து தடுப்புக் காவலில் வைத்து வருகின்றமை குறித்து உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருவதற்கே இக்கடிதம் எழுதப்படுகிறது.
அத்துடன் இச்சட்டம் நீக்கப்படும் வரை அதனைப் பயன்படுத்துவதில்லை என்ற இடைக்காலத் தடைக்கான உறுதியையும் அரசாங்கம் வழங்கியிருந்தது.
இந்தச் சட்டத்தினால் ஏதோ ஒரு வகையில் தடைசெய்யப்பட்ட ஒரு பாடலைப் பாடினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், 24 வயதுடைய சொல்லிசைப் கலைஞர் கணேஸ்குமார் சங்கீத்சன் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த காலங்களில் நீங்கள் பலமுறை செய்தது போல, இந்த விவகாரத்தை இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லுமாறும், அவர்கள் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றி, இந்த கொடூரமான சட்டத்தை தாமதமின்றி நீக்குமாறு அவர்களிடம் வலியுறுத்துமாறும் நாங்கள் உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்விடயம் தொடர்பாக உங்களது தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சொல்லிசை கலைஞர் கணேசன் சங்கீத்சனின் பிணை மனு மீதான கட்டளை எதிர்வரும் 23 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த பிணை மனு இன்று (11) யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டதாக சங்கீத்சன் சார்பில் மன்றில் முன்னிலையாகிய சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கணேசன் சங்கீத்சனுக்கு பிணை வழங்குமாறு கோரியே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள கட்டளைகள் தொடர்பிலும், சங்கீத்சன் சார்பில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு, நாளை (12) அல்லது, எதிர்வரும் 15 அல்லது 16 ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்படும் என்றும் சங்கீத்சனின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கணேசன் சங்கீத்சன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவரின் விடுதலையை வலியுறுத்தி, வடக்கு, கிழக்கிலும், சர்வதேச நாடுகளிலும் கண்டனங்கள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் முன்வைத்துள்ள தனிநபர் பிரேரணைக்கமைய மாகாணசபைத் தேர்தலை நடத்தலாம் என்று சட்டமா அதிபர் திணைக்களம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் இராசமாணிக்கம் சாணக்கியன் முன்வைத்த தனிநபர் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முரணாக இல்லை.
உள்ளடக்கத்தில் ஒருசில சொற்பிரயோகங்களை திருத்தம் செய்து தேர்தலை நடத்தலாம் என்று சட்டமா அதிபர் திணைக்களம் தேர்தல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழுவுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
குறித்த குழு அண்மையில் பாராளுமன்ற வளாகத்தில் கூடிய போது சட்டமா அதிபர் திணைக்களம் தமது தரப்பு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
இதேவேளை, மாகாணசபைத் தேர்தலை பழைய தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவது குறித்து முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களை ஆராய்ந்து தேர்தல்கள் ஆணைக்குழு அதற்கு ஏதுவான வகையில் மூன்று வழிமுறைகளை முன்வைத்துள்ளது.
வாக்களிப்பின்போது விருப்பு வாக்களித்தல், பெண் பிரதிநிதித்துவத்துக்கு வாக்களித்தல், இளைஞர் பிரதிநிதிதித்துவத்துக்கு வாக்களித்தல் என்ற மூன்று வழிமுறைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த முறைமையை புரிந்துக் கொள்வதற்கு வாக்காளர்களுக்கு கடினமானதாக அமையும் என்று குழுவின் உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் கூட்டங்களில் மேலும் தெளிவுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டம் தொடர்பான விடயங்களில் சர்வதேச நாடுகளின் பரஸ்பர ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வது அவசியம் என தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்பி ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற மத்தியஸ்தம் (குடியியல் மற்றும் வர்த்தக பிணக்குகள்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
எமது நாட்டில் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. 10 – 15 வருடங்கள் கடந்த நிலையில் சில வழக்குகள் இன்னும் தீர்ப்பு வழங்கப்படாமல் உள்ளன. அந்த வகையில் மத்தியஸ்த சபை சட்டம் என்பது மிகவும் அவசியமான ஒன்று.
அனைத்து விடயங்களும் நீதிமன்றத்திற்கு செல்லும் போது வழக்குகள் தேங்குவது என்பது இயல்பான விடயம். அதனால் மத்தியஸ்த சபைகளை நிறுவுதல் அவற்றை ஆரோக்கியமானதாக முன்னெடுத்துச் செல்லுதல் அவசியமாகிறது.
அத்துடன் மத்தியஸ்த சபைகளுக்கு நியமிக்கப்படுபவர்கள் மனிதநேயம் உள்ளவர்களாகவும் நடுநிலை தீர்ப்பாளர்களாக இருக்க வேண்டியதும் அவசியமாகிறது. இந்த பின்னனிலேயே மத்திய சபை சட்டத்தை நாம் சாதகமான ஒன்றாகப் பார்க்கின்றோம்.
வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டு வருவதற்கும் வீண் செலவுகள் வீண் கால விரயங்களை குறைத்துக் கொள்வதற்கும் இந்த மத்தியஸ்த சபை நிறுவுதல் மற்றும் மேம்படுத்தல் என்பது முக்கியமாகின்றது.
சமூகத்தில் காணப்படும் பிரச்சினைகளை சமூகத்தின் பெரியவர்கள் மூலமாக தீர்த்துக் கொள்வது என்பது வரவேற்கத்தக்க விடயமாகும். குற்றவியல் சட்டங்களில் பரஸ்பர ஒத்துழைப்பு என்கின்ற விடயம் உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி பரஸ்பர ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்வது முக்கியமாகிறது.
பல குற்றச் செயல்களில் ஈடுபட்ட பாதாள உலகக் குழு தலைவர்கள் கூட கைது செய்யப்பட்டு வருகிறார்கள் என்ற அடிப்படையில் குற்றவியல் சட்டங்கள் தொடர்பான விடயங்களில் சர்வதேசரீதியான பரஸ்பர ஒத்துழைப்பு இருப்பது சிறந்தது.
மேலும் நீண்ட காலமாக நமது நாட்டை போதைப் பொருட்களின் ராஜ்ஜியமாக அல்லது போதைப் பொருட்களின் களஞ்சியமாக மாற்றிக் கொண்டிருப்பவர்கள் கைது செய்யப்படாமல் அதற்குப் பணியாற்றும் சிறியவர்கள் மட்டுமே கைது செய்யப்படுவதால் அந்த ராஜ்யத்தை எம்மால் கட்டுப்படுத்த முடியாது போகும்.
அதனால் குற்றவியல் சட்டம் தொடர்பான விடயங்களில் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதன் மூலம் சமூகத்தை சீரழிக்கின்ற போதைப் பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்த முடியும். பல நாடுகளிலிருந்து பல முக்கிய போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான தலைவர்கள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை நாம் வரவேற்கின்றோம் என்றார்
இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகு மூலம் ஊடுருவி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதற்கு தயாராகும் இந்திய மீனவர்களின் வருகையை தடுப்பதுடன், இலங்கை கடல் வளங்களை பாதுகாத்து தருமாறு இலங்கை அரசாங்கத்திடம் வடமாகாண கடற்றொழிலாளர்களின் இணையம் அவசர வேண்டுகோளினை முன்வைத்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் அனுப்பி வைத்துள்ளது.குறித்த விடயம் தொடர்பாக தெளிவு படுத்தும் ஊடக சந்திப்பு இன்று (11) வியாழக்கிழமை காலை மன்னாரில் நடைபெற்றது.
இதன்போது வடமாகாண கடற்றொழிலாளர் களின் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜூன் 15ஆம் திகதி எதிர்பார்க்கப்படும் இலங்கை எல்லை கடற்பரப்பில் தமிழ்நாட்டின் இழுவைப் படகுகளால் மீண்டும் தொடங்க படவிருக்கும் எல்லை தாண்டிய மீன்பிடி நடவடிக்கைகள் குறித்து ஆழ்ந்த மற்றும் அவசரமான கவலையை வெளிப்படுத்துகிறோம்.
பல ஆண்டுகளாக, குறிப்பாக சட்டவிரோத அடிமட்ட இழுவை மீன்பிடி முறைகள் சம்பந்தப்பட்ட இத்தகைய அழிவுகரமான ஊடுருவல்கள், இலங்கையின் கடல் சூழல் அமைப்புகளுக்கு கடுமையான மற்றும் சரி செய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவை முக்கியமான கடல் உணவு இருப்புகளை குறைத்ததோடு குறிப்பாக வடக்கு மற்றும் வடமேற்கு கடலோரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வடக்கு மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
மேலும் சரி செய்ய முடியாத சேதம் ஏற்படுவதற்கு முன்னர், இந்த சட்டவிரோத ஊடுருவல் களை தடுத்து நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்ட கடல் வளங்களை பாதுகாக்க ஜனாதிபதி கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சு, இலங்கை கடற்படை மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து அரசாங்க அதிகாரிகளும் உடனடி தீர்க்கமான மற்றும் அமல் படுத்தக்கூடிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இலங்கை வட மாகாண மீனவ சமூகம் மரியாதையுடனும் உரியது உறுதியுடனும் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த அழிவுகரமான மீன்பிடி முறைகள் எளிதில் பாதிப்படைய கூடிய கடலடி தளங்களையும் கடல் வாழ்விடங்களும் சேதப் படுத்துவதோடு மட்டுமல்லாமல் இலங்கையின் மீன்பிடித் தொழிலின் நிலைத்தன்மையும் அடிப்படையாக சீர்குலைக்கின்றன.
மேலும் உலகச் சந்தைகளுக்கு தரமான கடல் உணவு வழங்கும் நாட்டின் திறனையும் நேரடியாக பாதிக்கின்றன. அதே நேரத்தில் இலங்கை கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் தற்போதுள்ள அமெரிக்க தீர்வைகள் மற்றும் பிரிவு 301 நடவடிக்கைகளின் கீழ் கூடுதலாக 12.5% தீர்வை விதிக்க ப்படும் அச்சுறுத்தல் உள்ளிட்ட சர்வதேச சந்தைகளில் அதிகரித்து வரும் அழுத்தங்களையும் தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள், அதிகரித்து வரும் செயல்பாட்டு செலவுகள் மற்றும் தீவிரமடைந்து வரும் வர்த்தக தடைகள் ஆகியவற்றின் கூட்டு விளைவானது இலட்சக்கணக்கானோர் வாழ்வாதாரங்களுக்கு ஆதரவளித்து இலங்கை பொருளாதாரத்திற்கு இன்றியமையாத அந்நிய செலாவணி வருவாய் ஈட்டித் தரும் ஒரு தொழில் மீது மிகப்பெரிய மற்றும் தாங்க முடியாத அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
இதனை மிக உயர்ந்த தேசிய முன்னுரிமையாக கருதி இலங்கையின் கடல் எல்லைகளை பாதுகாக்க சட்டத்தின் முழு பலத்துடன் செயல்படுமாறு அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக, நிலையான மீன்பிடி மேலாண்மை, பொறுப்பான அறுவடை நடைமுறைகள் மற்றும் இலங்கையின் கடல் சூழலின் நீண்ட கால பாதுகாப்பு ஆகியவற்றை ஆதரிப்பதில் வடக்கு மீனவராகிய நாம் முழுமையாக உறுதி பூண்டுள்ளோம். என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல்-நினோ காலநிலை நிலைமையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் அதனை எதிர்கொள்வதற்காக நிறுவனங்கள் கொண்டுள்ள திட்டங்கள் குறித்து ஆராயும் கலந்துரையாடலொன்று, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
வளிமண்டலவியல் திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகார சபை, மகாவலி அதிகார சபை, அனர்த்த முகாமைத்துவ நிலையம், மின்சார உற்பத்தி லங்கா தனியார் நிறுவனம் மற்றும் தேசிய கட்டமைப்பு செயற்பாட்டு தனியார் நிறுவனம் உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல்-நினோ நிலைமையானது நாட்டின் உணவுப் பாதுகாப்பு, குடிநீர் மற்றும் வலுசக்தி ஆகிய துறைகளில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் மற்றும் அந்தத் துறைகளை முகாமைத்துவம் செய்வதற்காக எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
இதன்கீழ், தற்போதுள்ள நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவினை விவசாயம், குடிநீர் மற்றும் வலுசக்தி துறையில் ஏற்படக்கூடிய அழுத்தங்களை முகாமைத்துவம் செய்யும் வகையில் பயன்படுத்துவது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
இந்த முறை ஏற்படும் எல்-நினோ நிலைமையானது 2016-2017 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட நிலைமைக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கக்கூடும் என இங்கு சுட்டிக்காட்டிய அதிகாரிகள், அதற்கேற்ப விசேடமாக நீர் முகாமைத்துவத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இதன்கீழ், 2026 ஆம் ஆண்டின் சிறுபோக விவசாய நடவடிக்கைகளை சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்னதாகவே ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
ஏற்படக்கூடிய சூழ்நிலைக்கு மத்தியில் எதிர்வரும் சில மாதங்களில் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்தல், விவசாய நடவடிக்கைகள் மற்றும் உணவுப் பாதுகாப்பைப் பேணுதல் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதோடு மின் உற்பத்தி மற்றும் எதிர்வரும் சிறுபோகத்திற்குத் தேவையான நீரை வழங்குதல், குடிநீர் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றுக்கான தேவையான திட்டங்களைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
‘டித்வா’ சூறாவளி மற்றும் மத்திய கிழக்கு யுத்த சூழ்நிலைக்கு மத்தியில் ஏற்பட்ட சவால்களை எதிர்கொண்டதைப் போன்றே, வெளிப்புற சவாலான இந்த உலகளாவிய நிலைமையையும் முகாமைத்துவம் செய்ய முடியும் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, முறையான திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் மூலம் ஏற்படக்கூடிய எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள முடியும் என நம்பிக்கை வெளியிட்டார்.